Thursday, May 9, 2024

திருக்குறள் - கைகூப்பித் தொழும்

 திருக்குறள் - கைகூப்பித் தொழும் 


மீன் பிடிப்பதற்கு என்றே சில கப்பல்கள் இருக்கின்றன. ஆழ்கடலில் சென்று பெரிய அளவில் மீன்களைப் பிடித்து, அவற்றை வெட்டி, சுத்தம் செய்து, தேவையான இரசாயானங்களைச் சேர்த்து டப்பாவில் அடைத்து கரைக்கு கொண்டு வந்து விற்பார்கள். கடலிலேயே எல்லாம் முடிந்து விடும். விற்பது மட்டும்தான் கரையில். 


அந்தக் கப்பலில் வேலை  செய்பவர்களைக் கேட்டால், "இத்தனை மீனையும் நானா தின்னப் போகிறேன்....யாரோ உண்ணப் போகிறார்கள். நான் என் கடமையைச் செய்கிறேன். நான் இல்லாவிட்டால் வேறு      ஒருவன் செய்வான். நான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இது நடக்கத்தான் போகிறது....என் குற்றம் எதுவும் இல்லை..." என்பார்கள். 


அந்த மீனை உண்பவர்களைக் கேட்டால், "...நான் வாங்கும் போது, அந்த மீன் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. நான் அந்த மீனைப் பிடிக்கவும் இல்லை, கொல்லவும் இல்லை, பதப்படுத்தவும் இல்லை...டப்பாவில் இருந்தது, வாங்கி வந்தேன்...இறந்த மீனை உண்பது எப்படி பாவமாகும்? கொள்வதுதானே பாவம். மீன் இறந்த பின், நான் உண்ணாவிட்டாலும், வேறு யாரும் உண்ணாவிட்டாலும், அந்த மீன் மீண்டும் உயிரோடு வரப் போவது இல்லை...உண்டால் என்ன பாவம்" என்பார்கள். 


இது ஒரு ஓயாத சண்டை. 


பார்த்தார் வள்ளுவர்..."உயிர்களை கொல்லவும் கூடாது, கொன்றதை தின்பதும் கூடாது...ஒருவன் இரண்டையும் செய்யக் கூடாது" என்கிறார். 


பாடல் 


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்


பொருள் 


கொல்லான்  = உயிர்களை கொல்ல மாட்டான் 


புலாலை மறுத்தானைக் = மாமிசத்தை உண்ணமாட்டான் 


கைகூப்பி = (அவனை) கை கூப்பி 


எல்லா உயிரும் தொழும் = அனைத்து உயிர்களும் தொழும் 


மனிதன் நினைத்தால் எந்த உயிரையும் கொன்று தின்ன முடியும். அப்படி செய்யாமல் இருப்பவனைப் பார்த்து எல்லா உயிர்களும் தங்கள் மேல் கருணை கொண்டு கொல்லாமல் விட்டதை நன்றியோடு நினைத்து அவனை நோக்கி கை கூப்பித் தொழும் என்றார். 


இல்லை என்றால் என்ன ஆகும், "கொலைகாரன் வருகிறான் என்று உயிருக்கு பயந்து அவை ஓடும்" என்பது ஆயிற்று. 

No comments:

Post a Comment