Thursday, August 29, 2024

நீதி நெறி விளக்கம் - கல்வியின் சுகம்

 நீதி நெறி விளக்கம் - கல்வியின் சுகம் 


காதலியின் விரல் படும் போது, முதன் முதலாக முத்தம் பெற்ற போது, காதலியை, மனைவியை கட்டி அணைக்கும் போது பிறக்கும் சுகத்தை விட கல்வியில் பிறக்கும் சுகம் பெரிது என்கிறது நீதி நெறி விளக்கம். 


ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது ஆணுக்கு , பெண் தரும் சுகமும், பெண்ணுக்கு, ஆண் தரும் சுகமும் என்பார் வள்ளுவர். நீதி நெறி விளக்கம் அதை விட ஒரு படி மேலே போய், காமத்தில் கிடைக்கும் சுகத்தை விட கல்வியில் கிடைக்கும் சுகம் பெரிது என்கிறது. 


பாடல் 


தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்

மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்

முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்

பின் பயக்கும் பீழை பெரிது


பொருள் 


தொடங்கும்கால் துன்பமாய் = அகல்வி கற்கத் தொடங்கும் போது கடினமாய் இருக்கும்.  


இன்பம் பயக்கும் = பின் இன்பம் பயக்கும் 

மடம் கொன்று = மடமையை கொன்று. அதாவது அறியாமையை அழித்து 


அறிவு அகற்றும் = அறிவை அகலமாகச் செய்யும் 


கல்வி = கல்வியானது 


நெடுங்காமம் = பெரிய காமம் 


முன் பயக்கும் = முதலில் தரும் 


சில நீர இன்பத்தின் = சிறிது நேர இன்பத்தில் 


முற்றிழாய் = பெண்ணை 


பின் பயக்கும் பீழை பெரிது = பின்னால் விளையும் தீமை பெரியது 


காமம், முதலில் மிக இன்பமாக இருக்கும். ஆனால். பின்னாளில் பெரிய துன்பம் தரும். கல்வியோ, தொடங்கும் போது கடினமாய், துன்பம் தருவதாய் இருக்கும். ஆனால், போகப் போக அது பெரிய இன்பத்தைத் தரும். 


எனவே காமம் தரும் இன்பத்தை விட கல்வி தரும் இன்பமே சிறந்தது என்கிறார். 


என் அனுபவத்தில், மேலும் சில விவரங்களைச் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 


காமத்துக்கு ஒரு கால எல்லை உண்டு. எத்தனை வயது வரை காமத்தை அனுபவிக்க முடியும்?  கல்விக்கு கால எல்லையே கிடையாது. 


காமத்துக்கு இன்னொருவர் வேண்டும். அந்த இன்னொருவருக்கு சரியான மன நிலை வேண்டும். கல்விக்கு அதெல்லாம் தேவை இல்லை. 


காமம், ஒரு கட்டத்தில் சலிப்பைத் தரும். கல்வி ஒரு நாளும் சலிக்காது. ஒவ்வொரு நாளும் புதுப் புது விடயங்கள் வந்து கொண்டே இருக்கும். 


காமத்தின் சுவையை ஒருவரோடும் மட்டும் தான் பகிர்ந்து கொள்ள முடியும். கல்வியின் சுகத்தை எத்தனை பேரோடு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடியும். 


காமம், ஒரு எல்லை வரை போகும் . அதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?  கல்விக்கு கரையே இல்லை. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். 


காமத்தினால் வரும் இன்பம், அதை அனுபவிக்கும் ஒருவரோடு முடிந்து விடுகிறது. ஒருவன் சிறந்த கல்விமானாக இருந்தால், அவனால் உலகமே இன்பம் அடையும். 


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 




No comments:

Post a Comment