Sunday, October 24, 2021

திருக்குறள் - பிறவியின் நோக்கம்

 திருக்குறள் - பிறவியின் நோக்கம் 


இந்த பிறவி எதற்கு எடுத்ததின் நோக்கம் என்ன? 


தினம் மூன்று வேளை உண்பது, உடுப்பது, படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது ...இது போன்ற நோக்கங்களா?


உயிர், உடல் என்று இரண்டு இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வோம். உயிர் என்று ஒன்று இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 


ஒருவர் மேல் அன்பு செய்ய வேண்டும் என்றால், ஒரு உடல் வேண்டும். வெறும் உயிர் அன்பு செய்யுமா? 


எவ்வளவுதான் அன்பு உள்ள அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்றாலும், இறந்து பல வருடம் கழித்து, ஒரு நாள் இரவு தனியாக ஆவியாக வந்தால் நமக்கு அன்பு வருமா, பயம் வருமா?  


உயிர், ஒரு உடலை தேர்ந்து எடுப்பது அல்லது ஒரு பிறவி எடுப்பது எதற்கு என்றால் அன்பு செய்யத் தான். 


பாடல் 



அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_24.html


(pl click the above link to continue reading)



அன்போடு = அன்புடன் 


 இயைந்த  = இணைந்த, சேர்ந்த 


வழக்கென்ப = முறை, காரணம் என்று சொல்லுவார்கள் 


ஆருயிர்க்கு = அருமையான உயிர்க்கு 


என்போடு  = உடலோடு 


இயைந்த = சேர்ந்த 


தொடர்பு. = தொடர்ச்சி 



இந்த உயிர் உடலோடு சேர்ந்து இருக்க காரணம் என்ன என்றால் அன்பு செய்யும் நோக்கம் தான். 


இது மேலோட்டமான கருத்து மட்டும் அல்ல, சற்று தவறான கருத்தும் கூட. 


முதலில் புரிந்து கொள்ள இங்கிருந்து ஆரம்பிப்போம். பின் பரிமேலழகர் எப்படி விளக்கம் தருகிறார் என்று பார்ப்போம். 


"ஆருயிர்க்கு" ... உயிரா அன்பு செய்கிறது? உடல் தான் அன்பு செய்கிறது. உயிர், உடலின் மூலம் அன்பு செய்கிறது. பரிமேலழகர் செய்யும் நுட்பம் மிக மிக வியக்க வைக்கும் ஒன்று. 


ஆருயிர் என்றால் அருமையான உயிர் என்று அவர் பொருள் கொள்ளவில்லை.    " பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு " என்று உரை செய்கிறார். 


உயிர் என்பது ஆகு பெயர் என்று கொள்கிறார். 


அதாவது,  உயிர் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கும். பாக்டீரியா, ஈ, எறும்பு, கொசு, என்று அனைத்து பிறவியிலும் உயிர் இருக்கும். தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. அவை எல்லாம் அன்பு செய்து கொண்டு இருக்கின்றனவா? உயிர் தேவை கருதி சில நாள் செய்யலாம். அன்பின் நீட்சி இருக்காது. மகன், பேரன், என்று தலைமுறை தாண்டி நீளாது. 


எனவே இங்கு உயிர் என்பது மக்கள் உயிர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


அதெல்லாம் முடியாது. உயிர் என்று ஒன்று கிடையாது. இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது? என்ன வடிவில் இருக்கிறது, என்ன நிறம், எடை? காட்டு.அதை பரிசோதிக்காமல் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லலாம். 


"தொடர்பு" என்றால் என்ன என்று விளக்கம் செய்கிறார்.  " உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை".


அதாவது, உயிர் தொண்டர்ந்து கொண்டே இருக்கும். இந்த உடலை விட்டு இன்னொரு உடலில் போய் சேரும். அந்த தொடர்ச்சியின் காரணம் முற்பிறவிகளில் விடுபட்ட அன்பை தொடர்வதற்காக என்கிறார். 


நிறைய படிப்பு அறிவு இல்லாதவர்கள் கூட, காதலிக்கும் போது "ஏதோ உனக்கும் எனக்கும் முன் ஜன்ம தொடர்பு இருந்திருக்கும் போல இருக்கு..இல்லேனா எப்படி பாத்தவுடன் உன்னை எனக்கு புடிச்சு போச்சு" என்று பேசுகிறார்கள் இல்லையா?


"அடுத்த பிறவியிலும் நீயே என் கணவனாக/மனைவியாக" வர வேண்டும் என்று ஒவ்வொரு தம்பதிகளும் எப்போதாவது நினைத்து இருப்பார்கள். இந்தப் பிறவித் தொடர் என்பது அன்பு பற்றி வருகிறது. நம்மை அறியாமலேயே இது நமக்கு உள்ளுணர்வில் புரிகிறது அல்லவா? 


அடுத்த பிறவியிலும் நீயே எனக்கு எதிரியாக வர வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?


சரி, குறளுக்கு வருவோம். 


தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்குப் போகிறோம். அலசி ஆராய்ந்து துணி எடுத்துவிட்டுத் தான் வருகிறோம் அல்லவா?


உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரைப் பார்க்கப் போகிறோம். பார்த்து, மருந்து வாங்கிக் கொண்டுதானே வருகிறோம். 


போன நோக்கம் நிறைவேற வேண்டும் அல்லவா?


இந்தப் பிறவியின் நோக்கம், அன்பு செய்வதுதான். 


அதைச் செய்யாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம்.  சண்டை போடுகிறோம், கோபம் கொள்கிறோம், பொறாமை, எரிச்சல், சுயநலம் என்று இருக்கிறோம். அதற்காக அல்ல நாம் வந்தது. 


அன்பு செய்ய வந்திருக்கிறோம். வந்த வேலையை பார்ப்போம். 


எல்லோரும் அன்பு செய்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று இருந்து விட்டால்,இந்த உலகம் எப்படி இருக்கும். 


பரிமேலழகர் உரை எழுதுகிறார் 


"என்ப" என்றால் "என்று சொல்லுவர் அறிந்தோர்." என்கிறார். 


முட்டாள்கள் எப்படியோ சொல்லிவிட்டுப் போகட்டும். உயிர் என்று ஒன்று இருக்கிறது. அது உடலில் இருக்கிறது. அது உடலில் இருக்கக் காரணம் அன்பு செய்ய என்று அறிந்தோர் சொல்வர் என்கிறார். 


அப்படி இல்லை என்று சொன்னால், நாம் யார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று தெரிகிறது அல்லவா?




No comments:

Post a Comment