Sunday, May 3, 2020

திருக்குறள் - மனைவியும் இல்லறமும்

திருக்குறள் - மனைவியும் இல்லறமும் 



தமிழில் மனைவிக்கு இல்லாள் என்று ஒரு பெயர் உண்டு. இல்லத்தை ஆள்பவள் என்ற அர்த்தத்தில்.

இல்லான் என்று ஒரு வார்த்தை கிடையாது. இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள் படும்.

இல்லறத்தில் கடமை எல்லாம் கணவன் மேல் இருந்தாலும், அதை நிறைவேற்றும் பொறுப்பை மனைவியிடம் தந்திருக்கிறது நம் கலாச்சாரம்.

"மனைவி மாண்பு உடையவளாக இருந்தால், ஒருவனுக்கு எல்லாம் இருக்கும். மனைவி சரி இல்லை என்றால், என்ன இருந்தும் ஒன்றும் இல்லாதது மாதிரிதான்" என்கிறார் வள்ளுவர்.

மனைவி சரி இல்லை என்றால், இல்லறம் என்பதே கேலி கூத்தாகி விடும்.

பாடல்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

பொருள்

இல்லதென் = இல்லாதது என்ன ?

இல்லவள் = இல்லத்தில் இருப்பவள்

மாண்பானால் = மாண்பு உடையவள் ஆனால்

உள்ளதென் = உள்ளது என்ன?

இல்லவள் = இல்லத்தில் இருப்பவள்

மாணாக் கடை = மாண்பு இல்லாதவள் ஆனால்

இல்லாதது ஒன்றும் இல்லை.

உள்ளது ஒன்றும் இல்லை.

எல்லாம் மனைவியைப் பொறுத்தது.

கணவன் பெரிய பதவியில்  இருக்கலாம். மிகத் திறமையானவர் என்று பெயரும் புகழும்  பெற்று இருக்கலாம். நிறைய பொருளும் சம்பாதித்து இருக்கலாம்.  என்ன இருந்து என்ன பயன்? மனைவி சரி இல்லை என்றால், இவை அனைத்தும் இருந்தும்  ஒன்றும் இல்லாததற்கு சமம்.

கணவன் பெரிதாக ஒன்றும் படித்து இருக்க மாட்டான். பெரிய பதவியும் இல்லை. ஏதோ மிகச் சாதாரண வேலையாக இருக்கும். பணமும் பொருளும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஆனால், அவனுக்கு ஒரு அன்பான , குடும்ப பொறுப்பு உள்ள மனைவி அமைந்து விட்டால், அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை.

நல்ல மனைவி இருப்பது, பொருள், புகழ், தைரியம், மரியாதை, செல்வாக்கு, ஆரோக்கியம் எல்லாம் இருப்பதற்கு சமம்.

அவள் ஒருத்தி எல்லாவற்றையும் ஈடு செய்வாள்.

ஆவதும் அவளால். அழிவதும் அவளால்.

பெண்ணுக்கு மிகப் பெரிய பொறுப்பை, மதிப்பை வள்ளுவர்  தந்திருக்கார்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_3.html

1 comment: