Thursday, November 13, 2025

ஆசாரக் கோவை - நல்ல ஒழுக்கத்திற்கு அடிப்படைத் தேவை

 ஆசாரக் கோவை - நல்ல ஒழுக்கத்திற்கு அடிப்படைத் தேவை 


https://interestingtamilpoems.blogspot.com/2025/11/blog-post_13.html


ஒழுக்கமாக வாழ வேண்டும். 


ஒழுக்கம் என்றால் என்ன?  எதை ஒழுக்கம் என்று கொள்வது? அந்த ஒழுக்கம் எப்படி வரும்? 


இளைய தலைமுறைக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று எப்படிச் சொல்லுவது? பெரியவர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்ல முடியும். இளையவர்கள் பல கேள்விகள் கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் தக்க பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஆழ்ந்த அறிவு வேண்டும். 


எங்கும் தேடி அலைய வேண்டாம். தமிழில் இவற்றை போதிக்க பல நூல்கள் உள்ளன. ஆசாரக் கோவை அதில் ஒரு நூல். 


ஒழுக்கத்திற்கு அடிப்படை என்னென்ன என்று அது கூறுகிறது. 


மொத்தம் எட்டு குணங்களை ஒழுக்கத்தின் அடிப்படை என்று கூறுகிறது. 



அவை என்னென்ன ?


பாடல் 


நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ

டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ

டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து


கொஞ்சம் சீர் பிரிப்போம்


நன்றி அறிதல் பொறை உடைமை இன் சொல்லோடு 

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு 

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை 

நல்ல இனத்தாரோடு நட்டல் இவை எட்டும் 

சொல்லிய ஆசார வித்து 


பொருள் 


நன்றி அறிதல் = ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் இருத்தல் 


பொறை உடைமை = பொறுமை 


இன் சொல்லோடு = இனிய சொல் பேசுதல் 

 

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை = மற்ற எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாமல் இருந்தல் 


கல்வியோடு = கல்வி அறிவு 

 

ஒப்புரவு ஆற்ற அறிதல் = உலகோடு ஒத்துப் போகும் ஆற்றல் 


அறிவுடைமை = அறிவுடைமை 

 

நல்ல இனத்தாரோடு நட்டல் = நல்லவர்களோடு சேர்ந்து இருத்தல் 


இவை எட்டும் = இந்த எட்டு குணங்களும் 

 

சொல்லிய = ஆன்றோர் சொல்லிய 


ஆசார = ஆசாரத்துக்கு  


வித்து = அடிப்படை 


இவை எல்லாம் இருந்தால் ஒழுக்கம் தானே வரும்.


 


Tuesday, November 11, 2025

திருக்குறள் - வெகுளாமை - உள்ளியது எல்லாம் உடன்எய்தும்

 திருக்குறள் - வெகுளாமை - உள்ளியது எல்லாம் உடன்எய்தும் 



கோபம் நல்லது அல்ல. நமக்குப் புரிகிறது. அதை விட்டால் நல்லதுதான். அதுவும் புரிகிறது. எப்படி விடுவது?  


கோபத்தை விட்டு விடு, விட்டு விடு, என்று சொன்னால் போதாது. எப்படி விடுவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா.


சரி, கோபத்தை விடுவதற்கு வழியும் சொல்லியாகி விட்டது. ஏன் விட வேண்டும்? விட்டால் என்ன பயன். கோபித்து மனைவியை, கணவனை, பிள்ளைகளை, கீழே வேலை செய்யும் ஆட்களை நாலு திட்டு திட்டினால் பயந்து போய் வேலை செய்வார்கள். அதனால் ஒரு பலன் உண்டு. கோபத்தை விட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று அதையும் சொல்ல வேண்டும் அல்லவா?


அந்த இரண்டையும் இந்தக் குறளில் வள்ளுவப் பேராசான் கூறுகிறார். 


