Thursday, May 21, 2020

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு 


கந்தர் அநுபூதியை சிறுவயதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் பாராயணம் பண்ணுவார்கள். அவர்கள் பாட்டுக்கு கட கட என்று சொல்லிக் கொண்டே போவார்கள். கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது.

பல பாடல்களுக்கு அர்த்தமும் விளங்கியது என்றே நினைத்தேன்.

நாள் ஆக ஆகத்தான், நான் அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருந்தது சரி அல்ல என்று புலப்படத் தோன்றியது.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ளது.

பாடல்

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

பொருள்


வளை பட்ட = வளையல் அணிந்த

கை (ம்)  = கைகளை உடைய

மாதொடு = மாது என்றால் பெண். அதாவது மனைவியுடன்

மக்கள் எனும் = பிள்ளைகள் என்ற

தளைபட்டு = விலங்கில் அகப்பட்டு

அழியத் தகுமோ? தகுமோ? = நான் அழிய தகுமோ தகுமோ ? (தகாது)

கிளைபட்டு = உறவினர்களோடு

எழு = போருக்கு எழுந்த

சூர்  = சூரனும்

உரமும் = அவன் வீரமும், மார்பும்

கிரியும், = கிரௌஞ்ச மலையும்

தொளைபட்டு = துளைத்துக் கொண்டு செல்லும்படி

உருவத்  = உருவிக் கொண்டு செல்லும்படி

தொடு வேலவனே. = வேலைத் தொட்டவனே

மனைவி மக்கள் என்ற குடும்ப சிக்கலில் மாட்டி நான் அதிலேயே அழுந்திப் போவது சரிதானா ?  நான் அப்படி அழிந்து போகாமல் இருக்க அருள் செய்வாய் என்று வேண்டுகிறார்.

ஆசைப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பின் பிள்ளைகளை பெற்று, அவர்களை  வளர்க்கிறோம். அவர்கள் எப்படி விலங்காக முடியும்?

ஏதோ மனைவியும், பிள்ளைகளும் நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு ஒரு தடைக் கல் போல சொல்கிறாரே...ஒரு வேளை அப்படித்தானோ?

திருமணம் செய்து இருக்கக் கூடாதோ? அப்படியே திருமணம் செய்து இருந்தாலும், பிள்ளைகள் பெற்று இருக்கக் கூடாதோ? அப்படியே பெற்றாலும், ஒரு அளவுக்கு மேல் அவர்களை கழட்டி விட்டு விட வேண்டுமோ? என்றெல்லாம் தோன்றியது உண்டு.

"மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்கிறாரே. தளை என்றால் விலங்கு. கையில் விலங்கை மாட்டிக் கொண்டு அலைய யாருக்கு ஆசையாக இருக்கும்? விடுதலை அடையத்தானே எல்லோரும் விரும்புவார்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண்களுக்கு , வளை பட்ட கை மாது ஒரு விலங்கு சரி.

பெண்களுக்கு?

மனைவிக்கு, கணவன் விலங்கா? அப்படியென்றால் ஏன் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

யாருமே திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? அதுவா உபதேசம்?

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பற்றி மேலும் சிந்திப்போம்.....

(தொடரும்)

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_21.html

No comments:

Post a Comment