Tuesday, May 5, 2020

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும்

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும் 


உறவுகளில் சிக்கல் வருவது இயல்பு.  அது எந்த உறவாக இருந்தாலும் அதில் அவ்வப்போது ஏதோ ஒரு இடைவெளி வருவது இயல்பு.

கோபம், வேறுபாடு, மனக் கசப்பு, நம்மை  புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம், ஏன் எப்போதும் நானே விட்டு கொடுக்க வேண்டும்? இந்த தடவை என்ன ஆனாலும் சரி, நான் விட்டு கொடுக்கப் போவதில்லை.  விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து எல்லாரும் என்னை ஒரு ஏமாளி என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்....என்று ஒரு கோபத்தின், வெறுப்பின் உச்சம் தொடும் நேரங்களும் நம் வாழ்வில்  வந்திருக்கும்.

பொதுவாகவே, சண்டை, மனக் கசப்பு, எண்ண வேறுபாடு என்று வந்து விட்டால், நமக்கு இது தான் வேண்டும் என்று இரு சாராரும் அடம் பிடிப்பது வழக்கம். தாங்கள் பிடித்த ஒன்றை விட்டு இறங்கி வர இரண்டு பக்கத்திலும் ஒத்துக் கொள்வதில்லை.

கொடுப்பதனால் முழுவதும் கொடு, இல்லை என்றால் ஒன்றும் வேண்டாம்...என்ற அடம் சரியானதா?

எல்லாம் நடந்த பின்னால், கண்ணனை தூது அனுப்புகிறான் தர்மன்.

என்ன கேட்டு இருக்க வேண்டும் ? தாங்கள் சூதில் வைத்து இழந்த நாட்டை திருப்பி கேட்டு இருக்க வேண்டும். அதுதானே முறை? எங்கள் நாட்டைக் கொடு, இல்லை என்றால் யுத்தம் என்று அறிவித்திருக்க வேண்டும்.

தர்மன் அப்படிச் செய்யவில்லை.

"நாடு கேள். நாடு தராவிட்டால், ஐந்து ஊரு கேள். ஊரும் தராவிட்டால், ஐந்து வீடாவது  கேள்.   வீடும் தராவிட்டால், யுத்தம் கேள்"

என்று சொல்லி அனுப்புகிறான்.

தர்மனின் நோக்கம் யுத்தம் அல்ல. யார் பெரியவன், யார் சிறியவன் என்ற போட்டி இல்லை. எல்லோரும் அன்போடு, சண்டை இல்லாமல் சமாதானமாகப் போக வேண்டும் என்பது. 


பாடல்

முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர்
                                    முன்றிறோறு,
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில்,
ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு
                                  போர் வேண்டு,
சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த
                                  செங்கண்மாலே.

பொருள்


முந்தூர் = முந்தி ஊர்ந்து. வேகமாக செல்லும்

வெம்பணிக் கொடியோன்  = கொடிய பாம்பின் கொடியைக் கொண்ட துரியோதனன்

மூதூரி னடந்து  = பழமையான ஊரில்

உழவர் = உழவர்கள்

முன்றிறோறு, = முன்றில் தோறும். முன்றில்  = இல்லத்தின் முன்

நந்தூரும் = சங்குகள் ஊறும்

புனனாட்டின் = புனல் + நாட்டில் = நீர் வளம் நிரம்பிய நாட்டில்

திறம்வேண்டு = பங்கை வேண்டு

 நாடொன்றுநல்கானாகில் = நாடு ஒன்று நல்கானாகில் (நாடு தராவிட்டால்)

ஐந்தூர் வேண்டு = எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர் வேண்டு

அவையிலெனி ல் = அதுவும் இல்லை என்றால்

ஐந்திலம்வேண்டு = ஐந்து இல்லம் வேண்டு

அவை மறுத்தால்  = அதையும் மறுத்தால்

அடு  போர் வேண்டு = மோதும் போரை வேண்டு

சிந்தூரத் திலக நுதற்  = சிவந்த திலகம் முடிந்த நெற்றியை உடைய

 சிந்துரத்தின் மருப்பொசித்த = யானையின் தந்தத்தை ஒடித்த

செங்கண்மாலே. = சிவந்த கண்களை உடைய திருமாலே

இது தான் வேண்டும் , இல்லை என்றால் வேறு எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கக் கூடாது.  அப்படி இருந்தால் எங்கும் எப்போதும் சண்டை சச்சரவோடு தான்  வாழ வேண்டி வரும்.

இது இல்லை என்றால், அது என்று கொஞ்சம் வளைந்து கொடுத்து போக வேண்டும்.

சரி தவறு என்பதல்ல வாழ்க்கை.  அனுசரித்து போவது.

தர்மன் எவ்வளவு வளைந்து கொடுக்கிறான். அரசில் பாதி கேள் என்று ஆரம்பித்து  கடைசியில் ஐந்து வீடாவது கொடு என்று கேட்கிறான்.

துரியோதனன் முட்டாள்.  ஐந்து வீட்டைக் கொடுத்து இருக்கலாம். அதற்கு பதிலாக தன்னையும், 99 தம்பியாரையும், மாமன், மைத்துனன், பீஷ்மர், துரோணர்,  கர்ணன் என்று அனைவரையும் பலி கொடுத்தான்.

தர்மன் எவ்வளவு இறங்கி வந்தான். கொஞ்சம் பெருந்தன்மையாக ஐந்து ஊரை கொடுத்து இருக்கலாம். எவ்வளவு அழிவு. கடைசியில் முழு இராஜ்யமும் போனது.


பாரதம் சொல்லும் பாடம் - உலோப குணம் அழிவைத் தரும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_5.html

1 comment:

  1. நியாயம், அநியாயம் என்று ஒன்றும் இல்லையா?

    ReplyDelete