பாடல் 



உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்


பொருள் 


உள்ளியது  = மனதில் நினைத்தவை 


எல்லாம் = அனைத்தையும் 


உடன்எய்தும் = ஒன்றாக அடைவான் 


உள்ளத்தால் = மனத்தால் 


உள்ளான் = நினைக்காமல் 


வெகுளி எனின் = கோபத்தை என்றால். 


கொஞ்சம் சொற்களை இடம் மாற்றிப் போட்டால், 


மனதாலும் கோபத்தை ஒருவன் நினைக்காமல் இருந்தால், அவன் விரும்பியது எல்லாம் அவனுக்குக் கிடைக்கும். 


சரி, இதில் எங்கே கோபத்தை விட வழி சொல்லி இருக்கிறது? கோபத்தை விட்டால் வரும் பலன் எங்கே சொல்லி இருக்கிறது. 


ஒருவனுக்கு அவன் நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்பது பெரிய நன்மைதானே? 


அறம், பொருள் இன்பம், வீடு  என்ற அனைத்தும்  அவனுக்கு ஒருங்கே கிடைக்கும்.


யோசித்துப் பார்ப்போம். 


நேர்மையான வாழ்க்கை - அற வழியில் செல்லும் வாழ்வு. ஒரு பொய் கிடையாது, திருட்டு கிடையாது, சூது வாது கிடையாது...அறம் சார்ந்த வாழ்க்கை. 


என்னவெல்லாம் தேவையோ அவற்றை வாங்க பொருள் 


கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம் என்ற இல்லற சுகம். 


எல்லாவற்றையும் அனுபவித்து பின் வீடு பேறு.


இவை அனைத்தையும் தரும் என்றால் அது நல்லதுதானே?


மனதால் கூட கோபத்தை நினைக்காவிட்டால், இவை எல்லாம் கிடைக்கும் என்கிறார். இதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது ?


சரி, எப்படி கோபத்தை விடுவது ?


அதற்கு பரிமேலழகர் வேண்டும். அவர் இல்லாமல் நம்மால் இதை புரிந்து கொள்ள முடியாது. 


"உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்" என்று குறள் சொல்கிறது. கோபத்தை மனதால் நினைக்காமல்  என்று பொருள். 


பரிமேலழகர் கேட்கிறார், நினைப்பது என்றாலே அது மனதால் நினைப்பது தானே. பின் எதற்கு "உள்ளத்தால் உள்ளான் " எனின் என்று போட்டு இருக்கிறார்.  அதற்கு அவரே பதில் சொல்கிறார்.


இந்தக் குறள் இருப்பது துறவறம் என்ற பிரிவில். 


துறவியின் உள்ளம் அருள் உள்ளம்.  உயிர்கள் மேல் அன்பு கடந்து அருள் செலுத்தும் உள்ளம். அந்த அருள் நிறைந்த உள்ளத்தில் கோபம் வர வழியே இல்லை. கோபம் வருகிறது என்றால் அருள் முழுவதும் இல்லை என்று அர்த்தம். 


எனவே, கோபத்தை விட வேண்டும் என்றால், மனதில் அருள் வேண்டும். 


பிள்ளை தவறு செய்து விட்டால், அதன் மேல் உள்ள அன்பால் நாம் குழந்தையை கோபிப்பது இல்லை. அந்த அன்பு விரிந்து விரிந்து அருளாக மாற வேண்டும். அருள் உள்ளத்தில் நிறைந்து இருந்தால் அங்கே கோபம் இருக்க வழி இல்லை. 


ஒளி உள்ள இடத்தில் இருள் எங்கனம் இருக்கும். 


அருளை வளர்த்துக் கொண்டே போனால், கோபம் குறைந்து கொண்டே போகும்.


"ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் " என்று இறைவனை வேண்டுவார் வள்ளல் பெருமான். 


அன்பு பெருக பெருக, அருள் வளரும். 


அருள் வளர, வளர கோபம் தேயும். 


கோபம் தேய தேய மனதில் நினைத்தது எல்லாம் கிடைக்கும். 


எவ்வளவு அழகான, ஆழமான குறள்.





