Thursday, April 3, 2025

திருவாசகம் - மெய்யெனக் கருதி

திருவாசகம் - மெய்யெனக் கருதி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html


இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள். 


இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும். 


இன்பம் எங்கே இருக்கிறது?  


பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. 


அது உண்மையா?


உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று.   கை வைக்க மனம் வருமா? 


அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும். 


பொருளில் இல்லை இன்பம். 


அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?


சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது. 


இந்த உடல் எப்படிப்பட்டது?


சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும். 


இந்த உடலுக்கா இந்தப் பாடு?  


வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள். 


மல சலம் போவது கூடத் தெரியாது. 


ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான். 


"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"


பாடல் 




பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே


பொருள் 


பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள் 


ஊன் = மாமிசம் நிறைந்த 


சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி 


புழுப் = புழுக்கள் 


பொதிந் து = நிறைந்த 


உளுத்த = உறுதியில்லாத 


அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர் 


பொய்க்கூரை = பொய்யான கூரை 


இத்தை = இந்த உடலை 


மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி 


நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக் 


கடற் = கடலில் 


சுழித்தலைப்  = சுழலில் 


படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை 


முத்து = முத்து 


மாமணி = பெரி மணி 


மாணிக்க = மாணிக்கம் 


வயிரத்த = வைரம் 


பவளத்தின் = பவளம் 


முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை  கொண்ட சோதி வடிவான 


அத்தன்  =என் தந்தை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம் 




No comments:

Post a Comment