Monday, July 1, 2019

விவேக சிந்தாமணி - நற்போதம் வாராது

விவேக சிந்தாமணி - நற்போதம் வாராது 


நான் நிறைய பேரை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்...நிறைய படிக்க வேண்டும் என்று ஆவல் இருக்கும், சிரத்தையாக படிப்பார்கள், படிக்க முடியாவிட்டால் கூட படித்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். அடடா என்ன உயரிய கருத்துகள் என்று உணர்ந்து உண்மையாகவே பாராட்டுவார்கள்.

ஆனால், அதை கடை பிடிப்பார்களா என்றால், மாட்டார்கள். கேட்டால், அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது, வறட்டு வேதாந்தம் என்று ஏதாவது சொல்லிவிட்டு படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோ, அப்படியே இருப்பார்கள்.

உடம்பில் ஒரு நோய் வந்து விட்டது என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். அவரும் நோய் இன்னது என்று அறிந்து கொண்டு மருந்து எழுதித் தருகிறார். காசு கொடுத்து கடையில் போய் வாங்கி வருகிறோம்.

வந்தபின், அந்த மருந்தை உண்பது கிடையாது. கேட்டால் அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று சொல்லி விடுவது.

எனக்கு இது புரிந்ததே இல்லை.

உண்ணப் போவது இல்லை என்றால், எதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும், காசு போட்டு மருந்தை வாங்க வேண்டும்? நேரமும் பணமும் மிச்சப் படுத்தலாமே...ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன்.

விவேக சிந்தாமணியில் இதற்கு விடை கிடைத்தது.

ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.

"நல்ல விளை நிலத்தில் நறுமணம் வீசும் கற்பூரத்தில் பாத்தி கட்டி, கஸ்தூரி மானின் இடம் இருந்து வரும் மணம் மிக்க எருவைப் போட்டு, மணம் வீசும் நல்ல நீரை பாய்ச்சினால், வெங்காயச் செடியில் இருந்து வெங்காய வாடைதான் வரும். அதில் இருந்து கற்பூர வாசமோ, கஸ்தூரி புனுகின் வாசமோ வராது. அது போல சிலர். அவர்களுக்கு என்னதான் நல்லது சொன்னாலும், எவ்வளவுதான் நல்லதை அவர்கள் படித்தாலும், அவர்களுடைய இயல்பான குணம் மாறாது."

பாடல்


”கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”


பொருள்


”கற்பூர பாத்தி கட்டி = கற்பூரத்தில் பாத்தி கட்டி

கஸ்தூரி எருப் போட்டுக் = கஸ்தூரி மானின் எருவைப் போட்டு

கமழ் நீர் பாய்ச்சி =  வாசம் தரும் பன்னீர் போன்ற நீரைப் பாய்ச்சி

பொற்பூர = அழகாக

உள்ளியினை  = வெங்காயத்தை

விதைத்தாலும் = விதைத்தாலும்

அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும் = அதன் குணத்தை அது பொருந்தும்படி காட்டும்

சொற்போதையர்க்கு  = சொல்லில் தடுமாற்றம் உள்ளவர்களுக்கு (புத்தி இல்லாதவர்களுக்கு)

அறிவு = அறிவு

இங்கு = இங்கு

இனிதாக வருமெனவே = இனிமையாக வரும் என்று

சொல்லினாலும் = நினைத்து என்ன சொன்னாலும்

நற்போதம் வாராது = நல்ல புத்தி வராது

அங்கு  = அங்கு

அவர் குணமே மேலாக நடக்கும் தானே” = அவர்களின் இயற்கை குணமே மேலோங்கி நிற்கும்

நடு கடலுக்குப் போனாலும், நாய்க்கு நக்கு தண்ணிதான் என்று சொல்லுவார்கள்.

குணத்தை மாற்றாமல் படித்து ஒரு புண்ணியமும் இல்லை.

நேர மற்றும் பண விரயம் தான் ஆகும்.

படித்த பின், சிந்தியுங்கள்.  படித்தது ஏதாவது விளைவை உங்களில் ஏற்படுத்தியதா என்று.

இல்லை என்றால், படிப்பதை நிறுத்துவது நலம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_1.html

No comments:

Post a Comment