Thursday, October 19, 2023

திருக்குறள் - எவ்வம் உரையாமை

திருக்குறள் - எவ்வம் உரையாமை 


மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது. 


இது எல்லா நாட்டினரும், மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நடைமுறை உண்மை. 


ஆனால், தமிழர்கள் அதை அறமாக கொண்டிருந்தார்கள். ஈகை செய்வது ஏதோ ஒரு வாய்ப்பு (option) அல்ல. செய்தே ஆக வேண்டும், அது இல்லறம் என்று வகுத்தார்கள். 


சரி, ஈகை செய் என்றால் எவ்வளவு செய்வது? 


சில மதங்களில் ஒரு குறிப்பிட்ட பங்கை கொடு என்று குறிப்பிடப்படுகிறது. 


வள்ளுவர் உச்சம் தொடுகிறார். இப்படி கூட ஒருவன் சிந்திக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு  அதைச் சொல்கிறார். 


பாடல்  


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


இலன்என்னும்  = இல்லை என்று சொல்லும் 


எவ்வம் = துன்பம் 


உரையாமை = சொல்லாமல் இருத்தல் 


ஈதல் = கொடுத்தல் 


குலன்உடையான் = நல்ல குடியில் பிறந்தவன் 


கண்ணே உள = இடத்தில் மட்டும் தான் இருக்கும். 


நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான் என்கிறது குறள்.


இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது? இதுக்கு எதுக்கு அவ்வளவு build  up என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"இலன் என்று" 


சில பேர், பிச்சைக்காரன் பிச்சை கேட்டால், சில்லறை "இல்லை", பொ போ போ என்று விரட்டி விடுவார்கள். பிச்சைக்காரன் தன்னிடம் இல்லை என்று கேட்டால், இவனும் தன்னிடம் இல்லை என்கிறான். இதில் யார் பெரிய பிச்சைகாரன்? 


இல்லை என்று ஒருவன் வந்தால், அவனிடம், என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும். 


இரண்டாவது, 


ஒருவன் நம்மிடம் வந்து இல்லை என்று அவன் சொல்லுவதற்கு முன்னே கொடுக்க வேண்டும்.  தெருவில் பிச்சைக்காரன் நிற்கிறான். பார்த்தாலே தெரிகிறது அவன் சரியாக சாப்பிட்டு பல நாள் ஆகியிருக்கும் என்று. அவன் நம்மிடம் வந்து "எனக்கு சாப்பிட காசு "இல்லை" ஏதாவது பிச்சை போடுங்கள்" என்று சொல்லுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டுமாம். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், அவளுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்த செய்தியை சொல்கிறாள். அவளுக்கு கட்டாயம் பணம் தேவைப்படும் என்று அறிந்து, அவள் கேட்கும் முன்னே கொடுக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி என்று "சரி இந்தா பத்து உரூபாய், இதை வைத்து கல்யாணத்தை சிறப்பாக நடத்து" என்று சொல்வது சரியா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர், மூன்றாவது அர்த்தம் என்ன என்று பாருங்கள். 


உதவி கேட்பது என்பது மிகவும் வருத்தமான செயல். அதை செய்ய விடக் கூடாது.  உலகளந்த பெருமாள் கூட மூன்றடி நிலம் யாசகம் கேட்க்க வந்த போது கூனி குறுகி, குள்ள வாமன அவதராமாக வந்தார். 


ஈகை என்ற தத்துவத்தை கொஞ்சம் நாம் விரிவுபடுத்தினால், நண்பர் வீட்டில் யாருக்கோ உடம்பு சரி இல்லை. மருத்துவ மனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அவர் கூப்பிட்டு கேட்க வேண்டும் என்று அல்ல, நாமே போய் நிற்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள் என்று முன்னே போய் நிற்க வேண்டும். இது ஈகை இல்லைதான் என்றாலும், சற்று விரித்து சிந்தித்தால் தப்பு இல்லையே. 



மூன்றாவது, 


பசி என்று ஒருவன் வந்து யாசகம் கேட்கிறான். அவனுக்கு ஒரு ஒரு உரூபாய் தானம் கொடுப்பது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? ஒரு காப்பி கூட குடிக்க முடியாது.  அவன் மேலும் பத்து பேரிடம் சென்று "எனக்கு பசிக்கு காசு இல்லை, உதவி செய்யுங்கள் " என்று கேட்க வேண்டும். நம்மிடம் ஒருவன் உதவி என்று வந்து கேட்டால் அவன் மற்றொருவரிடம் சென்று "இல்லை" , மேலும் உதவி வேண்டும் என்று கேட்க்கக் கூடாது. அப்படி உதவி செய்ய வேண்டும் .


உதாரணமாக, பசி என்று ஒருவன் வந்தால், அவன் வயிறார உணவு இட வேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டால் பின் ஏன் இன்னொருவரிடம் சென்று உணவு இல்லை என்று சொல்லப் போகிறான். சில மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும், அப்போது சொல்வான். அது வேறு விடயம். முடிந்தால் அவன்  யாரிடமும் எப்போதும் இல்லை என்று சொல்லாத வண்ணம் உதவி செய்யலாம். 


மூன்று விடயங்கள் சொல்கிறார்: 


முதலாவது, ஒருவன் இல்லை என்று சொல்லும் முன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் .


இரண்டாவது, இல்லை என்று வந்தவனிடம் என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்ய வேண்டும். 


மூன்றாவது, நம்மிடம் இல்லை என்று வந்தவன், வேறு யாரிடமும் அந்தச் சொல்லை சொல்லா வண்ணம் உதவி செய்ய வேண்டும். 


இதை எல்லாம் சொல்லிவிட்டு, வள்ளுவர் ஒரு குறிப்பும் வைக்கிறார். 


இப்படி யார் செய்வார்கள் என்றால், நல்ல குடியில் பிறந்த ஒருவனால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்கிறார். 


அப்படிச் செய்யாவிட்டால் நாம் எந்த குடியில் பிறந்தவர்கள் என்று நாமே முடிவு செய்து கொள்ளலாம். 


எல்லோருக்கும், தங்கள் குலம், குடி, குடும்பம் உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளத் தானே ஆசை இருக்கும். அப்படியானால், இதைச் செய் இல்லை என்றால் நீ மட்டும் அல்ல உன் குலமே கீழான குலம். அப்புறம் உன் இஷ்டம் என்று விட்டு விடுகிறார் வள்ளுவர். 


இப்போது சொல்லுங்கள். வியப்பாக இல்லை? எவ்வளவு ஆழமாக , அழகாக, இத்தனை சுருக்கமாக சொல்லி இருக்கிறார் என்று....


    


2 comments:

  1. மனது விரிய வேண்டும். இல்லை என்ற சொல் வாயில் வரக்கூடாது என என் பாட்டி கூறுவார்கள். அது மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஆனால் யாரும் சொல்லாமலேயே, அந்த குணத்தை என் பையனிடம் பார்த்து வியந்து இருக்கிறேன்.

    ReplyDelete
  2. I know someone who is born in a very good family and in a good position to help others but still didn't help.even to his very close family. His own parents and brother and sister. What is valluvar saying about such ppl

    ReplyDelete