Wednesday, October 10, 2018

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும்

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும் 


பாடல்

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.


பொறி என்றால் கருவி. குறிப்பாக எதையும் பிடிக்கும் கருவிக்கு பொறி என்று பெயர். எலிப் பொறி என்றால் எலியை பிடிக்கும் கருவி. பொறி  வைத்து பிடிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.


நமக்கு ஐந்து பொறிகள் இருக்கின்றன. கண், காது, மூக்கு, தோல், வாய் என்ற ஐந்து பொறிகள். இவை ஏன் பொறிகள் என்று அழைக்கப் படுகின்றன? வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை, உணர்வுகளை பிடிப்பதால். மூக்கு வாசத்தைப் பிடிக்கிறது. கண், காட்சிகளை பிடித்து மூளைக்கு செய்தி அனுப்புகிறது. இப்படி ஒவ்வொரு பொறியும் , ஒவ்வொன்றை பிடிக்கின்றன.


இந்த பொறிகள் பிடித்து அனுப்பும் செய்திகளை அறியும் செயலுக்கு புலன்கள் என்று சொல்லுகிறோம்.


கண் என்ற பொறி செய்யும் செயல் காண்பது.


காது என்ற பொறி செய்யும் செயல் கேட்பது.


இப்படி பொறிகளும் புலன்களும் ஒன்று சேர்ந்து நமக்கு இந்த உலகையும் ஏன் நம்மையும் நமக்கு அறிய உதவுகின்றன.


வயதாகும் போது, எந்த புலன் எந்தப் பொறியில் இருக்கிறது என்று தெரியாது.


கண்ணால் பார்த்து அறிய வேண்டியதை கையால் தொட்டு தொட்டு அறிய முயல்வோம். காதால் கேட்டு அறிய வேண்டியதை எழுதிக் காட்ட வேண்டி இருக்கும்.


புலன்கள் செயல் இழக்கத் தொடங்கும்.


உடம்புக்கு வேண்டிய சக்தியை உணவை உண்டு ஜீரணம் செய்ய முடியாமல், உடம்புக்குள் நேராக ஊசி குத்தி அனுப்ப வேண்டி இருக்கும். இப்படி புலன்கள் எல்லாம் தட்டுத் தடுமாறி தவிப்போம்.


அது மட்டும் அல்ல,


பொறிகளும் புலன்களும் தள்ளாடும் போது அறிவு அழியும். சொன்னது மறக்கும். அறிவை புதுப்பிக்க முடியாது. புது செய்திகள்  மண்டையில் ஏறாது. அறிவு கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும்.


வாயில் எச்சில் வழியும். அதை தடுத்த நிறுத்த முடியாது.


பரிதாபமாக இருக்கும்.


எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். எல்லோருக்கும் பாரமாக .இருப்போம். என்ன செய்வது தெரியாமல் தெரியாமல் திகைப்போம்.


யார் நம்மை புரிந்து கொள்ளுவார்கள் ? யார் நமக்கு உதவி செய்வார்கள் என்று தவிப்போம்.


அப்போது....


"அச்சப் படாதே நான் இருக்கிறேன்" என்று சொல்லும் அந்த இறைவன் இருக்கும் கோவில் உள்ள இடம் திருவையாறு.


அந்த திருவையாற்றில், கோவில் பிரகாரத்தில், மத்தளம் முழங்குகிறது. சங்கம் ஒலிக்கிறது. அந்த இசைக்கு ஏற்ப இளம் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள்.


கோவிலிக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல் இது என்ன கூத்து, பாட்டு, மோளம் என்று ?


எந்த கலையாக இருந்தாலும் அதை இறைவனுக்கு படைப்பது என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இசை, நடனம் என்று எந்த கலையாக இருந்தாலும் இறைவனை முன்னிறுத்தி அவனுக்காக செய்வது என்பது ஒரு வழக்கம்.


அப்படி பெண்கள் ஆடிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த கோவிலில் நந்தவனம் இருக்கிறது. அங்கே பல மரங்கள் இருக்கின்றன. அந்த மரங்களில் குரங்குகள் வசிக்கின்றன.


இந்த மேள சத்தத்தை கேட்டு, சில குரங்குகள் ஏதோ இடி இடிக்கிறது, மழை வருமோ என்று  மரத்தின் மேல் ஏறி மேகங்களை நோட்டம் விட்டனவாம்.


