Wednesday, August 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற இளவரன்

 கம்ப இராமாயணம்  - இராமன் என்ற இளவரன் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/08/blog-post_21.html


இராமனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலில் அவன் எப்படி இருந்தான் என்று கம்பன் வாயிலாக பார்க்க இருக்கிறோம். 


ஏனோ தெரியவில்லை, கம்பன் இராமனின் குழந்தைப் பருவத்தை பற்றி பாடமலேயே விட்டுவிட்டான். அல்லது அவன் பாடி அந்த ஏடுகள் நமக்குக் கிடைக்கவில்லையோ என்னவோ. அந்தக் குறை தீர ஆழ்வார்கள் இராமனின் குழந்தைப் பருவத்தை பிரபந்தத்தில் பாடி அனுபவித்து இருக்கிறார்கள். 


கம்பன் காட்டும் இளவரசனான இராமனைப் பார்ப்போம். 


சக்ரவர்த்தித் திருமகன். செல்வத்துக்கு ஒரு குறைவில்லை. அதிகாரம், ஒரு பொருட்டே இல்லை. பட்டத்து இளவரசன் என்றால் ஏறக் குறைய அவன் அரசன்தான். 


மற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எப்படி இருக்கும்? அவர்கள் தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வண்டி ஓட்டுபவர், வீட்டு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடத்துவார்கள் என்று நாம் அறிவோம். 


ஆனால் இராமன் எப்படி இருக்கிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


அவ்வளவு பணிவு, அவ்வளவு அன்பு, கரிசனம், மக்கள் மேல் அவ்வளவு வாஞ்சை. 


வசிட்டர் குருகுலத்தில் இருந்து மாலை இராமனும் அவன் சகோதர்களும் அரண்மனை திரும்புகிறார்கள். வருகிற வழியெல்லாம் மக்கள் இராமனைக் காண ஆவலோடு காத்து இருக்கிறார்கள். 


இன்றைய அரசியல் தலைவர்கள் போல் கையை ஆட்டிவிட்டு போகவில்லை. 


அவர்களை நெருங்கி விசாரிக்கிறான். 


அதுவும் மிகுந்த கருணையோடு, மலர்ந்த முகத்தோடு கேட்கிறான் ?


"நான் உங்களுக்கு எதாவது செய்யணுமா? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டி இருக்கிறதா?  உங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையே?  வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? பிள்ளைகள் எல்லாம் ஆரோக்கியமா இருக்காங்களா?"



பாடல் 


 எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்

முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா

‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?

மதிதரு குமரரும் வலியர் கொல்? ‘எனவே.


பொருள் 


எதிர் வரும்  = எதிரில் வரும் 


அவர்களை  = அந்த மக்களை 


எமை உடை இறைவன் = எங்களை ஆட்கொள்ளும் இறைவனான இராமன் 


முதிர் = மிகுந்த 


தரு கருணையின் = அள்ளித்தரும் கருணையோடு 


முகமலர் = முகம் என்ற மலர் 


ஒளிரா = ஒளி விடும்படி (முகம் மலர்ந்து) 


‘எது வினை?  = ஏதாவது செய்யணுமா?  


இடர் இலை? = உங்களுக்கு துன்பம் ஒன்றும் இல்லையே? 


இனிது நும் மனையும்? = வீட்டில் உங்கள் மனைவி இனிதாக இருக்கிறாளா ?


மதிதரு குமரரும்  = அறிவுள்ள பிள்ளைகளும் 


வலியர் கொல்? = உடல்நலக் குறை ஒன்றும் இல்லாமல் ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கிறார்களா 


எனவே = என்று வினவினான் 


இதெல்லாம் அவன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பேசாமல் தேரில் ஏறி நேரே அரண்மனைக்குப் போய் இருக்கலாம். 


அதை விடுத்து, மக்கள் மேல் உள்ள அன்பினால், அவர்களை அணுகி அவர்களை நலம் விசாரிக்கிறான். 


பெண்டாட்டி, பிள்ளைகள் நலமா?  சந்தோஷமா இருக்கீங்களா?  ஏதாவது உங்களுக்கு நான் செய்யணுமா? என்று. 


"எமை ஆளும் இறை" என்று கம்பன் ஆரம்பிக்கிறான். 


இறைவன் இறங்கி மனித உருவில் வந்து  மக்கள் குறை கேட்டதாக காட்டுகிறான். 


இப்படி ஒரு தலைவன், அரசன் கிடைக்கமாட்டானா என்று மக்கள் ஏங்கும்படி கம்பன் இராமனைக் காட்டுகிறான். 


சின்ன வயதில் வந்த முதிர்ச்சி. 


கம்பன் காட்டும் இளவல். 



No comments:

Post a Comment