Thursday, July 11, 2019

கம்ப இராமாயணம் - மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?

கம்ப இராமாயணம்  -  மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் வெட்டுப்பட்ட சூர்ப்பனகை வலியில் தன் அண்ணனான இராவணனை அழைக்கிறாள்.

"இராவணா, நீ தேவர்களையெல்லாம் வென்று அவர்களை அடிமைப் படுத்தி வேலை வாங்கினாய். அப்படிப்பட்ட நீ, இந்த மானிடர்களுக்கு முன் வலிமையை காட்டாமல் மாற்றி வைத்து விட்டாயா? இதற்காகவா உன் கையில் சிவன் தந்த வாள் இருக்கிறது?"

என்று அழுது புலம்புகிறாள்.

பாடல்


காற்றினையும், புனலினையும்,
    கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும்,
    கோளினையும், பணி கோடற்கு
ஆற்றினை நீ, ஈண்டு இருவர்
    மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ? உன் வலத்தைச்
    சிவன் தடக்கை வாள் கொண்டாய்!

பொருள்


காற்றினையும் = வாயு பகவானையும்

புனலினையும் = வருண பகவானையும்

கனலினையும் = அக்கினி பகவானையும்

கடுங் காலக் கூற்றினையும் = எமனையும் (கூற்றுவன் , உடலையும், உயிரையும் கூறு போட்டு பிரிப்பவன்)

விண்ணினையும் = ஆகாயத்தையும்

கோளினையும் = நவ கோள்களையும்

பணி  = வேலை

கோடற்கு = செய்வதற்கு

ஆற்றினை நீ = செய்செய்வித்தாய் நீ

ஈண்டு = இன்று

இருவர் = இருவர்

மானுடவர்க்கு = மானிடற்கு

ஆற்றாது = போருக்க முடியாமல்

மாற்றினையோ? = மாற்றி வைத்து விட்டாயா ? (எதை மாற்றி வைத்து விட்டான்)

உன் வலத்தைச் = உன் வலக்கையில்

சிவன் = சிவன்

தடக்கை = பெரிய கை, பெருமை வாய்ந்த கை

வாள் கொண்டாய்! = வாள் கொண்டாய் (வாளை மறைத்து வைத்து விட்டாயா என்று கேட்கிறாள்)

இந்தப் பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதைத் தெரிந்து நமக்கு என்ன  பலன்.  இதைப் போய் வேலை மெனக்கெட்டு எதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்?

 நாம், நாம் இருக்கும் இடத்தில் இருந்து மற்றவற்றை எடை போடுகிறோம். மற்றவர்களை , நம் கோணத்திலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

என்னுடைய நிலை தாழ்வாக இருந்தால், என் உயரத்துக்கு எது தெரியுமோ, அதுதான்  உண்மை என்று நாம் நினைக்கிறோம்.

அது மட்டும் அல்ல, அதற்கு மேலாக எதுவும் இருந்தால், அவற்றை என்னுடைய  அளவுக்கு கீழே இரக்க முயற்சி செய்வேன். என்னை விட, என் அறிவின்  வீச்சை விட பெரியது என்ன இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நான், இவற்றை நேரில் கண்டிருக்கிறேன்.

"தீயவர்களோடு சேராதே" என்று திருக்குறள் சொல்கிறது என்று சொன்னால், "அப்படி என்றால் அந்த தீயவர்களை எப்படித்தான் திருத்துவது? நாம் அவர்களோடு  சேர்ந்து பழகி அவர்களை திருத்த வேண்டாமா" என்று கேட்பவர்களை  நான் பார்த்து இருக்கிறேன்.

அதாவது, திருக்குறள் என்ன பெரிய புத்தகமா? நான் அதை விட பெரிய ஆள் என்று  அவர்களுக்கு நினைப்பு.

சூர்ப்பனகை நினைக்கிறாள் இராம இலக்குவனர்களை மானிடர்கள் என்று. அவள்  அறிவுக்கு எட்டியது அவ்வளவு தூரம் தான்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கெட்டான், துரியோதனன் என்ற மடையன்.

முருகனை சிறு பாலகன் என்று சொல்லிக் கெட்டான் சூரபத்மன் என்ற  மூடன்.

இராமனை மானிடன் என்று சொல்லிக் கெட்டான் இராவணனும் (இங்கு சூர்பனகையும்).

சில விடயங்கள் நம் அறிவுக்கு அப்பால் இருக்கின்றன. அவற்றை அறிவு கொண்டு  சிந்தித்து அறிந்து விட முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க"

என்பார் மணிவாசகர்.

நம் அறிவு அங்கே போகாது. அறிவினால் அதை அறிய முடியாது.

அன்பினால் அறியலாம். அருளினால் அறியலாம்.

இராமனை தூரத்தில் கண்ட போதே அனுமன் சொல்கிறான்

"இவர்கள் மேல் உள்ள அன்பினால் என் எலும்பு உருகுகிறது" என்று.

குகனுக்கு, அனுமனுக்கு, வீடணனுக்கு, பரம் பொருளாக தெரிந்த இராமன்  சூர்பனகைக்கு  மானிடர்களாகத் தெரிகிறான்.

அவரவர் உயரம்.

உயர்ந்த நூல்களை,  உயர்ந்த விடயங்களை, அறிவில் பெரியவர்கள் சொல்லியதை கேட்கும் போது , நாம் நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டுமே அல்லாது அவற்றை நம் உயரத்துக்கு கீழே  கொண்டு வர  முயற்சி செய்யக் கூடாது.

செய்கிறார்கள். அரக்கர்கள்.

கம்ப இராமாயணத்தை, வைணவ நூல் என்று ஒதுக்கி வைத்த ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது என்று கூறிய ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் பால் உணர்ச்சியை தூண்டும் நூல் என்று கூறிய ஆட்களும் உண்டு.

அவரவர் உயரம்.

மேலிருந்து ஒருவன் நம்மை கை தூக்கி விட முயற்சி செய்தால், மேலே செல்ல முயல வேண்டுமே அல்லாமல் அவனை  நாம் இருக்கும் இடத்துக்கு கீழே இழுத்து  விட முயலக் கூடாது.


நல்ல விடயங்களை உள் வாங்கிக் கொள்ளுங்கள். மருந்து குடிக்க அடம் பிடிக்கும் குழந்தை  போல் அடம் பிடிக்காதீர்கள்.

மருந்து கசக்கும் என்று தெரிந்துதான், அதன் மேல் சர்க்கரை தடவி தருவார்கள்.

கடினமான செய்திகளை இராமனின் வாழ்க்கைக்  கதை என்ற சர்க்கரை தடவித் தருகிறார்  கம்பர்.

சர்க்கரை அல்ல முக்கியம். மருந்து தான் முக்கியம்.

நாளும் நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு இது போன்ற காப்பியங்கள் நமக்கு உதவி செய்யும்.

நேற்றை விட இன்று ஒரு படி மேலே.

இன்றை விட நாளை ஒரு படி மேலே என்று முன்னேறுவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_11.html

1 comment:

  1. மேலெழுந்த வாரியாக படித்தால் புலப்படாத உண்மை உங்கள் அறிவு செறிந்த பதிவினால் தெரிய முடிகிறது.இவ்வளவு இருக்கா என்கிற பிரமிப்பும் உண்டாகிறது.நான் எவ்வளவு கீழே உள்ளேன் எனவும் தெரிகிறது

    ReplyDelete