Tuesday, September 8, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே


நம் உடலை நாம் எப்படி பயன் படுத்தலாம்?

நல்ல விஷயத்துக்கும் பயன் படுத்தலாம், அல்லாத விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

சிக்கல் என்ன என்றால், எது நல்லது, எது அல்லாதது என்று நமக்குத் தெரிவது இல்லை.

அல்லாததை நல்லது என்று நினைத்துக் கொண்டு நாளும் அதைச் செய்கிறோம்.

அல்லது, எது நல்லது என்று தெரியாமல் குழம்புகிறோம்.

அந்த மாதிரி மயக்கம், குழப்பம் வரும் போது உயர்ந்த நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும். தெளிவு பிறக்கும்.

வள்ளுவரைக் கேட்டால் சொல்லுவார், செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றிற்கும் ஈயப் படும் என்று.

அவரே சொல்லுவார், தலை எதற்கு இருக்கிறது என்றால் இறைவனை வணங்க என்று.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பிரபந்தத்தில் (362) பெரியாழ்வார் சொல்கிறார்


"இந்த கையும் வாயும் எதற்கு இருக்கிறது என்றால் அவன் நாமங்களை சொல்லவும், எத்தனை தரம் சொன்னோம் என்று எண்ணிக் கொள்ளவும் தான் இருக்கின்றன. அதை விடுத்து சிலர், இந்த கை உணவை எடுத்து வாயில் போடவும், இந்த வாய் அந்த உணவை தின்பதற்கும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்"  என்கிறார்.


பாடல்

வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி கிழலெழும்
திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.


பொருள்

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_8.html


வண்ணநல்மணி யும் = வண்ண மயமான நல்ல மணியும்

மரகதமும்  = மரகதமும்

அழுத்தி = பதித்து

கிழலெழும் =  ஒளி விடும்

திண்ணைசூழ்  = திண்ணைகள் சூழ்ந்த

திருக் கோட்டியூர்த்  = திருக்கோட்டியூர்

திரு மாலவன்  = திருமாலவன்

திரு நாமங்கள் = திரு நாமங்கள்

எண்ணக் கண்ட விரல்களால்  = எண்ணிக் கொள்ளும் விரல்களால்

இறைப் பொழுதும் = இமைப் பொழுதும்

எண்ணகி லாதுபோய் = எண்ணுவதை விட்டு விட்டு

உண்ணக் கண்ட = உண்பதற்கும்

தம் = தம்முடைய

ஊத்தைவாய்க்குக் = ஊத்தை வாய்க்கு

கவளம் = கவளம் கவளமாக

உந்துகின் றார்களே. = அள்ளிப் போடுகிறார்களே

பொதுவாகச் சொல்லப் போனால், இந்த உடலை நல்ல விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம். தீய விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

எப்படி பயன் படுத்துகிறோம் என்று எப்போதும் சிந்தித்துச் செயல் பட வேண்டும்.



No comments:

Post a Comment