Tuesday, March 17, 2020

திருக்குறள் - ஆற்றின் ஒழுக்கி

திருக்குறள் -  ஆற்றின் ஒழுக்கி


தவம் செய்வது என்பது லேசான காரியம் இல்லை. வீடு, வாசல், மனைவி, மக்களை துறந்து மேலும் பசி, தாகம், வெயில், குளிர் இவற்றை எல்லாம் பொறுத்து தவம் செய்வது என்பது எளிதான காரியமா?

பிரம்மச்சரியம் என்பதும் எளிதான காரியம் இல்லை. உடம்பு படுத்தும். ஹார்மோன்கள் உந்தித் தள்ளும். அவற்றைக் கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதும் எளிதான காரியம் இல்லை.

இப்படி எல்லாம் தங்கள் வாழ்க்கை முறையில் கஷ்டப் படுபவர்களை விட, இல்லறத்தில் இருப்பவனின் வாழ்க்கை மேலானது என்கிறார் வள்ளுவர்.

வீட்டில் சந்தோஷமாக மனைவி, பிள்ளைகள், சுற்றம் என்று இருப்பது அப்படி என்ன கடினமான காரியமா ?

ஆம் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

பொருள்

ஆற்றின் ஒழுக்கி = சரியான வழியில் செலுத்தப்பட்டு

அறனிழுக்கா = அறன் இழுக்கு இல்லா

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கை

நோற்பாரின் = தவம் மேற் கொள்வாரில்

நோன்மை உடைத்து = பெருமை உடைத்து

ஆற்றின் ஒழுக்கி = ஆறு என்றால் வழி. வழி என்றாலே நல்ல வழி தான். நல்ல வழியில்  சென்று. அல்லது செலுத்தப்பட்டு.



ஆற்றின் ஒழுகி என்று சொல்லி இருந்தால், அற வழியில் நடந்து என்று பொருள் கொள்ளலாம்.

ஒழுக்கி என்றால் செலுத்தி. அதாவது மற்றவர்கள் அற வழியில் செல்ல உதவி செய்து என்று அர்த்தம்.

இல்லற வாழ்க்கையில் இருந்து, அதை அற வழியில் நடத்தி, ஒரு குற்றமும் இல்லாமல்  செலுத்திக் கொண்டு போவது என்பது மற்ற அனைவரையும் விட சிறந்தது.

ஏன்?

ஒரு துறவி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஒரு பிரம்மச்சாரி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, இவர்களை துன்பத்தில் இருந்து காப்பது மட்டும் அல்ல,  தன் துன்பத்தையும், தன் உறவினர் துன்பத்தையும்  ஏற்று, அவற்றை போக்கும் வழி காண்கிறான்.

வீட்டுக்கு ஒரு துறவி வந்தால், அவன் பசியை போக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை.

அதே போல் விருந்து, உறவினர், என்று அனைவரின் துன்பத்தையும் ஏற்று அவற்றை களைவது  இல்லற தர்மம்.

அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளால் களைய வேண்டும்.

தான் அற வழியில் நின்றால் போதாது, மற்றவர்களும் அற வழியில் செல்ல உதவ வேண்டும்.

மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், நட்பு, விருந்து, துறவிகள், என்று எல்லோரின் பாரத்தையும் சுமக்க வேண்டியது  இல்லறத்தானின் கடமை.

'தனிக் குடித்தனம்' போய் தானும் தன்  மனைவி மக்கள் மட்டும் இன்பமாக இருப்போம் என்று நினைப்பது இல்லற தர்மம் இல்லை.

எவ்வளவு பெரிய சுமையை ஒரு இல்லறத்தானின் தலையில் வள்ளுவர் வைக்கிறார்.

நீ இதையெல்லாம் செய். இது உன் கடமை என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு போய் விடவில்லை.

இதெல்லாம் செய்தால் என்ன கிடைக்கும் என்று பலன் சொல்கிறார்.

இவற்றை செய்ய யார் துணை செய்வார்கள் என்று வழி சொல்கிறார்.

அதையம் கேட்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_17.html

No comments:

Post a Comment