திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்
ஒரு குழந்தை வீட்டில் உள்ள ஏதோ ஒரு விலை உயர்ந்த பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். "...குடுத்திருமா...நல்ல பிள்ளையில்ல .." என்று கெஞ்சி கேட்டாலும் "மாட்டேன் போ..இது என்னுது" என்று அடம் பிடிக்கும். அடித்தும் வாங்க முடியாது.
என்ன செய்யலாம். கீழே போட்டு உடைத்து விட்டால் பெரிய நட்டம்.
அந்தக் குழந்தையிடம் "...இந்தா உனக்கு பிடிச்ச சாக்கேலேட் .." என்று ஒரு இனிப்பைக் கொடுத்தால் அது அந்த விலை உயர்ந்த பொருளை கீழே போட்டு விட்டு சாக்கலேட்டைப் பற்றிக் கொள்ளும்.
அதற்கு அந்தப் பொருளின் விலை தெரியாது. மதிப்புத் தெரியாது.
அது போல
நாமும் இந்த வாழ்வில், பெரிய பெரிய விடயங்களை விட்டு விட்டு நமது சாக்கலேட்டின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.
கணவன்,மனைவி, பிள்ளைகள், பணம், அதிகாரம், செல்வாக்கு, புகழ், வீடு, வாசல், வங்கிக் கணக்கு, பட்டம், பதவி, ஜாதி, மதம், என்று எத்தனையோ சாக்கேலேட்டுகள்.
சாக்கேலேட்டு இனிப்பாக இருக்கும். சுவையாக இருக்கும். யார் இல்லை என்று சொன்னது. எனவே அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பில் அதிலேயே ஆழ்ந்து விடுகிறோம். சிற்சில சமயம் மற்ற நினைப்பு வந்தாலும், மனம் மீண்டும் சாக்கலேட்டின் பின்னே போய் விடுகிறது.
மணிவாசகர் சொல்கிறார்,
"இந்த உறவுகள், பொருள்கள் எல்லாம் அனுபவிக்கவே இருக்கின்றன. மகிழ்ச்சியாக அனுபவிப்போம் என்று பல பித்தர்கள் சொன்னதைக் கேட்டு நானும் அவற்றின் பின்னால் போனேன். இறைவா, பூவின் நறுமணம் வருகிறது என்றால், பூ எங்கோ இருக்கிறது என்று தானே அர்த்தம். அந்தப் பூவை தேடிக் கண்டு பிடித்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும். அதை விட்டு விட்டு எங்கெங்கோ
அது ஒரு புறம் இருக்கட்டும்....
தெருவில் நடந்து போகிறோம். ஏதோ ஒரு கடையில் வடை சுடும் வாசம் மூக்கைத் துளைக்கிறது. அடடா, சூடா ஒரு வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று அந்த வாசம் வரும் உணவு விடுதி நோக்கிப் போகிறோம்.
விடுதிக்குப் போய் விடுகிறோம். அங்குள்ள உணவு பரிமாறுபவரிடம், "ஒரு plate வடை" என்று ஆர்டர் செய்கிறோம். வடை வந்து விடுகிறது. நல்ல மொரு மொரு என்று இருக்கிறது. எண்ணெய் லேசாக மின்னுகிறது. ஆவி பறக்கிறது.
"இறைவா, உன் கருணை, மலரின் வாசம் போல் எங்கும் விரிந்து கிடக்கிறது. அந்த வாசனையை பற்றிக் கொண்டே போனால், மலரைக் காணலாம். அது போல் உன் கருணையை பற்றிக் கொண்டே போனால், உன்னைக் கண்டு விடலாம். அதை விட்டு விட்டு, இந்த உலக இன்பங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என்னையும் தடுத்தாட்கொண்டு, உன் அடியவர்களில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது " என்று வியக்கிறார் அடிகளார்.
பாடல்
உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,
பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
பொருள்
உற்ற ஆக்கையின் = கிடைத்த இந்த உடம்பின்
உறு பொருள் = பெரி பொருள், அர்த்தம்
நறு மலர் = வாசமிகு மலர்
எழுதரு நாற்றம் போல் = எழுந்து வரும் வாசம் போல
பற்றல் ஆவது = பற்றிக் கொள்ளக் கூடியது
ஓர் நிலை இலாப் = என்று ஒரு நிலை இல்லாத
பரம் பொருள்: = உயர்ந்த பொருள் (இறைவன்)
அப் பொருள் பாராதே = அதைக் கவனிக்காமல்
பெற்றவா = இந்த உடம்பை பெற்று
பெற்ற பயன் = பெற்றதின் பயன் புலன் இன்பங்களை அனுபவிப்பது தான் என்று
அது நுகர்ந்திடும் = அவற்றை அனுபவிக்கும்
பித்தர் சொல் = பித்தர்களின் சொல்லைக் கேட்டு
தெளியாமே, = அறிவு தெளிவு அடையாமல்
அத்தன் = தலைவன்
ஆண்டு = என்னை ஆட்கொண்டு
தன் அடியரில் = தன்னுடைய அடியவர் கூட்டத்தில்
கூட்டிய = சேர்த்துக் கொண்ட
அதிசயம் கண்டாமே! = அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன்
மிகவும் சிக்கலான பாடல். வேறு பொருளும் இருக்கலாம். தேடணும்.
No comments:
Post a Comment