Wednesday, March 18, 2020

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான்

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான் 


மொத்த வாழ்க்கையை இரண்டாக பிரித்துக் கொண்டார்கள் நம் முன்னவர்கள்.

ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம்.

இல் + அறம்

துறவு + அறம்

எந்த வழியில் போனாலும் அறம் சார்ந்தே வாழ்க்கை இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த இரண்டில் எது சிறந்த அறம் ? எது உயர்ந்தது என்ற கேள்வி வரும் அல்லவா?

அறம் என்றாலே அது இல்லறம்தான் என்று அடித்துச் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

பொருள்


அறன் = அரம்

எனப் பட்டதே = என்று சொல்லப் பட்டதே

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கைதான்

அஃதும் = துறவறம்

பிறன் = மற்றவர்கள்

பழிப்பது = பழித்துச் சொல்லாமல்

இல்லாயின் நன்று = இல்லாமல் இருந்தால் நல்லது


"அறன் எனப் பட்டது இல் வாழ்க்கை" என்று சொல்லி இருக்கலாம் தானே?  ஏன்

"அறன் எனப் பட்டதே" என்று என்று சொன்னார் ?

பட்டது, பட்டதே ...என்ன வேறுபாடு?

பட்டதே என்ற சொல்லில்  வரும் ஏகாரம் பிரிநிலை ஏகாரம். பிரிநிலை என்றால் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துக் காட்டுவது.

சில உதாரணங்கள் பார்ப்போம்

அனைத்து மாணவர்களிலும்  அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.

ஓடுவதே சிறந்த உடற் பயிற்சி

அறம்  பல உண்டு. அதில் இருந்து இல்லறத்தை பிரித்துக் காட்டுகிறார். ஏன் என்றால்,  மற்ற அறங்களை பற்றி பின்னால் சொல்லப் போகிறார்.

என்ன சொல்கிறார்

"அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று"

இங்கே வரும் "அஃதும்" என்பது துறவறத்தை குறித்தது.

துறவறம் பழிப்புக்கு உள்ளாவது இயற்கை. ஏன் என்றால், புலன்களை அடக்கி  வாழ்வது என்பது கடினமான செயல். புலன்களை அனுபவிக்க விடாமல் அவற்றை கட்டுப் படுத்துவது என்பது இயற்கைக்கு மாறான செயல். அதை எளிதில் யாரும் நம்ப மாட்டார்கள்.

பெண் ஆசையை துறந்து விட்டேன் என்று ஒருவன் சொன்னால், அவனை யார்   நம்புவார்கள்? "நமக்குத் தெரியாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்" என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். ஒரு சின்ன தவறு நிகழ்ந்தால் கூட, "நான் சந்தேகப் பட்டது சரியாகப் போய் விட்டது" என்று உலகம்  இகழ தலைப் படும். அப்படி கொஞ்சம் கூட பழி சொல் வரமால் இருந்தால் , துறவறமும் சிறந்ததுதான் என்கிறார்.

இல்வாழ்க்கை புலன் இன்பங்களை அனுபவிக்க அனுமதி தருகிறது.

அளவோடு, மென்மையாக, தேவையான அளவு அனுபவித்துக் கொள்ள வழி செய்கிறது. எனவே, இல்லறத்தில் இருப்பது என்பது ஒரு இயற்கையான செயல். இல்லறத்தின் வழியே எளிதாக செல்ல முடியும். துறவறம் கடக்க கடினமான பாதை.  பாதை தவறிவிட நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே, அறம் என்றாலே இல்லறம் தான் என்று சொல்கிறார் வள்ளுவர்.

அதுவே உயர்ந்த அறம்.

துறவி எல்லாம், இல்லறத்தானுக்கு ஒரு படி கீழே.  இல்லறத்தில் இருக்கும் நீங்கள்  துறவியைப் போய் பார்க்க வரிசையில் நிற்க வேண்டாம். துறவி என்றால் ஏதோ பெரிய ஆள்  என்று அவரை சென்று வணங்க வேண்டியது இல்லை. துறவறத்தை விட இல்லறம் சிறந்தது.

"அது என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? அவர் பெரிய மகான். துறவி...சாமியார்...அவரை விட நான் எப்படி உயர்ந்தவனாக இருக்க முடியும்"

என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் அதையும் விளக்குறார்.

நாளை?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_18.html

1 comment:

  1. சுவாரஸ்யமாக முடித்தீர்கள் !

    ReplyDelete