Sunday, June 15, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்

கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல் 



இராவணன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் இருக்கும் அந்த மணி மண்டபத்தை வர்ணிக்க வேண்டும். 


கம்பன் என்ன சொல்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் அறிந்தவரை ஒரு மண்டபத்தை எப்படி எல்லாம் வர்ணிக்கலாம்?


விண் வரை உயர்ந்த மாளிகை, மேகம் வந்து இளைப்பாறிப் போகும் முற்றம், ஒளி வீசும் மண்டபம், இமய மலை போல் உறுதியானது என்றெல்லாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


கம்பன் சொல்லும் உவமை நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உவமை. 


அந்த மண்டபம் தேவ தச்சன், விஸ்வகர்மா உருவாக்கியது. 


சரி. அது என்ன பெரிய விடயம். 



அவன் படைக்கும் கடவுளான பபிரமனாலும் முடியாத அளவுக்கு சிறப்பாக படைப்பான். 


ஓ, அப்படியா.  பெரிய ஆள் தான். 


அவன் நாம் என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்கிறோமோ, அது போலத் கட்டித் தருவான். 


சரி, அதில் என்ன சிறப்பு இருக்கிறது. 


அவன் நாம் மனதில் நினைப்பதை எல்லாம், வேண்டியதை எல்லாம் தருவான், எப்படி என்றால் அறம் எப்படி ஒருவனுக்கு வேண்டியன எல்லாம் தருமோ, அப்படி.


எங்கிருந்து எங்கே போகிறான் கம்பன். கிடைத்த சின்ன இடைவெளியில் அறத்தின் உயர்வை சொல்லிவிட்டுப் போகிறான். 


அறம் எப்படி வேண்டியன எல்லாம் தருமோ, அது போல் தேவதச்சன் அந்த மண்டபத்தை செய்தான்.


பாடல் 



 நிலை இலா உலகினிடை நிற்பனவும்

    நடப்பனவும் நெறியின் ஈந்த

மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,

    நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்

உலைவு இலா வகை உழந்த தருமம் என,

    நினைந்த எலாம் உதவும் தச்சன்

புலன் எலாம் தரெிப்பது, ஒரு புனை மணி

    மண்டபம் அதனில் பொலிய, மன்னோ.


பொருள் 




நிலை இலா = நிரந்தரம் இல்லாத 


 உலகினிடை = இந்த உலகில் 


நிற்பனவும் = அசையாதனவும் 


நடப்பனவும் = அசையும் தன்மை கொண்ட பொருள்களும் 


நெறியின் = உயர்ந்த வழியில் 


ஈந்த = உருவாக்கிய 


மலரின் = திருமாலின் நாபிக் கமலத்தில் 


மேல் = இருந்து உருவான, அல்லது இருக்கும்  


நான்முகற்கும் = நான்கு முகங்கள் கொண்ட பிரமனுக்கும் 


வகுப்பு அரிது = செய்வது கடினம் 


நுனிப்பது = நுண்ணிய, நுட்பமான 


ஒரு வரம்பு இல் = எல்லையில்லா 


ஆற்றல் = திறமை 


உலைவு இலா வகை = தீமை இல்லாத வழியில்  


உழந்த தருமம் என = செய்த அறத்தைப் போல  போல

 

நினைந்த எலாம் = மனதில் நினைத்ததை எல்லாம் 


உதவும் தச்சன் = செய்து தரும் தேவ தச்சன் 


புலன் எலாம் = தன் அறிவு அனைத்தையும் 


தெரிப்பது = தெரிய, வெளிப்பட 


ஒரு = கட்டிய ஒரு 


புனை மணி = மணிகள் பதிக்கப் பெற்ற 


மண்டபம் = மண்டபம் 


அதனில் பொலிய, மன்னோ = அதில் பொலிவுடன் வீற்றிருந்தான் 


தருமம் என்கிறான் கம்பன். அதை பிறருக்கு உதவும் தான தர்மம் என்று கொண்டாலும் சரி, செய்யக் கூடிய தருமம், அறம் என்று கொண்டாலும் சரி அர்த்தம் பெரிதாக மாறாது. அறம் சிறப்பு. 


