Sunday, October 15, 2023

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி 


படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதைக் கேட்பது கடினம். அவர்கள் சொல்வதை கேட்டுப் புரிந்து கொள்ள புத்தியை செலவிட வேண்டும். 


யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது அதை விட கடினம். 


"அதெல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல" என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்க வேண்டும். 


எதுக்கு இவ்வளவு சிக்கல்?


நம்ம அளவுக்கு அறிவு (குறைந்த) ஒருவனை கண்டு பிடித்து அல்லது அது போல ஆட்கள் உள்ள ஒரு whatsapp குழுவில் சேர்ந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் செய்திகள், துணுக்குகள், போன்றவற்றை பரிமாறி மகிழலாம். 


புத்திசாலிகள் ஒரு குழு வைத்து இருப்பதைப் போல, அறிவு குறைந்தவர்களும் ஒரு குழு வைத்து அவர்களுக்குள் மகிழ்ந்து கொள்வார்கள் என்கிறது இந்தப் பாடல்:


பாடல் 


 கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்

தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_15.html


(please click the above link to continue reading)



 கற்றா ருரைக்குங் = கற்றார் உரைக்கும் (சொல்லும், கூறும்) 


கசடறு = கசடு + அறு = குற்றம் இல்லாத 


நுண்கேள்வி = நுண்மையான செய்திகள் 


பற்றாது = பற்றிக் கொள்ளமால், கேட்காமல், படிக்காமல் 


தன்னெஞ் சுதைத்தலால் = தன் + நெஞ்சு + உதைத்ததால் = தன்னுடைய மனம் அதை உதைத்து தள்ளி விடுவதால் 



மற்றுமோர் = வேற ஒரு 


தன்போ லொருவன் = தன்னை போன்ற ஒருவன் (முட்டாள்) 


முகநோக்கித் = முகத்தைப் பார்த்து, அவனுடன் சேர்ந்து 


தானுமோர் = தானும் ஓர் 


புன்கோட்டி = புல்லிய அவையை, குழுவை 


கொள்ளுமாம் கீழ் = கீழ் மக்கள் கொள்வார்கள் 


கீழ் மக்கள், அவர்கள் நிலையில் உள்ளவர்களிடமே சேர்ந்து கொள்வார்கள். 


அந்த நிலையை விட்டு மேலே வர வேண்டும் என்றால், தன்னை விட அறிவில் உயர்ந்தவர்களிடம் பழக வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள முயல வேண்டும். முடிந்தால் அதன் படி நடக்க வேண்டும். 


மாறாக, முட்டாள்களிடம் சேர்ந்து பொழுதைக் கழித்தால், அந்த நிலையிலேயே இருக்க வேண்டியதுதான். 


உயரும் வழி சொல்லித் தருகிறது இந்தப் பாடல். 



No comments:

Post a Comment