Friday, January 12, 2024

பழமொழி - பக்கத்து வீட்டு சமையல்

 பழமொழி - பக்கத்து வீட்டு சமையல் 


பக்கத்து வீட்டில் நல்ல நெய் விட்டு ஏதோ பலகாரம் செய்கிறார்கள். மணம் நம் மூக்கைத் துளைக்கிறது. அல்லது பக்கத்து வீட்டில் கருவாடு போன்ற அசைவ உணவு சமைக்கிறார்கள். அதன் வாசம் நம் மூக்கை தாக்கும் அல்லவா? அங்கே போய் பார்க்க வேண்டாம், என்ன நடக்கிறது என்பதை பார்க்காமலேயே நாம் அறிந்து கொள்ள முடியும். 


அது போல ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அறிய அவன் கூடவே இருந்து, அவன் செய்யும் செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் யாருடன் கூட்டாக இருக்கிறான் என்று பார்த்தாலே போதும். 


தெருவோர டீ கடையில், புகை பிடித்துக் கொண்டு, போகும் வரும் பெண்களை கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கும் கூட்டத்தில் இருப்பவனை பற்றி நாம் என்ன நினைப்போம்?


இன்னொருவன் பலருடன் சேர்ந்து ஒரு சமய சொற்பொழிவோ, ஆன்மீக சொற்பொழிவோ கேட்கிறான் என்றால், அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? 


பாடல் 


முயலவோ வேண்டா முனிவரை யானும்

இயல்பினர் என்ப தினத்தால் அறிக

கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா

அயலறியா அட்டூணோ இல்.


பொருள் 


முயலவோ வேண்டா = பெரிய முயற்சி எல்லாம் வேண்டாம் 


முனிவரை யானும் = முனிவர் ஆயினும் 


இயல்பினர் என்ப = அவர்கள் என்ன இயல்பினர் என்பதை 


தினத்தால் அறிக = இனத்தால் அறிக = அவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தால் அறிந்து கொள்க 

 

கயலியலும் = மீனை போன்ற 


கண்ணாய் = கண்களை உடையவளே 


கரியரோ வேண்டா = கரி என்றால் சாட்சி. சாட்சி எதுவும் வேண்டாம், நிரூபணம் எதுவும் வேண்டாம் 


அயலறியா = பக்கத்து வீட்டுக்காரர் அறியாத 


அட்டூணோ இல் = அடுதல் என்றால் சமைத்தல். ஊன் என்றால் உணவு. பக்கத்து வீட்டுக்காரன் அறியாத சமைத்த உணவு இல்லை. நாம் என்ன சமைக்கிறோம் என்று பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரியும். 


நாம்  நினைத்துக் கொண்டிருப்போம் நம்மை பற்றி யாருக்கும் தெரியாது என்று. நாம் யாரோடு பழகுகிறோமோ, அதை வைத்து இந்த உலகம் நம்மை எடை போடும். 


யாரோடு பழகுகிறோம் என்பது முக்கியம். 


(மணக்க மணக்க சமைக்க வேண்டும் என்பதும் முக்கியம்...:))

No comments:

Post a Comment