அறம், வேண்டியன எல்லாம் தரும் என்ற போதனையை இங்கே வைக்கிறான். 


கிடைக்கும் இடமெல்லாம் அறம் பேசியது நம் இலக்கியங்கள். 

Wednesday, June 11, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம்

 கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம் 



இந்தக் காலத்துத் திரைப்படங்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது பயங்கர build up இருக்கும். அவருடைய காலைக் காட்டி, அவர் வரும் காரைக் காட்டி, அவர் இருக்கும் பெரிய வீட்டைக் காட்டி, ஒரு பிரமாண்டத்தை மனதில் ஏற்படுத்துவார்கள். 


கதாநயாகன் பெரிய ஆள் என்று காட்டும் உத்திகள். 


இதெல்லாம் கம்பனின் முன் தூசு. 


கதாநாயகனை விடுங்கள். வில்லன் இராவணனை, கம்பன் அறிமுகப் படுத்தும் விதத்தைப் பார்த்தால் அசந்து போவோம். 


அப்பேற்பட்ட பெரிய வில்லனை பின்னாளில் கதாநயாகன் வீழ்த்தினான் என்றால் கதாநாயகனாகிய இராமனின் பெருமை எவ்வளவு என்று சொல்லாமலேயே விளங்கும். 


இராமன் ஏதோ ஏப்பை சாப்பையான ஒரு மெலிந்த நலிந்த ஒருவனை வெற்றி கொள்ளவில்லை என்று காட்டவும் அது உதவும். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை இலங்கைக்குள் நுழைகிறாள். இராவணனைப் பார்த்து அவனிடம் முறையிட வேண்டும். சூர்பனகையின் எண்ணம் எல்லாம் இராமனை அடைவது. அதற்கு சீதை தடையாக இருக்கிறாள் என்று சூர்பனகை எண்ணினாள். சீதையை இராமனிடம் இருந்து பிரித்து விட்டால், இராமன் தன்னிடம் காதல் கொள்வான் என்பது சூர்பனகையின் எண்ணம். 


எனவே, இராவணனிடம், சீதையின் மேல் காதல் கொள்ளச் செய்து அவளை இராவணன் தூக்கி வந்து விட்டால், பின் இராமன் தனியனாவான், தன் மேல் காதல் கொள்வான் என்ற எண்ணத்தோடு வருகிறாள். 


சூர்பனகை இலங்கைக்குள் வருகிறாள்....கம்பனின் கவிதைகள் மடை திறந்த வெள்ளம் போல் வர இருக்கிறது. 


பாடல் 


இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை

     மறந்தனள், போர் இராமன் துங்க

வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை

     மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,

திரைப் பரவைப் பேர் அகழித் திண்

     நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை

உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான்

     இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.


பொருள் 



இரைத்த = ஆராவரம் செய்யும்


நெடும் படை = பெரிய படை 


அரக்கர் = அந்தப் படையில் உள்ள அரக்கர்கள் 


 இறந்ததனை = இராமனோடு சண்டையிட்டு இறந்ததை (கரன் முதலிய வீரர்கள். அது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம்) 

 

மறந்தனள் = சூர்பனகை மறந்து விட்டாள் 


போர் இராமன் = போரில் வல்ல இராமனின் 


துங்க வரைப் = பெரிய மலை போன்ற 


புயத்தினிடைக் = தோள்களுக்கு இடையே 


கிடந்த பேர் ஆசை = அணைத்து கிடக்கும் பேராசையால் 


மனம் கவற்ற = மனம் வருந்தி (அது முடியாமல் போனதால்) 


ஆற்றாள் ஆகி = அந்த வருத்தத்தை பொறுக்க முடியாமல் 


திரைப் = அலைகளை எழுப்பும் 


 பரவைப் = கடல் 


பேர் அகழித் = பெரிய அரணாகக் கொண்ட 


திண் நகரில்  = சிறந்த நகரில் (இலங்கையில்) 


கடிது ஓடி = வேகமாக ஓடி 


'சீதை தன்மை உரைப்பென்' = சீதையின் அழகை சொல்லுவேன் 


எனச் = என்று 


சூர்ப்பணகை வர = சூர்பனகை எதிரில் வர 


இருந்தான் = இராவணன் இருந்தான் 


இருந்த பரிசு = அவன் இருந்த நிலையை 


உரைத்தும் = சொல்லுவோம் 


மன்னோ = அசைச் சொல் 


காமம் தலைக்கு ஏறினால் என்ன ஆகும் என்று இந்தப் பகுதியில் கம்பன் வெகு விரிவாக சொல்ல இருக்கின்றான். 


