Wednesday, July 29, 2020

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து 


நாலடியார் என்றால் ஏதோ தத்துவம், அறம் மட்டும் பேசும் நூல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இல்லறம் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். என்னை பிரிந்து அவள் எப்படி இருப்பாளோ என்று கணவன் நினைக்க வேண்டும். அதே போல் மனைவியும்.

பிரிவு என்பது  அருளிரக்கத்தை தரும் என்பார்கள். "ஐயோ பாவம், அவள் தனியாக எப்படி துன்பப் படுவாளோ" என்று அவள் மேல் இரக்கமும், அதன் காரணமாக அவள் மேல் அருளும் பிறக்குமாம்.

"நான் இல்லாட்டி என்ன, அவ தனியா சமாளிச்சுக்குவா" என்று கணவன் நினைத்தால், பின் பிரிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?

Independence, equal rights, liberation என்ற பெயரில் மெல்லிய அன்பு உணர்வுகளை சிதைக்க தலைப் பட்டுவிட்டோம். ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பது என்பது அடிமை தளை என்று நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு, அந்த அடிமை தளையில் இருந்து விடுதலை பெற துடிக்கிறோம்.

அன்புக்கு கட்டுப் படுவதின் சுகம் தெரியாதவர்கள்.

தலைவியை பிரிந்த தலைவன், வேறு ஏதோ ஊரில் இருக்கிறான். தலைவியைப் பற்றி நினைக்கிறான். அவன் மனதில் இரக்கம் பிறக்கிறது.

"பாவம் அவளை தனியே விட்டு விட்டு வந்து  விட்டேன். மாலை நேரத்தில் அவள் என் பிரிவால் மனம் ஏங்கி, கண்ணீர் விட்டு, அந்த கண்ணீரை தன்னுடைய மெல்லிய விரலால் தொட்டு துடைத்து, நான் செய்த இந்த குற்றத்தை நினைத்து, கையை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு வருந்திக் கொண்டு இருப்பாளோ" என்று ஏங்குகிறான்.

பாடல்

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_29.html

செல்சுடர்  = சுடர் என்றால் சூரியன். செல் சுடர், மாலை நேரச் சூரியன். (தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் -பாரதி தாசன்)

நோக்கிச் = அந்த சூரியனைக் கண்டு

சிதரரிக்கண் கொண்டநீர் = சிவந்த கண்களில் வந்த கண்ணீர் சிதற

மெல்விரல் =மெல்லிய விரல்களைக் கொண்ட அவள்

ஊழ்தெறியா =விதி  தெரியாமல்

விம்மித் =விம்மல் கொண்டு

தன் - மெல்விரலின் = தன்னுடைய மெல்லிய விரலின்

நாள்வைத்து =நாட்களை குறித்து

நங்குற்றம் =என்னுடைய குற்றத்தை

எண்ணுங்கொல், = நினைத்து வருந்துவாளோ

அந்தோ = அந்தோ

தன் = தன்னுடைய

தோள்வைத் தணைமேற் கிடந்து. = கையை தலைக்கு தலையணையாகக் கொண்டு

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

புதிதாக மணம் முடித்த பெண். கணவனை பிரிந்து இருக்கிறாள். மெலிந்து, தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து இருக்கிறாள்.

இரவு நேரம் கூட அல்ல. மாலை நேரம்.

சீவி முடித்து, பூ வைத்து, விளக்கு ஏற்றி, அதெல்லாம் அவளுக்குத் தோன்றவிலை. கட்டாந் தரையில் அந்தி சந்தி நேரம் படுத்துக் கிடக்கிறாள்.

கண்ணில் இருந்து நீர் வழிகிறது. விரலால் சுண்டி விடுகிறாள்.

கண்ணீர் நிறைவதால் "ஊழ் தெரியா" என்றார்.

அவள் அப்படி இருப்பாளோ என்னவோ தெரியாது. அப்படி இருப்பாள் என்று  கணவன்  நினைக்கிறான். அவன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது.

என்னால் தானே அவள் துன்பப் படுகிறாள் என்று இவன் வருந்துகிறான்.

தான் குற்றம் செய்து விட்டதாக பழியை தன் மேல் போட்டுக் கொள்கிறான் "நம் குற்றம் எண்ணும் கொல் "என்று நினைக்கிறான்.

அவளுக்கு என்ன, ஜாலியா ஊர் சுத்திட்டு, swiggy ல order பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருப்பாள் என்று  நினைத்தால் காதல் வருமா?

மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வருவது அவளின் மெல்லிய விரல்கள்.

அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான்.

அது தான் தாம்பத்யம். அது தான் காதல்.


இப்படி மெல்லிய, நுணுக்கமான மனித உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது  நாலடியார்.

இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப் பிடித்து படியுங்கள்.

1 comment:

  1. ஆஹா, என்ன ஒரு இனிமையான பாடல்.

    நாலடியாரில் இப்படியும் உண்டா?

    ReplyDelete