Monday, November 10, 2025

கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை

 கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை



மனைவியை இழக்கும் துயரம் பெரும் துயரம். என்னதான் அவளிடம் ஆயிரம் குறை இருந்தாலும், அவள் இல்லாத உலகம் ஒரு மிகப் பெரிய வெற்றிடமாக இருக்கும். ஒரு ஆண் மகனை மிகவும் பலவீனமாக்கும் ஒரு விடயம் என்றால் அது அவன் அவனுடைய மனைவியை இழப்பதுதான். 


எந்த பெரிய இழப்பையும் ஒரு ஆணால் தாங்க முடியும். ஆனால், மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கிறது. 


இராமனை விட மன உறுதி உள்ள ஆடவனை நாம் காட்ட முடியாது. நாடு கிடையாது, காட்டுக்குப் போ என்ற போது கூட கலங்காமல் நின்றவன், சீதையை பிரிந்த பின் தடுமாறுகிறான். அவன் உள்ளம் சோர்ந்து போகிறது. 


ஜாடாயு இறந்து கிடக்கிறார். ஏற்கனவே சீதையைப் பிரிந்த துன்பம். இப்போது தந்தை போன்ற ஜடாயு இழந்த துயரும் சேர்ந்து கொள்கிறது. இராமன் மனம் சோர்ந்து போகிறான். 


இலக்குவன் சொல்கிறான் 


"என்ன இராமா நீ இப்படி பேசுகிறாய்...இவ்வளவு சோர்ந்து, ஒரு சாதாரண மனிதன் போல் பேசுகிறாய்.சீதையை இழந்த துயரம், அதனால் வந்த சோகம், கோபம் எல்லாம் விடு.  நம்ம அப்பா போன்ற ஜடாயுவின் உயிரை எடுத்த அந்த இராவணனை கொல்ல வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் இது என்ன பேச்சு"


என்கிறான். 


பாடல் 




“எந்தை ஈது இயம்பிற்று என்னை?

    எண்மையன் ஆகி ஏழைச்

சந்த வார் குழலினாளைத்

    துறந்தனை தணிதி யேனும்,

உந்தையை உயிர் கொண்டானை

    உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச்

சிந்தையை ஆகின் நின்று,

    செய்வதென் செய்கை ‘‘ என்றான்


பொருள் 


“எந்தை = என் தந்தை போன்ற இராமனே 


ஈது = இந்த மாதிரி 


இயம்பிற்று என்னை? = என்ன பேசுகிறாய் ?


எண்மையன் ஆகி = தாழ்வு மனப்பாண்மை கொண்டு 


ஏழைச் = எளிமையான, பேதையான 


சந்த வார் குழலினாளைத் = நீண்ட குழலினை (தலை முடி) கொண்ட சீதையை  


 துறந்தனை = பிரிந்து இருக்கிறாய் 


தணிதி யேனும் = அதனால் வந்த சோகத்தையும், கோபத்தையும் விட்டு 


உந்தையை உயிர் கொண்டானை = உன் தந்தையின் உயிரை எடுத்தவனை 


உயிர் கொள்ளும் = அவன் உயிரை எடுக்கும் 


ஊற்றம் = வலிமை 


இல்லாச் = இல்லாத 


சிந்தையை ஆகின் நின்று = எண்ணங்களைக் கொண்டு நின்று 


செய்வதென் செய்கை ‘‘ = செய்கின்ற இந்த செயல் என்ன 


என்றான் = என்று இலக்குவன் கேட்டான் 


ஆறுதல் சொல்லுவதும் ஒரு கலை தான். 


இராமன் சோகத்தில் இருக்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று இலக்குவனும் அவனைக் கட்டிக் கொண்டு அழுதால் என்ன ஆகும்?  இராமாயணம் அங்கேயே முடிந்து போய் இருக்கும். 


யாராவது சோர்ந்து இருந்தால், அவர்களை தட்டி எழுப்பி, உற்சாகப் படுத்தி அதில் இருந்து மீள வழி செய்ய வேண்டும். ஐயோ பாவம் என்று அவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் காரியம் நடக்காது. 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். 


அப்படி இராமன் என்ன சொன்னான் ?