Saturday, February 2, 2019

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல்

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல் 



பற்றிலேயே பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்றுதான்.

இந்த உடம்புக்கு ஒரு சின்ன வலி, உபாதை என்றாலும் பதறிப் போகிறோம். "காலையில் இருந்து ஒரே தலைவலி ...சூடா காப்பி போட்டு குடிச்சேன், ரெண்டு ஸாரிடான் போட்டேன், தலைவலி தைலம் போட்டேன்...ஒண்ணுக்கும் அடங்க மாட்டேங்குது " என்று ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நாம் இந்த உடம்புக்காக கவலைப் படுகிறோம்.

அது மட்டும் அல்ல, அதுக்கு வயதாகிக் கொண்டே போகிறேதே என்ற கவலை...முடி நரைத்ததால் கவலை, தோல் சுருங்கினால் கவலை, கண் பார்வை மங்கினால் கவலை, காது கொஞ்சம் கேட்காவிட்டால் கவலை...

வயதான படுத்திருவோமோ ? மறதி வந்திருமோ ? பிள்ளைகளுக்கு பாரமா போயிருவோமோ என்ற பயம்.

இந்த உடம்பை வைத்துக் கொண்டு நாம் எவ்வளவு அல்லாடுகிறோம்....

காரணம் என்ன ?

காரணம், நாம், இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த உடம்பு பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியா ? அது நிஜமா ?

ஒரு ஈ இருக்கிறதே, அதன் சிறகு இருக்கிறதே, அது எவ்வளவு சின்னது? அந்த அளவுக்கு ஒரு சின்ன கீறல் உடம்பில் விழுந்தால் கூட, அதில் இருந்து இரத்தம் வரும், சீழ் பிடிக்கும், அதில் ஈ மொய்க்கும், கொஞ்சம் விட்டால் அதை காக்காய் கூட கொத்தும். அந்த காகத்தை விரட்ட, ஒரு குச்சி வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மோசமானது இந்த உடம்பு. அதுக்கு நாம் இந்தப் பாடு படுகிறோம்.

முடிக்கு டை அடிக்கிறோம், பவுடர், லிப் ஸ்டிக், ஷாம்பு, சோப்பு, எண்ணெய் , சென்ட், அது இது என்ன என்று கொட்டி முழக்குகிறோம்.

பாடல்

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பொருள்

மா = பெரிய, சிறந்த, அழகு உடைய

கேழ் = உறவு

மட = இளமையான

நல் = நல்ல

ஆய் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

என்றரற்று = என்று அரற்றும்

சான்றவர் = பெரியவர்

நோக்கார்கொல் = பார்க்க மாட்டார்களா ? அறிய மாட்டார்களா ?

நொய்யதோர் = இழிவான

புக்கிலை  = இடம் இல்லை

யாக்கைக்கோர் = இந்த உடம்புக்கு

ஈச்சிற கன்னதோர் = ஈ + சிறகு + அன்னது ஓர் = ஈயின் சிறகைப் போல

தோல் = தோலில்

அறினும்  = சின்ன வெட்டு காயம் ஏற்பட்டாலும்

வேண்டுமே = வேண்டுமே

காக்கை  = காக்கையை

கடிவதோர் = விரட்ட  ஓர்

கோல் = கோல் , குச்சி

இளமை நிலையானது அல்ல.

சரி, அதுக்காக எப்ப பார்த்தாலும் வயதான பெரிசுக மாதிரி கவலைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இல்லை. அது நிலையானது அல்ல என்று தெரிந்து கொண்டால் போதும்.

மரண பயம் போய் விடும். நம் மரணம் மட்டும் அல்ல, மற்றவர்களின் மரணமும்  நம்மை வருத்தாது.

"அதெல்லாம் சரி, இருந்தாலும் ...." என்று இழுப்பது கேட்கிறது...என்ன செய்ய...

மருந்தைக் கொடுக்கலாம்...யார் குடிப்பது?



No comments:

Post a Comment