Monday, February 10, 2025

அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

 அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_39.html



அபிராமி அந்தாதியின் முதல் பாடல் தொடங்குவது "உதிக்கின்ற செங்கதிர்" என்று. 


உதிக்கின்ற என்று தொடங்கி, உதிக்கின்றதுவே என்று தான் தொடுத்த பாமாலையை முடிக்கிறார் பட்டர். 


எப்படி சொல் வந்து நிற்கிறது. 


எந்தப் கல்லூரியில் படித்து வருவது இது?


அன்று கல்லூரியின் கடைசி நாள். இனி எப்போது அவளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பார்க்கவே முடியாமல் போய் விடுமோ? வாழ்க்கை அவனையும், அவளையும் வேறு வேறு திசையில் கொண்டு போகலாம். அவனுக்கு இந்த நாளை எப்படியாவது நீட்டித்துக் கொண்டே போனால் என்ன என்று தோன்றுகிறது. 


இனி எப்போது பார்ப்போமோ என்ற தவிப்பில் அவளை கண் இமைக்காமல் பார்க்கிறான். அவள் காதோரம் நெளிந்து ஓடும் அந்த முடி, அவள் புருவம், அவள் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை, அவள் கையில் உள்ள கைக் கடிகாரம், அவள் அணிந்திருக்கும் செருப்பு என்று ஒரு அங்குலம் விடாமல் அவளை தூர நின்று எவ்வளவு தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு மனதில் பதிய வைக்கிறான். 


இனி காலம் எல்லாம் இந்த பிம்பத்தை மறக்காமல் இருக்க வேண்டுமே என்று அவளை அப்படியே மனதுக்குள் சிற்பம் போல் செதுக்கி வைக்கிறான். 


சொல்லி பார்த்துக் கொள்கிறான்...அவள் கண் எப்படி இருந்தது, விரல்கள் எப்படி என்று...அவளுக்கு திருமணம் ஆகலாம்...திருமண கோலத்தில் எப்படி இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கிறான்....



பாடல் 



குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே



பொருள் 



குழையைத் = காதணி. அவள் அணிந்திருக்கும் தோடு, ஜிமிக்கி


தழுவிய = அந்தக் காதணியை தொடும் 


 கொன்றையந்தார்= தார் என்றால் மாலை. காதில் போட்ட ஜிமிக்கையை தொட்டு வருடும் அந்தக் கொன்றை மாலை.


கமழ் = மணம் வீசும் 


கொங்கை = மார்பு 


வல்லி = சிறந்தவள் 


கழையைப் = மூங்கிலைப் 


பொருத = போட்டிபோடும் 


திருநெடுந்தோளும் = சிறந்த நீண்ட தோள்களும் 


கரும்புவில்லும் = கரும்பு வில்லும் 


விழையப் = விழைவு என்றால் ஆசை, ஆவல், ஆர்வம் 


பொரு = பொருதல் என்றால் சண்டை இடுதல், கட்டித் தழுவி நெருங்கி இருத்தல் 


வேரியம் = மணம் வீசும் 


பாணமும் = மலர்க் கணைகளும் 


வெண் நகையும் = வெண்மையான புன்சிரிப்பும் 


உழையைப் = மானுடன் 


பொரு  = போட்டி போடும் 


கண்ணும்  = கண்களும் 


நெஞ்சில் = என் மனதில் 


எப்போதும் உதிக்கின்றவே = எப்போதும் உதிக்கின்றதே 


சிவன் அணியும் காதணிகள் ஏழு வகைப்படும். 


தோடு, குண்டலம், குழை, சுருள், கோளரவன், ஓலை, பொற்றோடு என்பன.


அவன் அணியும் காதணி இவளிடம் எப்படி வந்தது?  ஆசையாக எடுத்துப் போட்டு இருப்பாளோ?  இல்லை இல்லை, அவன்தான் மாதொரு பங்கன் ஆயிற்றே. அவன் காதணி அவளுடையதும்தான். 


கொன்றை மலர் அவனுக்கு உரியது. அது இவள் தோளில்.  


அவள் மேனி எங்கும் மலர் வாசனை. 


காதணி, மாலையும் கழுத்துமாக அவள், முத்துப் பல் சிரிப்பு....


எப்போதெல்லாம் அவன் மனம் சோர்கிறதோ, அப்போதெல்லாம் அவன் மனதில் சூரியனாய் அவள் உதித்து ஒளி வீசுகிறாள். 


படித்துப் பாருங்கள். புரியலாம். 




No comments:

Post a Comment