Friday, May 16, 2025

திருக்குறள் - வெகுளாமை - பகைவன்

 திருக்குறள் - வெகுளாமை - பகைவன் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/05/blog-post_16.html



நமக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நினைத்தாலே நமக்கு ஒரு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. நன்றாக சிரித்து, மகிழ்ந்து கொண்டிருப்போம், திடீரென்று அவன் வந்து விட்டால் நம் முகத்தில் உள்ள சந்தோஷம் அனைத்தும் போய் விடும். அவன் நேரில் வர வேண்டும் என்று கூட இல்லை, அவன் நினைப்பு வந்தாலே போதும், நம் சந்தோஷம் வறண்டு விடும். 


அப்படி நமக்கு இருக்கும் எதிரிகளிலேயே பெரிய எதிரி யார் தெரியுமா? 


கோபம். 


கோபம் தான் நமது முதல் எதிரி.


ஏன்?


எதிரி என்ன செய்வான்?  


நம் முகத்தில் உள்ள சிரிப்பை அழிப்பான். மனதில் உள்ள சந்தோஷத்தை அழிப்பான். 


கோபமும் அதைத்தான் செய்கிறது. 


கோபம் கொண்ட ஒருவரின் முகத்தைப் பார்த்தால் தெரியும். அதில் ஒரு துளி கூட புன்னகை இருக்காது, ஒரு சின்ன சந்தோஷம் கூட இருக்காது. 


பாடல் 


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற


பொருள் 


நகையும் = சிரிப்பையும் 


உவகையும் = சந்தோஷத்தையும் 


கொல்லும் = நீக்கும் 


சினத்தின் = கோபத்தைவிட 


பகையும்  உளவோ பிற = வேறு ஒரு பகையும் உள்ளதோ ? (இல்லை)


இந்தக் குறள் துறவறத்தில் உள்ளது. 


துறவிக்கு ஏது பகைவன்? அவரோடு யார் போய் சண்டைப் போடப் போகிறார்கள். 


பரிமேலழகர் சொல்கிறார், 


துறவிக்கு வெளிப் பகை இல்லை. உள் பகை உண்டு. வெளிப் பகை என்ன செய்யுமோ, அதையே உள் பகையும் செய்யும் என்கிறார். 


மேலும், நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், துறவி என்றால் கடினமான வாழ்க்கை, சந்தோஷமே இருக்காது, ஒரு வறண்ட வாழ்க்கை, என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம். 


வள்ளுவர் சொல்கிறார், துறவிகளிடம் நகையும் (சிரிப்பு) உவகையும் எப்போதும் இருக்குமாம். அதை இந்த சினம் கொன்று விடுவதால், அது ஒரு பகை என்கிறார். 


துறவறத்தில் மிகுந்த இன்பம் இருக்கிறது என்று சொல்லமால் சொல்கிறார். 


ஏன் உவகை, என்ன சந்தோஷம்?


இனி பிறவி கிடையாது என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? அதை விட பெரிய நல்ல செய்தி என்ன இருக்க முடியும்?


துறவி ஆகிவிட்டால், பணம் சேர்க்க வேண்டும், அதைப் பாதுக்காக வேண்டும், அதைத் தருபவனிடம் பல்லைக் காட்ட வேண்டும், அதை பிடுங்கிக் கொண்டு போகிறவனிடம் பயப்பட வேண்டும், உறவுகளில், நட்பில் உள்ள சிக்கல்கள் என்று எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். ஒரு கவலையும் இல்லை. 


கண்மூடி தியானிக்க வேண்டிய குறள்.



1 comment:

  1. //கண்மூடி தியானிக்க வேண்டிய குறள்.// --- Very much true

    ReplyDelete