Monday, July 22, 2019

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை 


நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்?

அதை சாதித்தவர்களை கண்டு, அவர்களிடம் அறிவுரை பெறுவோம். அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் , எப்படி செய்கிறார்கள் என்று அறிந்து கொண்டு அது போல செய்ய முயற்சி செய்வோம்.

நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருக்கிறது. இந்த கடவுள், வேதம், சுவர்க்கம், நரகம், என்றெல்லாம் பல விஷயங்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.

யாரிடமாவது போய் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வருகிறது

பட்டர் சொல்கிறார் ....

"நான் அறிந்து கொண்டேன். எதைத் தெரியுமா ? யாருமே அறிந்திராத மறைப் பொருளை. அறிந்த பின் என்ன செய்தேன் தெரியுமா ? அபிராமி உனது திருவடிகளை பற்றிக் கொண்டேன். அது மட்டும் அல்ல பயம் கொண்டு பிரிந்தேன். யாரைப் பிரிந்தேன் தெரியுமா ? உன்னுடைய அன்பர்களின் பெருமையை அறியாத, நரகத்தில் விழ இருக்கும் மனிதர்களை"

பாடல்


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.


பொருள்

அறிந்தேன், = அறிந்து கொண்டேன். துணிவாகச் சொல்கிறார். எனக்குத் தெரியும். நான் அறிவேன் என்கிறார்.

எவரும் = வேறு யாரும்

அறியா மறையை = அறியாத மறை பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு

செறிந்தேன் = நெருங்கினேன்

நினது திருவடிக்கே = உனது திருவடிகளுக்கே

திருவே. = சிறந்தவளே

வெருவிப் = பயந்து

பிறிந்தேன் =  பிறிந்தேன்

நின் = உன்

அன்பர் = அன்பர்கள்

பெருமை எண்ணாத  = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = கர்மம் செய்யும் நெஞ்சால்

மறிந்தே = தலைகீழாக

 விழும் = விழும்

நரகுக்கு  = நரகத்துக்கு

உறவாய = உறவான

மனிதரையே. = மனிதர்களையே


தீயவர்களைக் கண்டால் பயந்து ஓடி விட வேண்டும் என்கிறார்.

படித்தவர்தான், அறிவாளிதான், அம்பாளின் அருள் பெற்றவர்தான், இருந்தும், தீயவர்களைக் கண்டால் "வெருவிப் பிறிந்தேன்" என்கிறார்.

பயந்து விலகி விட வேண்டும்.

தீயவர்கள் என்றால் ஏதோ, பெரிய கடா மீசை வைத்துக் கொண்டு, கன்னத்தில் ஒரு வெட்டுத் தழும்போடு, கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது.

நேரத்தை வீணே செலவழிப்பவர்கள், பொய் பேசி திரிபவர்கள், கோபம், காமம், ஆணவம் , பொறாமை போன்ற தீய குணங்கள் கொண்டவர்கள், வெட்டி அரட்டை பேசுபவர்கள் , ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் எல்லோருமே தீயவர்கள்தான்.

நல்லவர்களோடு சேர்ந்தேன்

தீயவர்களை விட்டு விலகினேன் என்கிறார்.

நல்லவர்களைத் தேடி கண்டு பிடித்து அவர்களோடு சேர்வது என்பது கடினமான காரியமாக  இருக்கலாம்.

தீயவர்களை விட்டு விலகி விடுவது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லையே?

பட்டியல் போடுங்கள். உங்கள் வட்டத்தில் உள்ள தீயவர்களை. களை எடுங்கள்.




https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_31.html

No comments:

Post a Comment