Saturday, February 23, 2019

நீதி நூல் - இனிய சொல்

நீதி நூல் - இனிய சொல் 


நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும் ?

எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.

முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம், சிரிச்சு பேசி, மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்..." னு நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா, எப்ப பாரு எரிஞ்சு எரிஞ்சு விழும்...வாயில நல்ல வார்த்தையே வராதே " என்ற இகழ் வரும்.

இரண்டாவது, நம்மை பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள். இனிய சொல் பகையை முறிக்கும். கொடிய சொல் நட்பை பிரிக்கும்.

மூன்றாவது, இனிய சொல் பேசுவதனால் நமக்கு என்ன இழப்பு வந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை. பின் எதற்கு தயங்க வேண்டும். எப்போதும் இனிய சொற்களையே பேச வேண்டும்.

நான்காவது, நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மோடு எப்போதும் இணை பிரியாமல் கூடவே இருப்பார்கள்.

பாடல்


வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ.


பொருள் 


வட்டவுல = வட்ட உலகில்

கெட்டு = எட்டு திசையும்

மிசை = இசை, இசை என்றால் புகழ்

மட்டற நிரப்பும் = அளவு இல்லாமல் நிரப்பும். புகழ் வந்து சேரும்.

வெட்டவரு = நம்மை வெட்ட வரும்

துட்டரை = தீயவர்களை, கொடியவர்களை

விலக்கி = நம்மை விட்டு விளக்கி

வச மாக்கும் = அவர்களை நம் வசமாகும்

நட்டமிலை = இனிய சொல் சொல்வதானால் நமக்கு ஒரு நட்டமும் இல்லை

யெட்டனையு = எத்துணையும்

நட்டுநர ரெல்லாம் = நாட்டில் உள்ள மக்களை எல்லாம்

இட்டமுறு = விருப்பத்துடன்

கட்டுதவும் = கட்ட உதவும். பிணைக்க உதவும்

இன்மொழிய தன்றோ. = இனிய மொழி அல்லவா ?


இனிய சொற்களை கூறுவதானால் என்னவெல்லாம் பயன் இருக்கிறது.

எனவே, எப்போதும் இனிய சொற்களையே பேச பழக வேண்டும்.

இனிய சொற்களை பேச வேண்டும் என்றால், முதலில் இனிய சொற்களை கேட்க வேண்டும். நல்லவற்றை கேட்க கேட்க அது நம்மையும் அறியாமல் நம்மிடம்  ஒட்டிக் கொள்ளும்.

கேளுங்கள். 


1 comment:

  1. வாயில் இனிய சொற்கள் வர வேண்டுமானால், மனதில் அன்பு வேண்டுமே! அதுதானே பிரச்சினை!

    ReplyDelete