Tuesday, October 24, 2023

திருக்குறள் - எது பெரிது?

 திருக்குறள் - எது பெரிது?


உலகில் பெரிய செயல், சிறப்பான செயல் எது என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்?


படிப்பது, செல்வம் சேர்ப்பது, பெரிய பதவிகளைப் பெறுவது, புகழ் பெறுவது என்றெல்லாம் சொல்லுவோம். 


தவம் செய்து, ஞானம் பெற்று, இறைவனை அடைவது இதில் எல்லாம் பெரியது என்று கூட சொல்லலாம். 


ஆனால், வள்ளுவர் இதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது என்கிறார்.


எவ்வளவு தவம் செய்து, என்ன வரங்களைப் பெற்றாலும், அதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது.


அது என்ன என்றால், பசித்தவனின் பசியைப் போக்கும் செயல் என்கிறார். 


பாடல் 


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_24.html


(please click the above link to continue reading)


ஆற்றுவார் = செய்யகூடியவற்றுள் 


ஆற்றல் = பெரிய ஆற்றல் 


பசியாற்றல் = பசியை பொறுத்துக் கொள்வது. அதாவது, தவம் செய்வது 


அப்பசியை = அந்தப் பசியை 


மாற்றுவார் = போக்குபவர்களின் 


ஆற்றலின் பின் = ஆற்றலுக்கு அடுத்து பின்னே வருவது அந்த மேலே சொன்ன பசியைப் பொறுத்து கொண்டு தவம் செய்வது. 


என்னதான் முள்ளு முனையில், தீக்கு நடுவில், பசி தாகம் மறந்து தவம் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றாலும், அது மற்றவர் பசியைத் தீர்பவரின் ஆற்றலுக்கு முன் பெரிய விடயம் ஒன்றும் இல்லை. பசி தீர்பவரின் ஆற்றலுகுப் பின் தான் அந்த தவ வலிமை எல்லாம் என்கிறார். 


சரி, அப்படின்னு வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. அதுக்கு ஒரு காரணம் சொல்ல வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார் 


தவம் செய்பவர்கள், தங்கள் பசியையும் போக்கிக் கொள்ள முடியவில்லை, மற்றவர் பசியையும் போக்குவது இல்லை. 


மாறாக, இல்லறத்தில் இருந்து தானும் நன்றாக உண்டு பசியாறி, பசிக்கிறது என்று வந்தவனின் பசியையும் போக்குகிறானே அந்த இல்லறத்தான் அவன் தவம் செய்தவனை விட உயர்ந்தவன் என்கிறார். 


தானும் பசி இல்லாமல், மற்றவர் பசியையும் போக்குபவன் தன் பசியையும் தீர்க்காமல், மற்றவர் பசியையும் போக்காதவனை விட உயர்ந்தவன் தானே?


இதில் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால் மேலும் சில விடயங்கள் புலப்படும். 


முதலாவது, துறவறத்தை விட இல்லறம் சிறந்தது என்று இங்கு கூறுகிறார். 


இரண்டாவது, கஷ்டப்பட்டு தவம் செய்வதை விட, வீட்டில் இருந்து கொண்டே அதைவிட பெரிய பலன்களைப் பெறலாம்.


மூன்றாவது, நாம் எப்போதும் நினைப்போம். கடினமான செயல் உயர்ந்தது என்றும் எளிதாகச் செய்யும் செயல்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது அல்ல என்றும். இங்கே வள்ளுவர் அதை மறுக்கிறார். வீட்டில், மனைவி மக்களோடு இருந்து, விருந்து உண்டு, பசி என்று வந்தவனுக்கு அவன் பசியாற உணவு கொடு. அது எல்லாவற்றையும் விட சிறந்தது என்கிறார். எதுக்கு வேலை மெனக்கெட்டு காட்டில் போய் தவம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டும்?


நான்காவது, பசித்தவனுக்கு பணம் கொடு என்று சொல்லவில்லை. அவன் பசியை மாற்று என்கிறார். உணவு கொடு. அவன் பசி மாறினால் அதுவே சிறந்த புண்ணியம் என்கிறார். 


நமக்கெல்லாம் பசி என்றால் என்ன என்று தெரியாது. சில சமயம் சாப்பிடுவதற்கு எதாவது கொஞ்சம் நேரம் ஆகலாம். பசி இருக்கும். அதெல்லாம் ஒரு பசி இல்லை. வீட்டில் வேண்டும் அளவுக்கு உணவு இருக்கிறது. குளிர் சாதன பெட்டியைத் திறந்தால் மூணு நாளைக்கு வேண்டிய உணவு இருக்கும்.  அதெல்லாம் ஒரு பசி இல்லை. இல்லையா, on-line ல் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். இல்லை என்றால் வண்டியை எடுத்துக் கொண்டு போய், அருகில் உள்ள உணவு விடுதியில் உண்டுவிட்டு வரலாம். ஒரு கவலையும் இல்லை. அதெல்லாம் பசியில் சேர்ந்தது அல்ல. 




பசி இருக்கும். உணவு இருக்காது. எப்போது கிடைக்கும் என்றும் தெரியாது. அதுதான் பசி. அந்தப் பசியை மாற்றுவது இருக்கிறதே, அதுதான் பெரிய செயல் என்கிறார். 


இந்தக் குறளின் முழு அத்தமும் புரிய வேண்டும் என்றால், இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் தெரியும். 



 


No comments:

Post a Comment