Thursday, May 7, 2020

திருக்குறள் - பெண்ணை விட பெரியது எது?

திருக்குறள் - பெண்ணை விட பெரியது எது?


வாழ்க்கை துணை நலம் பற்றி கூறிக் கொண்டு வந்த வள்ளுவர் அடுத்த குறளில்

"பெண்ணை விட பெரியது எது? அதுவும் கற்பென்ற உறுதி உண்டானால்" என்கிறார்.

பாடல்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்


பொருள்


பெண்ணின் = பெண்ணை விட

பெருந்தக்க = பெருமையானது

யாவுள  = எது இருக்கிறது ?

கற்பென்னும் = கற்பு என்ற

திண்மை = உறுதி

யுண் டாகப் பெறின் = உண்டாகப் பெற்றால்

ஆஹா, வள்ளுவர் சரியான ஆணாதிக்கவாதியாக இருப்பார் போல் இருக்கிறதே.  அது என்ன பெண்ணுக்கு மட்டும் கற்பு, கத்திரிக்காய் என்று.  ஆணுக்கு ஒன்றும் இல்லையா?  அவன் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?  இப்படி கற்பு, கருப்பு என்று சொல்லியே பெண்களை அடிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்று  சில அறிஞர்கள் கூறக் கூடும்.

என்ன என்று ஆராய்வோம்.

அது ஏன் "பெண்" என்று கூறியிருக்கிறார் ? பேசாமல் மனையாள் , இல்லாள், மனைவி  என்று கூறி இருக்கலாமே?  பொதுவாக பெண் என்று எதற்கு கூற வேண்டும்.  காரணம் இல்லாமல் ஒரு வார்த்தையை வள்ளுவர் போடுவாரா?

பெண் என்றால் பெருமையானவள் தான்.  அவள் மனைவியாக இருக்க வேண்டும் என்று  அவசியம் இல்லை. பெண் பிறவி என்பதே பெருமையான பிறவி தான் . என்கிறார். எனவே, ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும், கல்லானாலும் கணவன்,  புல் ஆனாலும் புருஷன் என்று இருந்தால் தான்  பெண் பெருமையானவள்   என்று வள்ளுவர் சொல்ல வரவில்லை.

அது எப்படி, "கற்பென்னும் திண்மை" என்று சொல்லி இருக்கிறாரே.  அது கணவன் மேல் கொண்ட  உறுதியான அன்பைத்தானே குறிக்கும் என்று மேலும் சில   அறிஞர் பெருமக்கள் கூறலாம்.

கற்பென்னும் பண்பு, குணம் என்று சொல்லாமல் கற்பென்னும் திண்மை என்று ஏன் சொல்லி இருக்கிறார்.

கற்பு என்ற சொல் கல் + பு என்று உருவானது.

நடிப்பு, படைப்பு, படிப்பு என்பது போல.

சரி...கற்பு என்றால், கல்வி, படிப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதில் திண்மை எங்கிருந்து வந்தது?  கூர்மை இருக்கலாம், விரிவு இருக்கலாம், ஆழம் இருக்கலாம்...கல்விக்கும் திண்மைக்கும் என்ன சம்பந்தம் ?

எவ்வளவோ படிக்கிறோம். நல்லது எது கெட்டது எது என்று தெரிகிறது. இருந்தும்  அதன் படி நடக்கிறோமா? காரணம், உறுதி இன்மை. படித்தால், அறிந்தால் மட்டும் போதாது.  அதன் படி நடக்கும் உறுதி வேண்டும்.

வீட்டை எப்படி நடத்த வேண்டும், உறவு, நட்பு இவற்றை எப்படி அரவனைத்துச் செல்ல வேண்டும்   என்பதை அறிந்த பெண், அதன் படி நடக்க வேண்டும்.

ஆணுக்கு எவ்வளவோ கடமைகளை சொன்ன வள்ளுவர் பெண்ணுக்கும் சிலவற்றைச் சொல்கிறார்.

பெண் கொஞ்சம் மனம் தளர்ந்து அப்படி இப்படி நடந்து கொண்டால்  என்ன ஆகும் என்பதை வாசகர்களின் எண்ணத்துக்கே விட்டு விடுகிறேன்.

"யாவுள" என்று கேட்கிறார்? அதன் அர்த்தம் என்ன?

பெருமையான விடயங்கள் என்று எவற்றை நாம் சொல்லுவோம்?

அறம் , பொருள், இன்பம், வீடு ....இவைத்தானே பெருமையான விடயங்கள்?

இவற்றை எல்லாம் விட பெண் பெருமை வாய்ந்தவள் என்பதால் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்று  கேட்கிறார்.

இல்லை என்றால் எப்படி சொல்லி இருப்பார்?

பெண்ணின் பெருந்தக்க அறம் உள

பெண்ணின் பெருந்தக்க பொருள் உள

பெண்ணின் பெருந்தக்க வீடு பேறு உள

என்று சொல்லி இருப்பார்.

பெண்ணை விட உயர்ந்தது ஒன்றும் இல்லை என்பதால் "யாவுள" என்று கேட்கிறார்?  "அவளை விட உயர்ந்தது எது என்று எனக்குத் தெரியவில்லை. எது என்று நீங்கள் சொல்லுங்கள் " என்று நம்மைப் பார்த்து கேட்கிறார் வள்ளுவர்.

அவருக்கே தெரியவில்லை என்றால், நமக்கும் தெரியாதுதான்.

எல்லா பெண்களும் உயர்ந்தவர்களா என்று கேட்டால் இல்லை.

பெண்களிலும் மோசமானவர்கள் உண்டு.

கற்பு என்ற திண்மை இருந்து விட்டால், அவளை விட உயர்ந்தது ஒன்றும் இல்லை என்கிறார்.

"உண்டாகப் பெறின்" என்றால் என்ன?

கற்பு என்பது பாடமாக சொல்லித் தர முடியாது.  மக்களுக்கு தாயோ, பேத்திக்கு பாட்டியோ சொல்லித் தர முடியாது.

அது அவள் கூடவே உண்டாவது.

அது அவளின் உள்ளுணர்வு.

இது சரி. இது தான் என் குடும்பத்துக்கு நல்லது என்று ஒரு பெண் உணர்ந்து அதன் படி  உறுதியாக நின்றால் , அவளை விட உயர்ந்தது இந்த உலகில் ஒன்றும் இல்லை  என்பது கருத்து.

ஆணாதிக்கம்,  பெண்ணடிமை, சம உரிமை,  என்று கொடி பிடிப்பதன் முன்னம், சிறிதேனும் படிப்பது நலம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_7.html

1 comment:

  1. எந்த ஆணும் கெடாவிட்டால், இந்தப் பெண்ணும் கெட முடியாது அல்லவா?

    கெடாமேல் இருக்கும் பொறுப்பு இரு பாலருக்கும் இல்லையா?

    ReplyDelete