அபிராமி அந்தாதி - மனக்கவலை
இன்று யாரைக் கேட்டாலும் மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் குழப்பம், என்று மனம் சம்பந்தப்பட்ட ஆயிரம் பிரச்சனைகளை கூறுகிறார்கள். பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் கூட Anxiety, Depression, ADHD, Bipolar disorder, என்று அடுக்குகிறார்கள்.
இன்று பல பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் என்பது கட்டாயம் என்று ஆகி விட்டது. அந்த அளவுக்கு மன அழுத்தம்.
நூற்றுக் கணக்கில் மருந்து மாத்திரைகள் வந்து விட்டன...Anti-depressant, anti-anxiety
என்று.
இந்த மனக் கவலையை எப்படி மாற்றுவது ?
இந்த மனக் கவலையெல்லாம் மனதில் படியும் அழுக்குகள். அவற்றை எப்படி சுத்தம் செய்வது ?
அன்பு ஒன்றுதான் வழி.
அன்பு செய்யுங்கள்.
மனம் அன்பு செய்வதற்கு என்றே உண்டான ஒன்று.
மனிதர்களை நேசியுங்கள் - கணவன், மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்புகள், நட்பு, உறவு என்று எல்லோரையும் நேசியுங்கள்.
முடியவில்லையா, நாய் குட்டி, பூனைக் குட்டி என்று அவற்றை நேசியுங்கள்.
அதுவும் முடியவில்லையா, இயற்கையை நேசியுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நீங்களே நேசிக்கப் பழகுங்கள். உங்கள் மேல் நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் வேறு யார் செலுத்தப் போகிறார்கள்.
மனசு முட்ட உங்களைக் காதலியுங்கள்.
பாடல்
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
பொருள்
உடைத்தனை வஞ்சப் பிறவியை = வஞ்சகமான இந்தப் பிறவியை நீ (அபிராமி) உடைத்தாய். இந்தப் பிறவி நமக்கு எவ்வளவோ நல்லது செய்ய் முடியும். அதை விட்டு விட்டு அது புலன் இன்பங்களின் பின்னால் போகிறது. நமக்கு நல்லது செய்யாமல் வஞ்சனையை செய்கிறது. அபிராமி இந்தப் பிறவி என்ற சங்கிலியை உடைத்தாள்.
உள்ளம் உருகும் அன்பு படைத்தனை = அன்பு என்றால் உள்ளம் உருக வேண்டும். கண்ணில் நீர் வர வேண்டும். 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக' என்பார் அருணகிரிநாதர். 'காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் மணிவாசகர்.
பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை = உன் திருவடி தாமரைகளை என் தலைமேல் சூடும் பணியை எனக்குக் கொடுத்தாய்
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் = என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் (கோபம், காமம், பொறாமை போன்ற அழுக்கை)
நின் அருள்புனலால் துடைத்தனை = உன்னுடைய அருள் என்ற வெள்ளத்தால் துடைத்தாய்
சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே = சுந்தரி, உன்னுடைய அருளை நான் என்னவென்று சொல்லுவேன்.
மன அழுக்கை எல்லாம் துடைத்தால், மனதில் எழும் பிரச்சனைகள் எல்லாம் தீரும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
உள்ளம் உருகும் அன்பு வேண்டும்.
அன்பு வேண்டும், அன்பு வேண்டும் என்று அலையாமல், இருக்கிற அன்பை எல்லாம் அள்ளிக் கொடுங்கள். திருப்பி வந்தால் வரட்டும், வராவிட்டாலும் ஒன்றும் பாதகம் இல்லை.
உங்களிடம்தான் கொட்டிக் கிடக்கிறதே. அன்புக்கா பஞ்சம்.
கொடுப்பதும் சுகம்தான்.