இப்போது பாடலை மீண்டும் பார்ப்போம்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.



பொருள் 


புலனைந்தும் = ஐந்து புலன்களும்

பொறிகலங்கி = தத்தம் பொறிகளில் கலங்கி

நெறிமயங்கி = வழி தெரியாமல் மயங்கி

அறிவழிந்திட்டு = அறிவு அழிந்து

ஐம்மேலுந்தி = ஐ என்றால் வாந்தி. வாந்தி மேல் நோக்கி வந்து

அலமந்த போதாக = பரி தவிக்கும் போது

அஞ்சேலென்று = அஞ்சேல் என்று

அருள்செய்வான் = அருள் செய்வான்

அமருங்கோயில் = இருக்கும் கோவில்

வலம்வந்த = சுற்றி வரும்

மடவார்கள் = இளம் பெண்கள்

நடமாட = நடனம் ஆட

முழவதிர = முழவு அதிர

மழையென்றஞ்சிச் = மழை வருமோ என்று அஞ்சி

சிலமந்தி  = சில குரங்குகள்

அலமந்து = பயந்து

மரமேறி  = மரத்தின் மேல் ஏறி

முகில்பார்க்குந் = மேகத்தை பார்க்கும்

திருவையாறே.= திருவையாரே



சரி குரங்குகள் மரம் ஏறி முகில் பார்த்த வரை சரி. அது என்ன சில மந்தி என்று ஒரு வார்த்தையை திரு ஞான சம்மந்தர் போடுகிறார். எல்லா குரங்குகளும் தானே பார்த்திருக்க வேண்டும் ?


காரணம், அந்த ஊரிலேயே உள்ள குரங்குகளுக்குத் தெரியும் இது மத்தள ஓசை என்று. புதிதாக வந்த குரங்குகள் இன்னும் சரியாக பழகாததால், அவற்றிற்கு தெரியாது. எனவே சில மந்தி என்று கூறினார் என்று விளக்கம் சொல்லுவார்கள்.


அது போகட்டும்.


யோசித்துப் பாருங்கள். வயதாகும். புலன்களும் தள்ளாடும். அறிவு மயங்கும். யாருக்கும் நம்மை பிடிக்காமல் போகும் காலம் ஒன்று வரும்.


அப்போதும் நம்மை வெறுக்காமல் நம்மை ஏற்றுக் கொள்ளுவான் இறைவன் மட்டுமே.


தாய் கூட ஒரு காலம் வரை தான் பால் ஊட்டுவாள், சோறு ஊட்டுவாள்.


அப்புறம் "என்ன தடி மாடு மாதிரி வளந்திருக்க தன்ன தான போட்டு சாப்பிடு" என்று கூறி விடுவாள்.


அவன் தாயினும் சாலப் பரிந்து நமக்கு கடைசி காலம் வரை கூடவே இருப்பவன்.

எனவே தான் மாணிக்க வாசகப் பெருந்தகை கூறினார்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று.

தாய் கூட ஒரு கால கட்டத்தில் விட்டு விடுவாள். இறைவன் நம்மை விடவே மாட்டான்.

"உன் பற்று அன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே " என்று கண்ணீர் விட்டார் பட்டினத்தார்.

மேலே உள்ளது ஞான சம்பந்தரின் உயிர் உருக்கும் பாடல்.

ஒரு பாடலுக்கு, எனக்குத் தெரிந்தவரை இவ்வளவு. மொத்தமும் படித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் படித்து அனுபவிக்க

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....



https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_10.html

3 comments:

  1. மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். படித்து முடித்தவுடன் மனதில் நிறப்து ஒரு ஆதங்கம் தான்.
    இதையெல்லாம் படித்து ரசித்து பயனுறாமல் வாழ்க்கையை வீணடித்து விட்டோமே என்று.

    ReplyDelete
  2. நம்மையே பிடித்து வைத்திருப்பதால் அவை "பொறி" என்று கூறப்படுகின்றனவோ?!

    மனதைப் பிழியும் பாடல்!

    ReplyDelete
  3. Super duper.goole ஐ போய்தேடியவுடன் கிடைத்தது

    ReplyDelete