திருக்குறள் - வெகுளாமை - உள்ளியது எல்லாம் உடன்எய்தும்
கோபம் நல்லது அல்ல. நமக்குப் புரிகிறது. அதை விட்டால் நல்லதுதான். அதுவும் புரிகிறது. எப்படி விடுவது?
கோபத்தை விட்டு விடு, விட்டு விடு, என்று சொன்னால் போதாது. எப்படி விடுவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா.
சரி, கோபத்தை விடுவதற்கு வழியும் சொல்லியாகி விட்டது. ஏன் விட வேண்டும்? விட்டால் என்ன பயன். கோபித்து மனைவியை, கணவனை, பிள்ளைகளை, கீழே வேலை செய்யும் ஆட்களை நாலு திட்டு திட்டினால் பயந்து போய் வேலை செய்வார்கள். அதனால் ஒரு பலன் உண்டு. கோபத்தை விட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று அதையும் சொல்ல வேண்டும் அல்லவா?
அந்த இரண்டையும் இந்தக் குறளில் வள்ளுவப் பேராசான் கூறுகிறார்.
பாடல்
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்
பொருள்
உள்ளியது = மனதில் நினைத்தவை
எல்லாம் = அனைத்தையும்
உடன்எய்தும் = ஒன்றாக அடைவான்
உள்ளத்தால் = மனத்தால்
உள்ளான் = நினைக்காமல்
வெகுளி எனின் = கோபத்தை என்றால்.
கொஞ்சம் சொற்களை இடம் மாற்றிப் போட்டால்,
மனதாலும் கோபத்தை ஒருவன் நினைக்காமல் இருந்தால், அவன் விரும்பியது எல்லாம் அவனுக்குக் கிடைக்கும்.
சரி, இதில் எங்கே கோபத்தை விட வழி சொல்லி இருக்கிறது? கோபத்தை விட்டால் வரும் பலன் எங்கே சொல்லி இருக்கிறது.
ஒருவனுக்கு அவன் நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்பது பெரிய நன்மைதானே?
அறம், பொருள் இன்பம், வீடு என்ற அனைத்தும் அவனுக்கு ஒருங்கே கிடைக்கும்.
யோசித்துப் பார்ப்போம்.
நேர்மையான வாழ்க்கை - அற வழியில் செல்லும் வாழ்வு. ஒரு பொய் கிடையாது, திருட்டு கிடையாது, சூது வாது கிடையாது...அறம் சார்ந்த வாழ்க்கை.
என்னவெல்லாம் தேவையோ அவற்றை வாங்க பொருள்
கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம் என்ற இல்லற சுகம்.
எல்லாவற்றையும் அனுபவித்து பின் வீடு பேறு.
இவை அனைத்தையும் தரும் என்றால் அது நல்லதுதானே?
மனதால் கூட கோபத்தை நினைக்காவிட்டால், இவை எல்லாம் கிடைக்கும் என்கிறார். இதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது ?
சரி, எப்படி கோபத்தை விடுவது ?
அதற்கு பரிமேலழகர் வேண்டும். அவர் இல்லாமல் நம்மால் இதை புரிந்து கொள்ள முடியாது.
"உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்" என்று குறள் சொல்கிறது. கோபத்தை மனதால் நினைக்காமல் என்று பொருள்.
பரிமேலழகர் கேட்கிறார், நினைப்பது என்றாலே அது மனதால் நினைப்பது தானே. பின் எதற்கு "உள்ளத்தால் உள்ளான் " எனின் என்று போட்டு இருக்கிறார். அதற்கு அவரே பதில் சொல்கிறார்.
இந்தக் குறள் இருப்பது துறவறம் என்ற பிரிவில்.
துறவியின் உள்ளம் அருள் உள்ளம். உயிர்கள் மேல் அன்பு கடந்து அருள் செலுத்தும் உள்ளம். அந்த அருள் நிறைந்த உள்ளத்தில் கோபம் வர வழியே இல்லை. கோபம் வருகிறது என்றால் அருள் முழுவதும் இல்லை என்று அர்த்தம்.
எனவே, கோபத்தை விட வேண்டும் என்றால், மனதில் அருள் வேண்டும்.
பிள்ளை தவறு செய்து விட்டால், அதன் மேல் உள்ள அன்பால் நாம் குழந்தையை கோபிப்பது இல்லை. அந்த அன்பு விரிந்து விரிந்து அருளாக மாற வேண்டும். அருள் உள்ளத்தில் நிறைந்து இருந்தால் அங்கே கோபம் இருக்க வழி இல்லை.
ஒளி உள்ள இடத்தில் இருள் எங்கனம் இருக்கும்.
அருளை வளர்த்துக் கொண்டே போனால், கோபம் குறைந்து கொண்டே போகும்.
"ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் " என்று இறைவனை வேண்டுவார் வள்ளல் பெருமான்.
அன்பு பெருக பெருக, அருள் வளரும்.
அருள் வளர, வளர கோபம் தேயும்.
கோபம் தேய தேய மனதில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.
எவ்வளவு அழகான, ஆழமான குறள்.
very Nice explanation .
ReplyDelete