Thursday, May 14, 2020

திருக்குறள் - வளத்தக்காள்

திருக்குறள் - வளத்தக்காள் 


குடும்பத்தில், குறிப்பாக கணவன் மனைவி உறவில் விரிசல் விழ காரணம் என்ன?

பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் பொருளாதாரம் தான் காரணமாக இருக்கும்.

மனைவிக்கு பல ஆசைகள் இருக்கும்.

- இருக்க ஒரு நல்ல வீடு வேண்டாமா? இப்படி ஒரு சின்ன புறா கூண்டில் இருந்து கொண்டு மூச்சு முட்டுது

- எப்பப் பாரு, ஒரே நகை. எந்த விழாவுக்கு போனாலும் திருப்பி திருப்பி ஒரே நகையை போட்டுக் கொண்டு போக வேண்டி இருக்கிறது.

- மிஞ்சி மிஞ்சி போனா ஒரு சினிமா, ஒரு ஹோட்டல்...அவ்வளவு தான். எத்தனை அயல் நாடுகள் இருக்கு. அங்கெல்லாம் என்ன மாதிரி இருக்கு. வருஷம் ஒரு தரம் இல்லாட்டியும், ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு தடவையாவது அங்கெல்லாம் போய் பாக்க வழி இல்லை.

- பெரிய, விலை உயர்ந்த கார் வேண்டாம்...அதுக்காக எத்தனை நாள் தான் இந்த இரண்டு சக்க வண்டியிலேயே போறது

- பிள்ளைகளை அயல் நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கவிட்டாலும் பரவாயில்லை, உள்ளூரில் ஒரு நல்ல காலேஜில் படிக்க வைக்கலாம்ல

என்று மனைவிக்கு ஆயிரம் ஆசை இருக்கும்.

கணவன்மார்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல....

பெரிய வீடு, பெரிய கார், குடும்பத்தோட அயல் நாடு சுற்றுலா, என்று அவர்களுக்கும்  ஆசை இருக்கும்.

வசதி வேண்டாமா?

மனைவி ஆராய்ச்சி செய்ய வேண்டும். எது முடியும் , எது முடியாது என்று.

முடியாத ஒன்றை விட்டு விட்டு, முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும்.

முடியாதுனா பரவாயில்லை என்று முகத்தை மூணு முழத்துக்கு நீட்டி வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

கணவன் சொன்னால் கூட, "அதெல்லாம் வேண்டாங்க....நம்ம லெவலுக்கு அது ரொம்ப  அகலக் கால்...அதை விட குறைவான ஒன்றைப் பார்ப்போம் " என்று சொல்ல  வேண்டும்.  "கடன உடன வாங்கிகிட்டு, வாங்குற சம்பளத்துல பாதி வட்டி கட்டியே ஓஞ்சு போவோம்...வேண்டாம், நமக்கு அது சரிப்படாது" என்று   எடுத்துச் சொல்ல வேண்டும்.

கணவனை உசுப்பேத்தி விட்டு, இராவா பகலா உழைக்க விட்டு, கடனை வாங்கி, வட்டி கட்டி, எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது.

வள்ளுவர் காட்டும் மனைவியின் தகுதிகளில் ஒன்று "கணவனின் வரவு அறிந்து செலவு செய்தல்"

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

பொருள் 


"வளத்தக்காள்" - கணவனின் வளமை அறிந்து செலவு செய்பவள். வரவுக்கு மீறிய செலவை தானும் செய்யக் கூடாது, கணவனையும் செய்ய விடக் கூடாது. 


3 பெட் ரூம் ரொம்ப விலை. நமக்கு கட்டுப்படி ஆகாது. பின்னால் வசதி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு 2 பெட் ரூம் வீடே போதும் என்று சொல்ல வேண்டும். 

செலவு கட்டுக்குள் இருந்தால், வீட்டில் பாதி சிக்கல் இருக்காது. 

கையில் பணம் மிச்சம் இருக்கும். வாழ்வில் ஒரு தைரியம் இருக்கும். 

மாறாக, சொத்துக்கு மேல் கடன் இருந்தால், வாழ்வில் பற்று இருக்காது. பயம் தான் இருக்கும். 

இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கார். 

நமக்கு இதெல்லாம் சரிப்படாது இல்ல? வள்ளுவர் அந்தக் காலத்து ஆளு. அவருக்கு என்ன தெரியும்? பாவம். 

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_70.html


No comments:

Post a Comment