சூர்பனகைக்கு, இராமன் மேல் காதல். அவனை அடைய சீதை தடை என்று அவள் நினைத்தாள். எனவே சீதையை இராவணன் கொண்டு வந்து விட்டால் தான் இராமனை அடையலாம் என்பது அவள் கணக்கு. 


இதில் சில நுண்ணிய விடயங்களை நாம் சிந்திக்கலாம். 


மாற்றான் மனைவியை நினைப்பது, கவர்வது அறம் அற்ற செயல் என்று நாம் படித்து இருக்கிறோம். முதன் முதலாக, மாற்றாள் கணவனை நினைக்கும் ஒரு பெண் பாத்திரத்தை சந்திக்கிறோம். 


இராவணன் செய்த தவறுக்கு மூல காரணம் சீதையின் கணவனை சூர்பனகை விரும்பியது. 


இரண்டாவது, வைணவ சம்ப்ரதாயத்தில் பெருமாளையும், பெருமாட்டியையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சூர்பனகை, பெருமாட்டியான சீதையை, பெருமானான இராமனிடம் இருந்து பிரிக்க முயல்கிறாள். அது பாவம். அதன் விளைவு என்ன என்று அறிவோம். 


மேலும், கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது. அதில் மூன்றாவது மனிதருக்கு வேலை இல்லை. சூர்பனகை அந்த உறவுக்குள் மூக்கை நுழைத்தாள். இழந்தாள். 


இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. காப்பியத்தின் ஓட்டத்தோடு அவற்றை சிந்திப்போம். 


(மிக நீண்ட பகுதி. எதையும் விட மனமில்லை. வாசிக்க உங்களுக்குப் பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. சோர்வடைந்தால் சொல்லுங்கள்).  



Tuesday, June 10, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம்

 கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம் 


மாரீசன் வதைப் படலம் என்றவுடன் நமக்கு என்ன நினைவுக்கு வரும்?


இராவணன், மாரீசனை மாய மானாகப் போகச் சொன்னான். சீதை அந்த பொன் மானைப் பிடித்துத் தரச் சொன்னாள். இராமன், மான் பின் போனான். பின் இலக்குவன் போனான். இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் வந்து சீதையை தூக்கிச் சென்றான். இராமனின் அம்பு பட்டு மாரீசன் இறந்தான். 


இவ்வளவுதானே நமக்குத் தெரியும். 


இந்தப் பகுதியை கம்பன் எழுதியிருக்கும் விதத்தைப் படித்தால், கம்பன் மிகவும் இரசித்து இரசித்து எழுதிய பகுதி மாதிரி தோன்றும். 


அறம், இலக்கியம், மனோ தத்துவம், அரசியல் கோட்பாடு, வீரம், தன்னிரக்கம், காமம், என்று வண்ணமயமாக தீட்டி இருக்கிறான். 


நீண்ட ஒரு காப்பியத்தைப் படிக்கும் போது, இது போன்ற பகுதிகளை வேகமாக தள்ளிவிட்டு விட்டு மேலே போய் விடுவோம். 


என்ன அவசரம். எங்கே போகப் போகிறோம். நிறுத்தி நிதானமாக இரசிப்போமே. 


எந்நேரமும் ஓட்டமும், நடையுமாக ஒரு வித பதட்டத்திலேயே வாழ்க்கை கழிகிறது. 


இந்த உலகை விட்டு விட்டு வாருங்கள். கம்பன் காட்டும் அந்த அற்புத, மாயா உலகத்துக்குள் சென்று வருவோம். 


ஒவ்வொரு பாடலும் தேன். 


அடடா அடடா என்று ஒவ்வொரு பாடலும் அத்துணை அற்புதம். 


வாருங்கள். அனுமதி இலவசம். 



Friday, May 30, 2025

திருக்குறள் - சினம் எனும் தீ

 திருக்குறள் - சினம் எனும் தீ 



நீங்கள் இருக்கும் ஊரில் சாமான்கள் வைத்து இருக்கும் ஒரு கிடங்கில் தீ பிடித்து விடுகிறது. கிடங்கில் உள்ள பொருள் எல்லாம் எரிந்து சாம்பாலாகி விடுகிறது.


இது போன்ற செய்திகளை கேட்டும் பார்த்தும் இருக்கிறோம். 


போன வருடம் பிடித்த தீயில், இந்த வருடம் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது என்று கேட்டு இருகிறீர்களா. இப்போது தீ பிடித்தால், இப்போதுதான் சேதம் இருக்கும். மாறாக ஒரு வருடம் கழித்து சேதம் வருமா? வராது. 


அது போல 


டெல்லியில் தீ பிடித்தது, அதனால் மும்பையில் உள்ள பொருள்கள் சேதம் ஆனது என்று கேட்டு இருக்கிறோமா? எங்கு தீ பிடிக்கிறதோ, அங்குதான் சேதம் விளையும். 


ஆனால் இந்த சினம் என்ற தீ இருக்கிறதே...


அது, இந்தப் பிறவியில் கோபத்தால் செய்த செயல்களுக்கு, இந்தப் பிறவியில் பின்னாளில் மட்டும் அல்ல இனி வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்பம் செய்யும். ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்தும் போது நினைத்துக் கொள்ள வேண்டும், எந்தப் பிறவியில் செய்த பாவமோ இன்று வந்து சேர்ந்திருக்கிறது என்று. 


நாம் கோபம் கொண்டால், அதனால் தீமை நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் சுடும். 


இராவணன், துரியோதனன் போன்றோர் கொண்ட கோபத்தால் அவர்கள் மட்டுமா அழிந்தார்கள்?  அவர்கள் குலமே அழிந்தது. 


பாடல்  



சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்


பொருள் 


சினமென்னும் = சினம் என்று சொல்லப்படும் 


சேர்ந்தாரைக் = அதைக் கொண்டவர்களை 


கொல்லி = கொல்லும் குணமுடைய 


இனம்என்னும் = தன் சுற்றம் என்ற 


ஏமப் = காவல் 


புணையைச் = தெப்பத்தை, மிதப்பை 


சுடும் = எரித்து விடும் 


சேர்ந்தாரைக் கொல்லி = சினம் தன்னைச் சேர்ந்தவர்களை கொல்லும்.


அடடா, இவர் தான் என்னை தோற்றுவித்தார். இந்த வீட்டில் தான் நான் பிறந்தேன் என்று நன்றியெல்லாம் பார்க்காது. எந்த தீக் குச்சி நெருப்பை உண்டாக்குகிறதோ, அந்தக் குச்சியை அது முதலில் எரிக்கும். எந்தப் பந்தம் தீயை உண்டாக்குகிறதோ, அந்தப் பந்தத்தை தீ முதலில் எரித்து சாம்பலாக்கும். அது போல, சினம் எங்கே உண்டாகிறதோ, அந்த இடத்தை அது முதலில் எரிக்கும். 


தன்னைச் சேர்ந்தவர்களைக் கொல்லும்.


"இனம் எனும்":  இனம் என்றால் வேறு சுற்றம் மட்டும் அல்ல. ஒருவனைச் சேர்ந்த கூட்டம், குழு. நட்பு, சுற்றம், அரசன் என்றால் அவனுக்கு கீழே உள்ள குடிகள், ஒரு நிறுவனத் தலைவன் என்றால் அங்கே வேலை செய்பவர்கள். ஒருவனுக்கு சினம் வந்தால், அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த கூட்டத்தையே கெடுக்கும். 


சுடும் : இப்போது மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் சுடும். நான் அதிகாரத்தில் இருக்கிறேன். எனக்கு கீழே உள்ளவர்களிடம் நான் கோபித்து என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன், செய்வேன். என்னை யார் என்ன கேட்க முடியும் என்று நினைக்கலாம். இயற்கை பொறுத்து இருக்கும். வேலை போன பின் வந்து தாக்கும். இல்லை என்றால் அடுத்த பிறவிக்கு வரும். சுடாமல் விடாது. 


இந்தக் குறள் துறவறத்தில் வருகிறது. முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஏது உறவு?  அவர்களுக்கு என்ன இனம் இருக்கும்?


பரிமேலழகர் கூறுகிறார் 


துறவிகளுக்கு, அவர்களுக்கு நல்லது சொல்லி முக்திக்கு வழி வகுக்கும் பெரியோர்கள், துறவிகளை பின் பற்றும் சீடர்கள் அல்லது பக்தர்கள் என்ற இனம். அந்த இரண்டையும் ஒரு துறவி கொண்ட சினம் கெடுத்து விடும். 


சினம் என்ற சேர்ந்தாரைக் கொல்லி....சினமே போய் கொல்லாது. அதற்கு என்ன கை காலா இருக்கிறது போய் கொல்வதற்கு?  இங்கே சினம் என்றது சினம் கொண்டவரை. சினம் கொண்டவர் தன்னை அழித்துக் கொள்வது மட்டும் அல்ல, தன்னைச் சேர்ந்தவர்களையும் அழிப்பான் என்றவாறு. 




Tuesday, May 20, 2025

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன் 



நான் சில வயதானவர்களைப் பார்த்து இருக்கிறேன். 


எப்போது பார்த்தாலும், "முடியலை, எப்படா இந்த உலகத்தை விட்டுப் போவோம் என்று இருக்கிறது" என்று சலித்துக் கொள்வார்கள். சொல்லி ஒரு சில மணி நேரம் கூட இருக்காது, "சூடா ஒரு கப் காப்பி கொடேன்" என்று வந்து நிற்பார்கள். 


மூன்று வேளைச் சாப்பட்டில் ஒரு குறை இருக்காது. காப்பி, டீ என்று உள்ளே போய்க் கொண்டிருக்கும். நடு நடுவில் கொஞ்சம் நொறுக்குத் தீனி வேற. கேட்டால் அந்த பெருமாள் என்னை எப்போ கூப்பிடுவான் என்று இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். 


இந்த உலகை விட்டுப் போக யாருக்கும் மனம் இல்லை. காரணம் வேறு வேறாக இருக்கலாம்...பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டால், சிவனேன்னு கிளம்பிறலாம் என்று சொல்லுவார்கள். அப்புறம், அவளுக்கு ஒரு பிள்ளை பொறக்கட்டும், பேரனை பார்த்துவிட்டுப் போகிறேன் என்பார்கள், அப்புறம் அது பள்ளிக் கூடம் போகட்டும் என்பார்கள். அப்புறம் "நான் போய்ட்டா அவரை/அவளை யார் பாத்துப்பா" என்று காரணம் சொல்லுவார்கள். 


மொத்தத்தில் போக மனம் இல்லை. 


வெளியே கேட்டால் கோவிந்தா, கிருஷ்ணா, சிவனே, முருகா, என்னை எப்ப கூப்டுக்கப் போற என்று டயலாக். 


இதுதான் உண்மை என்று ஆழ்வாரே சொல்கிறார். 

"எப்பப் பார்த்தாலும் எப்பப் போறது, எப்பப் போறதுன்னு பொய் சொல்லிக் கொண்டு திரிகிறேன். எனக்கு ஒன்றும் போக ஆசையில்லை. உலக இன்பங்களில் நன்றாக திளைத்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். ஏதோ உன் கருணை கிடைத்ததால் நல் வழிப் பட்டேன். நீ உன் அருள் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யார் தடுக்க முடியும். ஒரு வழியாக உன்னை வந்து அடைந்து விட்டேன். இனிமேல் உன்னை விட்டுப் பிரிய முடியாது. என்னை விட்டு விட்டுப் போய் விடாதே" என்று உருகுகிறார். 


பாடல் 

  


  கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று

        பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி

        மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?

        ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.


