Wednesday, July 22, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம் 


சில பேர் அதைச் செய், இப்படிச் செய் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள். தங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க மாட்டார்கள்.

குலசேகர ஆழ்வார், ஒரு நாட்டின் அரசராக இருந்தவர். ஆன்மீக பக்குவம் வர, அரச போகங்களை துறந்து விட்டு ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.

ஒரு அரசனாக இருந்தவன், ஆன்மீகத்தில் வருவது என்பது கடினமான காரியம்.

அரசன் என்ற அந்தத் திமிர், ஆணவம், கோவம், ஆசை, வேகம் எல்லாம் இருக்கும். பக்திக்கு அது ஒன்றுமே ஆகாது.

எப்படியோ நிகழ்ந்த இரசவாதம்.

நமக்கு இன்பம் வந்த போது, எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைக்கிறோம். என் உழைப்பு, என் அறிவு, என் திறமை இந்த வேலை கிடைத்தது, இந்த பதவி கிடைத்தது, இந்த இலாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோம்.

துன்பம் வரும் போது ? கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், இந்தத் துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று, என்று இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

ஆழ்வார் பார்க்கிறார். உலகில் பல பேர், இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதாக , சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது அவருக்கு.

உலகில் உள்ளவர்களை பார்த்துச் சொல்கிறார், "நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும், மீண்டும் இங்கு தான் வர வேண்டும்" என்று.

மேலும்,  ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் கூட, துன்பம் வந்தால், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா,  இந்த ஆன்மா, பக்தி, இறைவன் என்பது எல்லாம் பொய் தானோ  என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கும்   அவர் சொல்கிறார் "தினம் வரும் போது நீங்கள் ஆண்டவனை விட்டு  விலகிப் போனாலும், மீண்டும் இங்கே தான் வர வேண்டும்" என்று.

அதை ஒரு உதாரணத்தில் விளக்குகிறார்.

அது ஒரு பெரிய கப்பல். அந்தக் கப்பலின் கொடி மரத்தில் சில பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. கப்பல் நங்கூரம் எடுத்து கடலில் செல்லத் தொடங்கி விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின், மாலுமிகள் கப்பலின் பாய் மரத்தை மாற்ற வேண்டி  கொடி கம்பத்தைப் பார்க்கிறார்கள். அங்கே பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டுகிறார்கள்.

அந்தப் பறவைகளும் சிறகடித்து பறந்து போய் விடுகின்றன. போனால், எங்கு பார்த்தாலும் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தான். எங்கு போகும் அந்தப் பறவைகள். மீண்டும் அந்தப் கப்பலுக்கே திரும்பி வந்து விடுகின்றன.

அது போல, இறைவா, நீ என்னை எவ்வளவு தான் துன்பம் தந்து என்னை அடித்து விரட்டினாலும், எனக்கு போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் உன்னிடம்தான் வருவேன்  என்கிறார்.

பாடல்


வெங்கண்தின் களிற்டர்த்தாய்
          விற்றுவக் கோட்டம்மானே
     எங்கு போ யுய்கேனுன்
          இணையடியே யடையலல்லால்
     எங்கும் போய்க் கரை காணா
          தெறிகடல் வாய் மீண்டேயும்
     வங்கத்தின் கூம்பேறும்
          மாப்பறவை போன்றேனே
           (692) பெருமாள் திருமொழி 5 - 5


பொருள்

(click the link below to  continue reading....)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/108.html

வெங் = வெம்மையான
கண் = கண்களைக் கொண்ட
தின் = திடமான
களிற்டர்த்தாய் = களிற்றை + அடர்ந்தாய் = களிறு என்றால் யானை. அடர்தல் சண்டை போடுதல். குவாலயபீடம் என்ற யானையை கண்ணன் சண்டையிட்டு கொன்றான்

விற்றுவக் கோட்டம்மானே = வித்துவக்கோடு என்ற இடத்தில் உள்ள என் அம்மானே

எங்கு போ யுய்கேனுன் = எங்கு போய் பிழைப்பேன்

இணையடியே = உன்னுடைய இரண்டு திருவடிகளே

யடையலல்லால் = அடைக்கலம் அல்லாமல்

எங்கும் போய்க்  = எங்கு போனாலும்

கரை காணா = கரையை காணாத

தெறிகடல் வாய்  = அலைகள் தெறிக்கும் கடலின் நடுவே

மீண்டேயும் = மீண்டும் வரும்

வங்கத்தின் = கப்பலின்

கூம்பேறும் = கூம்பில் ஏறும். கொடி மரத்தில் ஏறும்

மாப்பறவை போன்றேனே = பெரிய பறவை போன்று இருந்தேனே

அவர்  சொல்வது அவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான்.

பிறவி என்ற கடலில் விழுந்து விட்டோம். எங்கும் தண்ணீர். எங்கு  போவது?

அவன் திருவடிகளே தெப்பம் என்று பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

துன்பம் வரும். அதற்காக தெப்பத்தை விட்டு விடக் கூடாது.

இந்தப் பாடல் 108  திவ்ய தேசங்களில் ஒன்றான திரு வித்துவகோடு என்ற தலத்தில் மங்களா சாசனம் செய்யப் பட்டது.

இது போல 10 பாசுரங்கள் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள்.

கண்ணில் நீர் பணிக்கும் பாசுரங்கள்.

படித்துப் பாருங்கள். விழி ஓரம் நீர் திரளவில்லை என்றால் மூடி வைத்து விடுங்கள். அதைப் படிக்க உங்களுக்கு நேரம் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

சரி, அந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது?

கேரளாவில், பாலக்காடு என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து பட்டாம்பி போய்விட்டால், அங்கிருந்து பக்கம்.

பட்டாம்பி வரை இரயில் இருக்கிறது. அங்கிருந்து சுமார் 2  கிமி தான்.

பஞ்ச பாண்டவர்கள் சிலை அமைத்து பூஜித்த தலம் என்று சொல்கிறார்கள்.

சிவனுக்கும், திருமாலுக்கும் ஒரே இடத்தில் கோவில். இது போல 10 திவ்ய தேசங்கள் இருக்கிறதாம்.

கேரளா பாணியும் , தமிழ் பாணியும் கலந்து நிற்கும் தலம்.


பெருமாள் - உய்ய வந்த பெருமாள்.
தாயார் - வித்துவ கோட்டு வல்லி



இந்த வைரஸ் பிரச்சனை எல்லாம் முடியட்டும்.

ஒரு நடை இந்த கோவிலுக்கு போய் விட்டு வரலாம். 

1 comment:

  1. அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete