திருக்குறள் - மனோத்தொடு வாய்மை
இந்த உண்மை பேசுவது, உண்மை பேசுவது என்று சொல்கிறார்களே, அது வாயால் பேசுவது மட்டும் தானா?
ஒருவன் "நான் தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இன்ன தொழில் செய்யப் போகிறேன். அதுக்கு கொஞ்சம் முதல் வேண்டும். நீங்கள் உதவி செய்ய முடியுமா " என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதவி செய்யும் நிலையில் இருப்பவருக்கு அந்த தொழில் பற்றித் தெரியும். அதில் இலாபம் வராது என்று தெரியும். தெரிந்தும், சொல்லமால், "அதுக்கு என்ன தாராளமாய் செய்யுங்கள்" என்று சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறார். பணம் பெற்றுக் கொண்டவர் தொழில் தொடங்கி நட்டப் பட்டு நடுத் தெருவில் வந்து நிற்கிறார்.
உதவி செய்தது தவறா என்றால் இல்லை. ஆனால், மனதில் "நல்லா நட்டப் படட்டும் " என்று நினைத்துக் கொண்டே செய்த உதவி நல்லது அல்ல.
அது போல் சொல்லால் நல்லது போலத் தோன்றினாலும், மனம் நல்லதாக இருக்காது.
வள்ளுவர் சொல்கிறார்
"மனத்தோடு கூடி வாய்மை சொல்வது என்பது தானம், தவம் இவை இரண்டும் செய்வதை விட உயர்ந்தது " என்று
பாடல்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை
பொருள்
மனத்தொடு = மனத்தோடு கூடி
வாய்மை மொழியின் = உண்மை சொன்னால்
தவத்தொடு = (அது) தவத்தொடு
தானம் = தானம்
செய் வாரின் தலை = செய்வதை விட உயர்ந்தது
கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?
எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.
சொற்கள் சேர்ந்து வாக்கியம் உண்டாகிறது.
இந்த சொற்களை ஒட்ட வைக்க ஒரு பசை வேண்டும்.
உதாரணமாக ஒருவன் வேகாமாக ஓடினான் என்று சொல்வதற்கு "மானைப் போல் ஓடினான்" என்கிறோம்.
இதில் "போல்" என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? அது இந்த மானையும், ஓட்டத்தையும் சேர்த்து வைத்து பொருள் தருகிறது. அதற்கு உவம உருபு என்று பெயர்.
சுக்ரீவனைப் போல் அல்ல வாலி என்று சொல்லும் போது இருவருக்கும் உள்ள வேற்றுமையை நாம் காட்டுகிறோம். அது வேற்றுமை உருபு.
இப்படி பலப் பல உருபுகள் தமிழில் உண்டு. மிக சுவாரசியமானவை. அவை நம் எழுத்தை மேலும் அழகு படுத்தும்.
இங்கே 'ஒடு' என்று உருபு இரண்டுதரம் வந்து இருக்கிறது.
மனத்தொடு
தவத்தொடு
மனத்தொடு என்பதில் மனம், மொழி, மெய் இந்த மூன்றாலும் வாய்மை பேச வேண்டும்,
தவத்தொடு என்பதில் தானம் மற்றும் ஏனைய சிறப்பு அம்சங்கள் சேர்ந்து இருக்கின்றன.
மன மொழி மெய்யால் வாய்மையுடன் இருப்பது எல்லாவற்றிலும் சிறந்தது.
No comments:
Post a Comment