Thursday, October 19, 2023

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம்

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம் 


சில விடயங்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


அது என்ன விடயங்கள்?


நிறைய படித்து இருப்பான். ஒரு சபையில், நாலு பேர் முன்னால் படித்ததை சொல் என்றால் நடுங்குவான். அவையைக் கண்டால். அப்படிப் பட்டவன் படிப்பதை விட படிக்காமல் இருப்பதே மேல். 


சில பேர் மிக அழகாக பேசுவார்கள். அடுக்கு மொழி, எதுகை மோனை, குரலில் ஏற்ற இறக்கம், நகைச்சுவை எல்லாம் இருக்கும். ஆனால் அவர்கள் பேச்சில் ஒரு துளியும் பயன் இருக்காது. ஏதோ கேட்டோம், இரசித்தோம், சிரித்தோம் என்று வர வேண்டியதுதான். கல்வி அறிவு இல்லாதவன் பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. 


சில பேர் எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டார்கள். ஒருத்தருக்கு ஒரு பைசா தந்து உதவி செய்ய மாட்டான். அவனிடம் செல்வம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


சில பேர் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார்கள். ஆனால், கையில் அவ்வளவாக செல்வம் இருக்காது. அவனிடம் உள்ள வறுமை, அது இல்லமால் இருப்பதே நல்லது. 


பாடல்  


அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்

அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்

பூத்தலின் பூவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_42.html


(pl click the above link to continue reading)


அவை அஞ்சி = அவையை அஞ்சி அல்லது அவைக்கு அஞ்சி. (அவை = சபை, கூட்டம்) 


மெய்விதிர்ப்பார் = உடம்பு உதறும் 


கல்வியும் = கற்ற கல்வியும் 


கல்லார் = படிக்காதவன் 


அவை அஞ்சா = சபைக்கு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் 


ஆகுலச் சொல்லும் = ஆரவாரமாக பேசும் பேச்சும் 


நவை அஞ்சி = பாவத்துக்குப்   பயந்து, குற்றத்துக்குப் பயந்து 


ஈத்து உண்ணார் செல்வமும் = பிறருக்கு கொடுத்து, தான் உண்ணாதவன் செல்வமும் 


நல்கூர்ந்தார் = வறுமையில் வாடும் நல்லவர்களின்  


இன் நலமும் = இனிய குணமும் 


பூத்தலின் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் 


ஏன் என்றால் அதனால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அது இருந்தாலும் ஒண்ணுதான் இல்லாவிட்டாலும் ஒண்ணுதான். 


படிக்காதவனுக்கு, நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லத் தெரியாது.எனவே சொல்ல மாட்டான். படித்தவனுக்கு சபையை கண்டால் பயம், எனவே அவனும் சொல்ல  மாட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். படிக்காமல் இருந்திருந்தால், அந்த நேரமாவது மிச்சமாயிருக்கும். 


எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குணம் இருக்கும். கையில் காலணா இருக்காது. அந்த நல்ல குணத்தால் யாருக்கு என்ன பயன்?  


உலோபியின் செல்வத்தால் என்ன பயன். அந்த செல்வம் அவனிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? 


எனவே, படித்தால் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும், செல்வம் சேர்த்தால், மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பது பெறப் பட்டது. 




1 comment: