Thursday, May 14, 2020

தேவாரம் - குரங்கு கை பூமாலை

தேவாரம் - குரங்கு கை பூமாலை 


பள்ளிக் கூடத்தில் முதலாவது வகுப்பில் படித்த பாடம்.

ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். அவன் ஊர் ஊராக சென்று தொப்பி விற்று வந்தான். அப்படி செல்லும் வழியில், ஒரு நாள் அவனுக்கு மிகுந்த களைப்பாக இருக்கவே, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சற்று இளைப்பாறினான்.

நடந்த களைப்பு, மர நிழல், சுகமான காற்று..அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான்.

சற்று நேரம் கழித்து விழித்துப் பார்த்தால், கூடையில் ஒரு தொப்பி கூட இல்லை. எங்கடா போச்சு என்று சுத்தி முத்தி பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது மரத்தின் மேல் ஏதோ சப்த்தம் கேட்கவே அண்ணாந்து பார்த்தான்.

பார்த்தால், மரத்தில் பல குரங்குகள், இவனுடைய தொப்பியை தலையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தன.

அந்த குரங்குகளிடம் இருந்து தொப்பியை எப்படி வாங்குவதும் என்று சிந்தித்த அந்த வியாபாரி, தன் தலையில் இருந்த தொப்பியை தூக்கி தரையில் எறிந்தான். அவன் செய்வதைப் பார்த்த குரங்குகள், தங்கள் தலையில் இருந்த தொப்பியை கழற்றி தரையில் எறிந்தன. வியாபாரி எல்லா தொப்பியையும் எடுத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினான்.

குரங்கு புத்தி.  பார்த்ததை அப்படியே செய்யும்.

திருமுதுகுன்றம் என்ற இடத்துக்கு திருஞானசம்பந்தர் போகிறார்.

அந்த ஊரில் உள்ள கோவிலில், அர்ச்சகர் சென்று நடையை திறப்பதற்கு முன், சாமிக்கு பூவால் அர்ச்சனை செய்த மாதிரி அவர் மேல் ஒரே பூ.

அங்கு வரும் பக்தர்கள்  பூ போட்டு வணங்குவதை கண்ட அந்த ஊர் குரங்குகள், எல்லோரும் போன பின், ஸ்வாமி மேல் உள்ள மாலையை எடுத்து, அதில் உள்ள பூக்களை பிய்த்து, ஸ்வாமி மேல போட்டன. பக்தி எல்லாம் இல்லை. சும்மா, எல்லோரும் போடுகிறார்களே என்று அவையும் போட்டன.

இராத்திரி எல்லாம் இதுதான் வேலை. மரத்தில் உள்ள பூவை எல்லாம் பறித்து, சுவாமி மேல போட வேண்டியது...அது ஒரு விளையாட்டு .....

பாடல்


எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் 
சித்தை யுள்ளே  கோயிலாகத் திகழ்வானே 
மந்தி ஏறி இனமா  மலர்கள் பல கொண்டு 
முந்தித்  தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

பொருள்


எந்தை = என்னுடைய தந்தை

இவன் என்று  = இவன் என்று

இரவி = சூரியன்

முதலா = முதலான தேவர்கள்

இறைஞ்சுவார்  = வணங்குவர்

சித்தை யுள்ளே = அவர்களின் சிந்தையில் உள்ள அவன்

 கோயிலாகத் திகழ்வானே  = இங்கு கோவில் கொண்டு திகழ்கிறான்

மந்தி ஏறி = குரங்குகள் ஏறி

இனமா  மலர்கள் பல கொண்டு  = ஒத்த மலர்கள் பலவற்றைக் கொண்டு

முந்தித் = முன்னாடியே

தொழுது வணங்கும் = தொழுது வணங்கும்

கோயில் முதுகுன்றே. = முதுகுன்றில் உள்ள கோவில்.

நாமும் குரங்கில் இருந்து வந்தவர்கள்தானே.

அந்த குரங்கின் புத்தி நமக்கும் இருக்கும் தானே?

நல்லவர்களோடு சேர்ந்தால், அவர்கள் செய்வதை நாமும் செய்யத் தலைப்படுவோம்.

மற்றவர்களோடு சேர்ந்தாலும் அப்படியே.

நமது மூளையில் mirror neuron என்று ஒன்று உண்டு. மற்றவர்கள் செய்வதை நம்மை அறியாமலேயே  நாம் செய்வோம்.

சிறு குழந்தை, ஒருவாரம், இரண்டு வாரம் ஆன குழந்தை முன்னால் நாம் சென்று   சிரித்தால், அதுவும் சிரிக்கும். நாம் அழுவது போல பாவனை செய்தால், அதுவும் அழும்.

காரணம் தெரியாது.

சினிமா, டிவி பார்க்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் அழுவோம், சிரிப்போம், நம் தசைகள் முறுக்கு ஏறும், தளரும்...காரணம் அங்கே திரையில் நடப்பதைப் பார்த்து  நம் mirror neurons அப்படியே இங்கே செய்யும்.

நேரம் இருந்தால், இது பற்றி google செய்து பார்க்கவும். சுவாரசியமான ஒன்று.

பாடலுக்கு வருவோம்.

நாம் யாரோடு சேர்கிறோமா, அவர்கள் செய்வதை, அவர்கள் பேசுவதை போலவே நாமும் பேசத் தலைப்படுவோம்.

யாருடன் பழகுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

நான் யாரோட பழகினாலும், நான் உறுதியாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள். இவை நிகழ்வது உங்கள் செயல்பாட்டில் இல்லை. உங்களையும் அறியாமல் அவர்கள் வழியில் சென்று விடுவீர்கள்.

அடியார்  கூட்டம் அடியார் கூட்டம் என்று மீண்டும் மீண்டும் சொல்லக் காரணம், ஒரு காலத்தில் அடியார்கள் நல்லவர்களாக இருந்தார்கள்.

அதை விட்டு விடுவோம்.

நல்லவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களோடு பழகுங்கள்.

மற்றவர்கள் சகவாசத்தை விடுங்கள்.

இரவி முதலாய தேவர்களுக்கு முன்னே சென்று குரங்குகள் வழிபட்டன. குரங்குகளே அவ்வாறு  நல்ல காரியம் செய்ய முடியும் என்றால், நம்மால் எவ்வளவு செய்ய முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_54.html

2 comments:

  1. உயர்ந்த கருத்துள்ள பாடலை பற்றி விவரித்த விதமும் அபாரம்.

    ReplyDelete
  2. ஒருவர் செய்வதை நாமும் செய்வதில் என்ன உயர்வு? நாமாக யோசித்துச் செய்வது மேல்.

    ReplyDelete