திருவாசகம் - அதிசயப் பத்து
நாம் ஒரு சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கே வரும் ஒருவர், "இந்தப் பக்கம் எங்க போறீங்க?" என்று நம்மிடம் விசாரிக்கிறார்.
நாம் "இன்ன இடம் என்று குறிப்பாக இல்லீங்க...சும்மா இப்படியே போய்க் கொண்டிருக்கிறேன்.." என்கிறோம். நமக்கே அந்தப் பதில் ஒரு மாதிரியாக இருக்கிறது.
அவர்: "என்னங்க இப்படிச் சொல்றீங்க...போகிற இடம் எதுவென்று தெரியாமல் கால் போன போக்கிலே போனால் என்னங்க அர்த்தம்"
நாம்: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இந்தச் சாலையில் நல்ல நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன, சினிமா கொட்டகைகள் இருக்கின்றன, ஐஸ் கிரீம், இன்னிப்பு வகையாறக்கள் நிறைய கிடைக்கும். அங்கங்கே தெருவோரம் வடை, பஜ்ஜி எல்லாம் சுடச் சுட தருவார்கள். இந்த சாலைக்கு என்ன குறை...இதில் போனால் என்ன ...என்று கேட்கிறோம்.
அவர்: சரிங்க...போற இடமும் தெரியாது, போற வழியும் சரியில்ல...இத்தனையும் சாப்பிட்டால் உடம்பு என்ன ஆகும்? அது மட்டும் அல்ல, இந்த சாலையில் பிக் பாக்கெட் அடிப்பவர்கள், ப்ளேடு போடுபவர்கள், அந்த மாதிரி பெண்கள் எல்லாம் இருப்பாங்க...இது சரியான வழி இல்லை...நான் உங்களுக்கு போகும் இடமும் நல்ல வழியும் சொல்லியும் தருகிறேன் என்கிறார்.
நாம்: ஐயா, நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து எனக்கு நல்ல ஒரு வழியை காட்டினீங்க...ஆமா நீங்க யாரு ?
அவர்: நானா, இந்த ஊர் தான்...எனக்கு எல்லா வழியும் தெரியும்...
அதிசயமாக இல்லை? கால் போன பாதையில், குறி ஒன்றும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்த நம்மை தடுத்து, போகும் இடம் காட்டி, போகும் வழியும் காட்டும் ஒருவர் வந்தால் அது எப்படி இருக்கும்?
பாடல்
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்
பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை
தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!
பொருள்
இருள் திணிந்து = அறியாமை என்ற இருள் நிறைந்து
எழுந்திட்டது = புறப்பட்டது
ஓர் வல்வினைச் = வஞ்சனையை செய்யும் வினைகள்
சிறு குடில், இது: = வாழும் ஒரு சிறு குடில் இது (இந்த உடல்)
இத்தைப் = இதைப் போய்
பொருள் எனக் களித்து = ஏதோ பெரிய விஷயம் என்று கருதி
அரு = கொடுமையான
நரகத்திடை = நரகத்தில் போய்
விழப் புகுகின்றேனை = விழ இருந்த என்னை
தெருளும் = தெளிவாகத் தெரியும்
மும்மதில் = = மூன்று சுவர்களைக் கொண்ட அந்த அரக்கர்களின் உலகத்தை
நொடி வரை = ஒரு நொடியில்
இடிதர = இடித்துச் தள்ளி
சினப் பதத்தொடு = சினம் கொண்டு
செம் தீ = நெற்றிக் கண் அனலை
அருளும் = அருள் செய்யும்
மெய்ந்நெறி = மெய்யே வடிவாகக் கொண்ட ஈசன்
பொய்ந்நெறி நீக்கிய = என்னுடைய பொய்யான வாழ்க்கை முறைகளை நீக்கிய
அதிசயம் கண்டாமே!
அவன் தான் வழி. அவன் தான் இலக்கு.
அதிசயப் பத்து நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment