Friday, August 6, 2021

திருக்குறள் - வாழக்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - வாழக்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம் 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என பாயிரவியலில் நான்கு அதிகாரங்களைத் தந்தார். 


பின் இல்லறவியலுக்குள் நுழைகிறோம். 


இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தைப்  பற்றி சிந்தித்தோம். இல்லறம் என்றால் என்ன, அதன் பதினொரு கடமைகள், அதன் சிறப்பு, எல்லாம் பார்த்தோம். 


அடுத்தது, வாழ்க்கை துணை நலம் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இல்லறக் கடமைகளை ஒரு ஆடவனை முன்னிறுத்தித்தான் சொல்லி இருக்கிறார். 


பெண் விடுதளையாரளர்கள், விடுதளையாளிகள் உடனே கொடி பிடிக்கலாம். ஏன், நாங்கள் செய்ய மாட்டோமா அந்தக் கடமைகளை என்று.


செய்யலாம்.....


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_6.html

(Please click the above link to continue reading)


ஒரு பெண் தனித்து இருக்கிறாள். 


நான் துறவிகளை பேணும் இல்லறக் கடமைகளை செய்கிறேன் என்று தினம் சில பல துறவிகள் அவள் வீட்டுக்கு வந்து போனால் எப்படி இருக்கும்? அக்கம் பக்கம் என்ன சொல்லும். 


நானும் ஏனைய மூன்று நிலைகளில் உள்ளவர்களை பேணுவேன் என்று தினம் ஒரு பிரம்மச்சாரியை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்தால் என்ன ஆகும்? 


செய்வோம் என்று கொடி பிடிப்பவர்கள் செய்து பார்க்கட்டும். அவர்களை விட்டு விடுவோம். 


சரி, ஒரு பெண்ணால் இவற்றைச் செய்ய முடியாது என்றே வைத்துக் கொள்வோம். ஆணால் மட்டும் செய்ய முடியுமா? ஒரு துறவி வீட்டுக்கு வந்தால் ஒரு பெண்ணின் துணை இல்லாமல் ஆண் அந்தத் துறவிக்கு உணவு படைக்க முடியுமா? மல்லுக் கட்டிக் கொண்டு ஒரு நாள் செய்யலாம். அது இயல்பாக வராது. ஆணாலும் முடியாது. 


இல்லற தர்மங்களை ஒரு ஆணோ, பெண்ணோ தனித்துச் செய்ய முடியாது. ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தால் தான் இல்லறம் நடக்கும். நானா நீயா என்று போட்டி வந்தால் இல்லறத் தேர் அங்கேயே நின்று விடும். 


இங்கே யார் பெரியவர் என்ற போட்டி இல்லை. இல்லறம் என்பது மல்யுத்த மைதானம் அல்ல. சண்டை போட்டு யார் வென்றார்கள் என்று முடிவு செய்ய. 


அன்பும், அறமும் உடையது இல்வாழ்க்கை. 


அது நம் கலாச்சாரம். நாம் மேலை நாட்டு பழக்கங்களை பார்த்து, அது நன்றாக இருக்கிறதே என்று மயங்குகிறோம். அது சரியா தவறா என்பதல்ல கேள்வி. அவர்களுக்கு அது சரி. நாம் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்தவர்கள். நாம் ஏன் அவர்களைப் பார்த்து படிக்க வேண்டும்? 


திருக்குறள் படிப்பதன் நோக்கம் எந்த பண்பாடு அல்லது கலாசாரம் உயர்ந்தது என்று பட்டி மன்றம் நடத்த அல்ல. 


நம் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள. நம் அறம், தர்மம் பற்றி புரிந்து கொள்ள. எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக அலசி ஆராயிந்து வாழ்கை நெறியை அமைத்து இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள. 


பின் முடிவு செய்யலாம், எதை பின் பற்றுவது என்று. 


பெண் விடுதலை என்று பேசுபவர்கள், அடுத்த கட்டம் என்ன என்று சிந்தித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. சரி விடுதலை அடைந்து ஆகி விட்டது. அடுத்து என்ன? 


வள்ளுவர் ஒவ்வொரு படியாக கொண்டு செல்கிறார். 


ஒரு ஆடவன் இல்லற தர்மங்களை தனித்து செய்ய முடியாது என்பதால், அவனுக்கு ஒரு துணை வேண்டும் என்றும், அவன் மனைவி அவனுக்கு ஏற்ற துணை என்றும், அவளின் கடமைகள், சிறப்புகள் பற்றி இந்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசிப்போம்.


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார் என்பது இந்த அதிகாரம் முழுவதும் படித்த பின் தெரியும். 


வாழ்க்கைக்கு துணை - அவளின் நலம் பற்றி கூறும் அதிகாரம். 


வாழ்க்கைத் துணை நலம். 


இனி, அதிகாரத்துக்குள் நுழைவோம். 



No comments:

Post a Comment