Sunday, October 10, 2021

கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்

கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்


எனக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு.


இராம அவதாரத்தின் நோக்கம் என்ன? இராவணனை அழிப்பது. 


இராவணனை ஏன் அழிக்க வேண்டும் ?  ஏன் என்றால் அவன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். தேவர்களை சிறை பிடித்தான். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தான். 


இராவணன் தேவர்களை துன்பம் செய்ததாக நேரடி தகவல் இல்லை. அவ்வப்போது தேவர்கள் இராமனுக்கு உதவி செய்கிறார்கள். முடிந்த வரை மலர் மாரி பொழிகிறார்கள். 


சரி, இராவணன் தேவர்களை துன்பம் செய்தான் என்றே இருக்கட்டும். அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்றே இருக்கட்டும்.  


அவன், அதற்காக தண்டிக்கப் பட்டானா? 


இல்லை. ...


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_10.html

(please click the above link to continue reading)



இராவணன் தண்டிக்கப்பட்டது பிறன் மனைவியை நயந்த குற்றதுக்குகாக. தேவர்களை துன்பம் செய்ததற்காக அல்ல.


கடைசிவரையில், வீடணனும், கும்பகர்ணனும் சொல்கிறார்கள் ..."சீதையை விட்டுவிடு...இராமன் மன்னித்து விடுவான்" என்று. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இராமன் கருணை உள்ளவன். அடைக்கலம் என்று வந்தால் ஏற்றுக் கொள்வான் என்றுதான் சொல்கிறார்கள். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி சீதையை விட்டு இருந்தால், இராமன் மன்னித்து இருப்பான். எல்லோரும் நிம்மதியாக் இருந்து இருப்பார்கள். 


தேவர்கள் கதி? 


மற்ற அரக்கர்கள் கதையை பார்ப்போம். அவர்கள் எல்லோரும் தேவர்களுக்கு துன்பம் செய்தார்கள். அவதாரம் நிகழ்ந்தது. அவர்கள் கொல்லப் பட்டார்கள். 


சூரபத்மன் தேவர்களை படாதபாடு படுத்தினான். முருகன் அவதாரம் நிகழ்ந்தது. போர் நடந்தது. அவன் கொல்லப் பட்டான். 


இரணியன் கதி அதே. தூணில் இருந்து நரசிம்மம் வெளிப்பட்டு அவனை கொன்றது. 


கம்சன் கதியும் அதே. 


முப்புரம் எரி செய்த சிவன் செய்ததும் அதே.


ஆனால் இராமயணத்தில் மட்டும், இராவணன் கொல்லப் பட்டது பிறன் மனை நோக்கிய  அறப் பிழையினால். தேவர்களை கொடுமை படுத்திய பிழையினால் அல்ல. 


அப்படி இருக்க, அவதார நோக்கம் என்பது பிறன் நோக்கும் கயவர்களை தண்டிப்பது என்றுதான் இருக்க வேண்டும். 


வாலி, சுக்ரீவனின் மனைவியை நயந்தான். கொல்லப் பட்டான். பின், சுக்ரீவன் வாலியின் மனைவியை நயந்தான் என்று வான்மீகம் சொல்வதாகச் சொல்கிறார்கள். கம்பனில் அப்படி இல்லை. 


இராவணன், இராமனின் மனைவியை நயந்தான், கொல்லப் பட்டான். 


இதில் தேவர்கள் எங்கே வந்தார்கள் ? 


கைகேயிக்கு தெரியுமா, இராவணன், சீதை மேல் காமம் கொள்வான் என்று? தெரிந்தே செய்திருந்தால், அவள் முதலில் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் கற்பை வைத்து சூதாடுவதா?


இராவணனை கொல்வதற்கு இராமனுக்கு ஒரு காரணமும் இல்லை. ஒரு வேளை இராமனுக்கு பட்டம் கட்டி இருந்தால், அவன் பாட்டுக்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்திருப்பான்.


திருமாலாலும், சிவனாலும், பிரம்மனாலும் முடியாத காரியத்தை முடிக்க உன்னிடம் வருவோம் என்று தசரதனைப் பார்த்து கௌசிகன் கூறுகிறான். அந்த தசரதன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை. 


ஜனகன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை. 


இராமனுக்கு இராவணன் இருக்கும் இடம் கூடத் தெரியாது. சீதையை தேடும் போது இராவணன் இருக்கும் இடத்தில் இருந்ததை கண்டு பிடித்தார்கள். ஜடாயு சொன்னான். 


அவதார நோக்கம் இராவண வதை என்றால் எப்படி இருந்திருக்க வேண்டும்?


இராமன், இராவணனுக்கு தூது அனுப்பி, "நீ தேவர்களை விட வில்லை என்றால் உன்னை யுத்தத்தில் சந்திப்பேன்" என்று சொல்லி இருக்க வேண்டும். சண்டை போட்டு, இராவணனை கொன்று தேவர்களை சிறை மீட்டு இருக்க வேண்டும். 


அப்படி எல்லாம் ஒன்றும் நிகழவில்லை. 


அவதார நோக்கம் என்ன என்று சரியாக எனக்கு விளங்கவில்லை. 


உங்கள் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவல். 





6 comments:

  1. அண்ணா..வணக்கம்.

    பெரியதொரு கேள்வியை கேட்டீர்கள் .

    இதனை நான் சிந்ததுண்டு ..

    நான் இராமாயணத்தை தாண்டி சிந்தித்தேன் ...

    கம்பனே இராமன் மகாவிஷ்ணு அவதாரம் என்பார்.

    இதற்கு விடையை வெளியில் தேடினேன் ...

    " பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே "

    ‘‘நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும், நான் யுகங்கள் தோறும் அவதரிப்பேன்’’

    – (ஸ்ரீமத் பகவத் கீதை 4வது அத்தியாயம் ‘ஞான கர்ம சந்யாச யோகம்’ 8வது ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உறுதிமொழி)

    இதனை கருத்தில் கொண்டால் பகவானின் அவதாரம் நோக்கம் - தர்மம் அழியும் போதும் அவதரிப்பாரென நம்பலாம் தானே ...

    தீயவர்களை அழித்தல் ஒருபுறம் ...

    தர்மம் அழிந்தது ...

    எந்த தர்மம்.

    பெரியவர் சொன்னால் - தகப்பன் - தாய் சொன்னால் கேட்காமல் போகும் அதர்மம் நிகழ்ந்திருக்க வேண்டும் ..

    அண்ணன் சொன்னால் தம்பி கேட்க வேண்டும் , கணவன் சொன்னால் மனைவி கேட்க வேண்டும் .

    தம்பி சொன்னாலும் நல்லதானால் அண்ணன் கேட்க வேண்டும் ...

    *இந்த_தர்மம்* அழிந்திருக்குமோ ...

    அதனை மீட்டெடுக்க இராமன் அவதாரம் ...

    முனிவன் சொன்னார் - தசரதன் கேட்டார் ...

    தாய் சொன்னார் - கேள்வியே இல்லாமல் காடு போனான் இராமன் .

    தம்பியர் பெருமையும் பலவாறு கூறப்பட்டது ...

    தீயோள் சொன்னதால் சீதையை கவர்ந்தான் இராமன் ...

    மாயமான் எனத்தெரிந்தும் சொன்னதை கேட்கவில்லை சீதை ...

    பின் இலக்குவன் சொன்னதையும் கேட்கவில்லை ...

    வீபீஷணன் , மண்டோதரி , இராவணன் மைந்தன் சொன்னதையும் கேட்கவில்லை இராவணன் .

    இவ்வாறெல்லாம் பணிவும் பண்பும் அழிந்ததோ ....

    இராமன் அவதரித்தான் என நினைப்பதுண்டு ...அண்ணா ...

    கேட்டீர்கள் சொன்னேன் ..தாவறானால் பொருத்தருள்க ...

    ReplyDelete
  2. எல்லாம் சரிதான். அவதார நோக்கம் தேவர்களை விடுவிப்பது அல்ல. இராம அவதாரம் நிகழும் வரை இராவணன் தவறு ஒன்றும் செய்யவில்லை

    ReplyDelete
  3. In my humble opinion, Lord Hanuman’s appearance is as important as Lord Rama’s. Ramayanam cannot exist without Lord Hanuman. Lord Hanuman had to join hands with Lord Rama for this particular avatar to be effective. Its a warning that no matter how great a Siva Bhakthan one may be, when one goes astray, Lord Shiva will join hands with virtue to destroy evil. Here, He joins Lord Rama in the amsam of Hanuman and it happens only after Seetha is kidnapped. If this can happen to Ravanan, the greatest of Shiva devotees, then we all should remember no matter how pious we may claim to be, the moment we fall astray, no God can protect us. This is purpose of both Lord Rama’s and Lord Hanuman’s appearances ( avatars or amsams) in Ramayana. 🙏🏽

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இந்தக் கேள்வியைத் தான் த்யகப்ரம்மமும் கேட்கிறார்..

    ப. ஏ(லா)வதார(மெ)த்துகொண்டிவி
    ஏமி காரணமு ராமுடை3

    அ. ஆலமு ஸேயுடகா அயோத்4ய
    பாலன ஸேயுடகா ஓ ராக4வ (ஏ)

    ச. யோகு3லு ஜூசு(ட)ந்து3கா ப4வ
    ரோகு3ல ப்3ரோசு(ட)ந்து3கா ஸ1த
    ராக3 ரத்ன மாலிகலு ரசிஞ்சின த்யாக3-
    ராஜுகு வர(மொ)ஸகு3(ட)ந்து3கா (ஏ)

    ஏன் அவதரித்தாயோ?
    என்ன காரணமோ, இராமனாக?

    போர் புரிவதற்கோ? அயோத்தியை
    ஆள்வதற்கோ? ஓ இராகவா!
    ஏன் அவதரித்தாயோ?
    என்ன காரணமோ, இராமனாக?

    யோகியர் (உன்னைக்) காண்பதற்கென்றோ? பிறவிப்
    பிணியாளிகளைக் காப்பதற்கென்றோ? நூற்றுக் கணக்கான
    ராக இரத்தின மாலைகளைப் புனைந்த
    தியாகராசனுக்கு வரமருள்வதற்கென்றோ?
    ஏன் அவதரித்தாயோ?
    என்ன காரணமோ, இராமனாக?


    The great saint even answers it.. which I will post a bit later.

    ReplyDelete
  6. தேவர்களைத் துன்புறுத்தியதால் இராவணன் கயவன். அவனை நேரடியாகக் குற்றம் சாட்டி அழிக்காமல், இராமனை வனம் போக வைத்து, இராவணனை சீதையை மோகிக்க வைத்து, அப்புறம் இராமனால் இராவணனை அழிக்க வைத்தது ஒரு கதைதான்.

    மூக்கை நேரடியாகத் தொடாமல், தலையைச் சுற்றித் தொடுவது போல!

    அப்படி சுற்றி வளைத்துக் கதை சொன்னால் (1) சுவாரசியமாக இருக்கும், (2) அப்படியே இன்னும் சில நல்ல நீதிக்கு கருத்துக்களையும் சொல்லி விடலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

    ReplyDelete