Tuesday, March 24, 2020

நன்னூல் - தாலாட்டு

நன்னூல் - தாலாட்டு 

எப்பப் பார்த்தாலும் பக்தி, காதல், அறம் ...இதை விட்டால் தமிழில் வேற ஒன்றும் இல்லையா ?

ஏன் இல்லை?

தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யார்? 

குழந்தைகளை தூங்க வைக்க, தாய்மார்ககள் தாலாட்டுப் பாடுவார்கள். 

தாலாட்டு என்றால் என்ன ?

தால் என்றால் நாக்கு 

ஆட்டு என்றால் ஆட்டுவது. 

நாவை ஆட்டுவது தாலாட்டு. 

தாலாட்டில் பெரும்பாலும் 'ல' அல்லது 'ர' என்று எழுத்துக்களே வரும்.

ஆராரோ, ஆரிரரோ 

ரோ ரோ ரோ ....

லல்லாலா லல்லா லல்லா 

என்று இந்த எழுத்துக்களே பெரும்பாலும் வரும். 

ஏன் ஆடா என்றோ ஆபா என்று சொல்லுவது இல்லை. 

தமிழில் எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழில் ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிப்பது என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.

ஒரு எழுத்தை அப்படித்தான் உச்சரிக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு இலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த ல மற்றும் ர வை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. 

"அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் "

அண்ணம் என்றால் மேல் வாய்.  வாயின் மேல் பகுதியை நாக்கு வருட ர மற்றும்  ழ என்ற எழுத்துப் பிறக்கும். 

நாக்கு எங்கே, எதைத் தொடவேண்டும், எப்படித் தொட வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. 

ல்  மற்றும் ள் எப்படி பிறக்கும் தெரியுமா ?


அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் 

மேல் வாயின், பல்லின் அடிப் பகுதியை நாக்கின் விளிம்பு (அதாவது நாவின் நுனி) அழுத்தமாக தொடவும், வருடவும் லகரம் மற்றும் ளகரம் பிறக்கும்.

ல மற்றும் ர  இந்த இரண்டு எழுத்துக்கும் நாக்கை வருட வேண்டும். 

அப்படி வருடுவதால் அது ஆடுகிறது. 

நா ஆடுவதால் அது தாலாட்டு.

பிள்ளைகளுக்கோ , பேரப் பிள்ளைகளுக்கோ அடுத்த முறை தாலாட்டு பாடும் போது  நன்னூலை நினைத்துக் கொள்ளுங்கள். 


2 comments:

  1. உங்கள் பதிவை படித்தவுடன் மனதில் தோன்றுவது ஒன்றுமே தெரியாமலிருக்கிறேனே என்பதுதான்.!அருமை !

    ReplyDelete