திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய
எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று எப்படி அறிந்து கொள்வது?
எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அது சரி என்று சொல்ல கொஞ்சம் பேர், தவறு என்று சொல்ல கொஞ்சம் பேர், அது சரியா தவறா என்று தெரியாமல் குழம்பும் கொஞ்ச பேர். இப்படித்தான் உலகம் இருக்கிறது.
தவறு என்று ஒரு நீதி மன்றம் சொல்வதை, மேல் நீதி மன்றம் தவறு அல்ல என்கிறது.
ஒரு நாட்டிற்கு சரி என்பது இன்னொரு நாட்டுக்கு தவறு.
ஒரு காலத்தில் தவறு என்பது இன்னொரு காலத்தில் சரி.
மணிவாசகர் சொல்கிறார்
"எது சரி, எது தவறு என்று கூறும் நீதி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரிந்தவர்களிடமும் சேர மாட்டேன். மனம் போன படி காரியங்கள் செய்து கொண்டு ஏதோ பிறந்து, இறந்து உழன்று கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை, தன் அடியவன் என்று ஏற்றுக் கொண்டு, என்னை ஆண்டு கொண்டு, தன்னுடைய அடியவர்களோடு சேர்த்து வைத்தது எவ்வளவு பெரிய அதிசயம்"
என்று அதிசயப்படுகிறார்.
பாடல்
நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பdவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
பொருள்
நீதி யாவன யாவையும் = எது சரி, எது தவறு என்று சொல்லும் அனைத்து நீதிகளையும்
நினைக்கிலேன் = நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்
நினைப்பவ ரொடுங் = அது பற்றி சிந்திபவர்களோடும்
கூடேன் = சேர மாட்டேன்
ஏத மே = ஏதோ கடனே என்று, ஒன்றும் தெரியாமல்
பிறந் திறந்துழல் வேன்றனை = பிறந்து இறந்து உழல்வேன் தன்னை
என்னடி யானென்று = என்னுடைய அடியவன் என்று
பாதி மாதொடுங் கூடிய = தன் உடம்பில் பாதியை உமாதேவிக்கு கொடுத்த
பரம்பரன் = மிக உயர்ந்தவன்
நிரந்தர மாய்நின்ற = என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்
ஆதி = முதல்வன்
ஆண்டு = என்னை ஆட்கொண்டு
தன் அடியரிற் = தன்னுடைய அடியவர்களோடு
கூட்டிய = சேர்த்து வைத்த
அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பார்த்தோம்
இறைவனின் அடியவர்களோடு சேர்ந்தால் இறைவன் பற்றிய ஞானம் வரும், இறைவன் மேல் பக்தி வரும்.
நாமும் ஒரு அடியவர்தானே? நம்மோடு சேர்ந்தால் இறை ஞானம், பக்தி எல்லாம் மற்றவர்களுக்கு வருமா?
அந்த அளவு ஞானத்தை நாம் தேடி அடைந்து இருக்கிறோமா? நம்மிடம் அவ்வளவு பக்தி இருக்கிறதா?
ஏன் பிறவி வருகிறது?
சரியானவற்றை செய்யாமல் இருப்பது.
தவறானவற்றை செய்வது.
எது சரி, எது தவறு என்று அறியாமல் இருப்பது.
அறிந்த்வவர்களை அண்டி அந்த அறிவைப் பெறாமல் இருப்பது.
இவை எல்லாம் இல்லாத எனக்கு அவன் அருள் புரிந்தான் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார்.
உண்மையில் அவருக்குத் தெரியும். அவர் நம் குற்றங்களை தன் மேல் ஏற்றிக் கூறுகிறார்.
நாம் இறைவனால் ஆட்கொள்ளப் படவேண்டும் என்றால்,
நீதி எது என்று அறிய வேண்டும்.
அறிந்தவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment