Wednesday, July 10, 2019

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !


குமரகுருபரர் பாடியது சகலகலாவல்லி மாலை. சரஸ்வதியின் மேல் பாடியது.


அது போல

காசி இராஜா சபையில் குமரகுருபரர் இந்த பாடல்களை பாடினார். அந்த மன்னன், தமிழ் தெரியாதவன். ஆனால், அவனுக்கு  புரிந்தது. குமரகுருபரருக்கு நிறைய பொருளை பரிசாக அளித்தான். அவற்றைக் கொண்டு அவர், காசியில் மடம் காட்டினார். இன்றும் இருக்கிறது. போனால், தங்கிக் கொள்ளலாம்.

தமிழ் தெரியாத மன்னருக்கு எப்படி இது புரிந்தது ?

காதலர்கள், ஒருவரோடு ஒருவர் பார்வையாலேயே பேசிக் கொள்வதில்லையா.

தமிழ் தெரியாத மன்னனனுக்கே புரிந்தது. நமக்குப்  புரியாதா?

பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே

என்ன புரிகிறதா ?

என்னத்த புரிய? முதல்ல சரியா வாசிக்கவே முடியல. அப்புறம் அல்லவா புரிவதை பற்றி  யோசிக்க.

சீர் பிரிப்போம். சீர் பிரித்தால் புரியும்

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க  என்  வெள்ளை உள்ளத்து 
தண் தாமரைக்கு தகாது கொலோ சகம் ஏழும் அளித்து 
உண்டான் உறங்க  ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலாவல்லியே


இப்ப புரிஞ்சிருக்குமே?

குமர குருபரர் சொல்கிறார்

"ஏதாவது வேண்டும் என்றால் எந்தக் கடவுளை நாடுவது?  இந்த உலகை எல்லாம் படைத்து , அதை உண்டவன் திருமால். அவன் கிட்ட போகலாம் என்றான்  அவன் ஒரு பக்கம் படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறான். தூங்குமூஞ்சி.

சரி, திருமால் வேண்டாம், சிவனிடம் போகலாம் என்றால், அவனோ பித்து பிடித்து சுடுகாட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். பித்தன்.

சரி, திருமாலும் வேண்டாம், பிரம்மனும் வேண்டாம்,  பிரம்மனிடம் போகலாம் என்றால், அவன் உன் அழகில் இலயித்து இருக்கிறான்.

இவர்களை நம்பி ஒரு பலனும் இல்லை. எனவே, தாயே, உன்னிடம் வந்து விட்டோம். என் மனதில் வந்து இருப்பாய் "

என்று வேண்டுகிறார்.

பொருள்

வெண் தாமரைக்கு = வெண்மையான தாமரைக்கு

அன்றி = அல்லாது

நின் = உன்னுடைய

பதம் = பாதங்களை

தாங்க = தாங்கிக் கொள்ள

 என்  வெள்ளை உள்ளத்து  = என் வெள்ளை உள்ளத்து

தண் = குளிர்ந்த

தாமரைக்கு  = தாமரைக்கு

தகாது கொலோ = பொருத்தம் இல்லையா ?

சகம் ஏழும் அளித்து  = ஏழு உலகையும் படைத்து

உண்டான் = உண்டு (உமிழ்ந்தவன்)

உறங்க = உறங்கிக் கொண்டு இருக்க

 ஒழித்தான் = அழிக்கும் கடவுளான சிவன்

 பித்தாக = பித்து பிடித்து அலைய

உண்டாக்கும் வண்ணம் = படைக்கும் கடவுளான பிரம்மன்

கண்டான் = உன்னைக் கண்டான். எப்படி தெரியுமா ?

சுவை கொள் கரும்பே = சுவை நிறைந்த கரும்பைப் போல

சகல கலாவல்லியே = அனைத்து கலைகளிலும் வல்லவளே


சிவனை பித்தன் என்று சொல்லியதற்கு யாரும் கோபிக்கக் கூடாது.

சுந்தரர் சொன்னது அது.

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?


சரஸ்வதி - வெண் தாமரையில் இருக்கிறாள்.

இலக்குமி - சிவந்த தாமரையில் இருக்கிறாள்.

என்ன காரணமாக இருக்கும்?

முதலில், ஏன் தாமரை ? பின் ஏன் அந்த நிறம் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_9.html

1 comment: