Thursday, March 26, 2020

திருக்குறள் - வாழ்க்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - வாழ்க்கை துணை நலம்  - ஒரு முன்னோட்டம் 


இல்லறத்தை நடத்தும் பொறுப்பை கணவனிடம் கொடுத்து இருக்கிறது நம் கலாச்சாரம்.

அந்தப் பொறுப்பில், அவனுக்கு துணை செய்யும் பொறுப்பை மனைவிக்கு கொடுத்து இருக்கிறது.

இது வள்ளுவர் சொன்னது அல்ல. வள்ளுவர் இதை கண்டு பிடிக்கவில்லை. வள்ளுவர், இருந்த அறத்தை தொகுத்துச் சொன்னார். அது மட்டும் தான் அவர் வேலை.

சரி, அது என்ன ஆண்களுக்கு பொறுப்பு, பெண்களுக்கு வெறும் துணை செய்வது மட்டும் தானா? ஏன் பெண்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டு, ஆண்கள் துணை செய்யக் கூடாதா என்று கேட்கலாம்.

இதெல்லாம் ஒரு பெண்ணாதிக்க சிந்தனை. பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு. வள்ளுவரும் ஒரு ஆணாதிக்க சிந்தனை வாதிதான். திருக்குறள் ஒரு பிற்போக்கு சிந்தனை உள்ள நூல் என்று சில படித்த மேதாவிகள் சொல்லக் கூடும்.

எது யாருக்கு இயல்பாக வருகிறதோ, அதை அவர்கள் செய்ய வேண்டும்.

வலிந்து கொண்டு நானும் செய்கிறேன் என்று  இயற்கைக்கு புறம்பாக செய்யத் தலைப்பட்டால், காலால் நடப்பதை விட்டு விட்டு கையினால் நடப்பதைப் போன்றது அது.

ஏன், கால்தான் நடக்க வேண்டுமா? நாங்களும் நடப்போம் என்று தலைகீழாக  கையை ஊன்றி நடக்கலாம். தப்பில்லை. அது எவ்வளவு அறிவீனமான செயல்  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கோ ஒரு பெண் பெரிய பதவியில் இருக்கலாம். சாதனைகள் செய்து இருக்கலாம். இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

சர்க்கஸில் கரடி சைக்கிள் ஓட்டும்.  "பார், எங்களுக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியும்.  இத்தனை நாள் எங்களை சைக்கிள் ஓட்ட விடாமல் அடிமையாக வைத்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் காட்டில் சைக்கிளில் தான் போவோம், வருவோம் " என்று எல்லா கரடிய வாதிகளும் கொடி பிடித்தால்  என்ன  செய்வது? சரி ஓட்டுங்கள் என்று விட்டு விட வேண்டியதுதான். பேசுவதால் பயனில்லை.

சரி, திருக்குறளுக்கு வருவோம்.

அது என்ன வாழ்க்கை துணை நலம்.

துணை என்றால் கீழே என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. aasisstant அல்ல.

தமிழில் துணை என்றால் ஒரு படி மேலே. ஒரு படி அல்ல, பல படி மேலே உள்ளதைத்தான் துணை என்று  கூறுவது வழக்கம்.

அபிராமி பட்டர், அம்பாளை துணை என்பார்.  தன்னை விட கீழே இருப்பவள் என்ற அர்த்தத்திலா சொல்லி இருப்பார்?

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே!


அருணகிரிநாதர் , துணை என்று எதையெல்லாம் சொல்கிறார் பாருங்கள்


விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.


துணை என்று சிவனைச் சொல்கிறார் அப்பரடிகள்

"துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ" என்பது அப்பர் வாக்கு.



அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ

இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே



நல்ல துணை ஆவது நமச்சிவாயவே என்பதும் அப்பர் வாக்கே.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே




"துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்பது ஒளவை வாக்கு.






எனக்கு ஒரு இடத்துக்குப் போக பயமாக இருக்கிறது என்றால் எனக்கு துணையாக  யாரை அழைத்துச் செல்வேன்? என்னை விட பயந்த ஒருத்தனையா அல்லது  என்னைவிட தைரியம் உள்ள ஒருவனையா?

துணை என்பது நம்மால் செய்ய முடியாததை செய்ய உதவி செய்வது.

காரியம் செய்வதற்கு முன்னால்

முருகா துணை, பிள்ளையார் துணை என்று எழுதிவிட்டு தொடங்குவோம்.

அவர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்பதாலா?

இல்லற பொறுப்பு என்பது மிகப் பெரிய பொறுப்பு. அதை ஒரு ஆடவனால் தனியாக செய்யவே முடியாது. அவனுக்கு துணை வேண்டும். அவனை விட  திறமையான, புத்திசாலியான ஒரு துணை வேண்டும்.

அதை பெண்ணிடம் கொடுக்கிறார் வள்ளுவர். மனைவியிடம் கொடுக்கிறார்.

எனவே அவள் வாழ்க்கை துணை நலம்.

வாழ்க்கையில் நல்லது செய்வதற்கான துணை.

வீடு அதிகாரம் அனைத்தையும் அவள் கையில் தருகிறார் வள்ளுவர்.

இனி வரும் பத்து குறள்களில் அவற்றை விரிவாக காண இருக்கிறோம்.

இருக்கிறோம் தானே?

மாறாக, என்ன தான் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வள்ளுவர் ஒரு பிற்போக்கு வாதி.  ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  எங்களுக்கு எல்லாம் தெரியும்...என்று நினைப்பவர்கள்,  அடுத்து வரும் பத்து குறள் சம்பந்தப்பட்ட ப்ளாகுகளை தவிர்ப்பது  நலம்.

தெரிந்ததைப் படித்து நேரத்தை வீணாக்குவானேன்?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_26.html

2 comments:

  1. துணைக்கு இவ்வளவு அர்த்தமா ?நம்மை விட பலசாலி, புத்திசாலி, திறமைசாலி என்று சொல்லிக்கொன்டே போகலாம்.படித்தால்தான் எல்லோராலும், படித்த மேதாவிகளத் தவிர, அறிய முடிகிறது. நன்றி

    ReplyDelete
  2. தெளிவான விளக்கம்.... நன்றிகள்

    ReplyDelete