பொருள் 


கையார் = கையில் 


சக்கரத்து = சக்கரத்தை கொண்ட 


என் கருமா ணிக்கமே! = என்னுடைய கருமையான மாணிக்கமே 


என்றென்று = என்று போவேன், என்று போவேன், என்று 


 பொய்யே கைம்மை சொல்லிப் = பொய்யாக சொல்லிக் கொண்டு 


புறமேபுற மேஆடி = ஊருக்குள் நன்றாக ஆட்டம் போட்டு (அனுபவித்து) 


மெய்யே பெற்றொழிந்தேன் = கடைசியில் உண்மையனா உன்னை பெற்று விட்டேன் 


விதிவாய்க் கின்று  = விதி வாய்கின்றது. உன் அருளைப் பெற வேண்டும் என்ற விதி இருந்தால் 


காப்பார்ஆர்? = அதை யாரால் தடுக்க மூடியும் 


 ஐயோ! = ஐயோ 


கண்ண பிராஅன்!  = கண்ணபிரானே 


அறையோ! = தாங்க முடியுமா 


 இனிப் போனாலே = இனி நீ என்னை விட்டுப் போய்விட்டால் 


சில சமயம், உண்மையின் தரிசனம் கிடைக்கும். இதுதான் என்று நினைப்போம். நொடியில் கை விட்டுப் போய் விடும்.  இறை தரிசனமும், அருளும் நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அருள் கிடைத்தாலும், நாம் அதை விட்டு விட்டு உலக வாழ்க்கையில் மூழ்கி அதை மறந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. 


மணிவாசகருக்கு இறைவனே நேரில் வந்து அருள் பாலிக்க வந்தார். மணிவாசகர் இறைவனைக் கண்டார். அவர் பின்னால் போகாமல், குதிரை வாங்கப் போய் விட்டார். 


உயர்ந்தவற்றை விட்டு விட்டு அற்ப சுககங்களின் பின்னால் போய் விடுகிறோம். 


நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு தெருவுக்குத்தான் போகும் என்பார்கள். 


மணிவாசகர் தன்னை நாய் என்று பல முறை கூறிக் கொள்வார். 


"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு"


"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து"


ஆழ்வார் உருகுகிறார். கண்ணா, உன் அருள் கிட்டியது ஏதோ விதிவசம். அதை நான் விட்டு விடாமல் இருக்க நீ தான் அருள் செய்ய வேண்டும். உன் அருள் இல்லை என்றால் நான் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன் என்கிறார். 


நமக்காக அவர் சொன்னது. 


எப்போதேனும் உண்மையின் தரிசனம் கிடைப்பின், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 


"சிக்கெனப் பிடித்தேன்" என்று பிடித்துக் கொள்ளுங்கள். 

Saturday, May 17, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து

 திருவாசகம் - அதிசயப் பத்து 




நாம் ஒரு சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கே வரும் ஒருவர், "இந்தப் பக்கம் எங்க போறீங்க?" என்று நம்மிடம் விசாரிக்கிறார். 


நாம் "இன்ன இடம் என்று குறிப்பாக இல்லீங்க...சும்மா இப்படியே போய்க் கொண்டிருக்கிறேன்.." என்கிறோம். நமக்கே அந்தப் பதில் ஒரு மாதிரியாக இருக்கிறது. 


அவர்: "என்னங்க இப்படிச் சொல்றீங்க...போகிற இடம் எதுவென்று தெரியாமல் கால் போன போக்கிலே போனால் என்னங்க அர்த்தம்"


நாம்: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இந்தச் சாலையில் நல்ல நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன, சினிமா கொட்டகைகள் இருக்கின்றன, ஐஸ் கிரீம், இன்னிப்பு வகையாறக்கள் நிறைய கிடைக்கும். அங்கங்கே தெருவோரம் வடை, பஜ்ஜி எல்லாம் சுடச் சுட தருவார்கள். இந்த சாலைக்கு என்ன குறை...இதில் போனால் என்ன ...என்று கேட்கிறோம். 


அவர்: சரிங்க...போற இடமும் தெரியாது, போற வழியும் சரியில்ல...இத்தனையும் சாப்பிட்டால் உடம்பு என்ன ஆகும்?  அது மட்டும் அல்ல, இந்த சாலையில் பிக் பாக்கெட் அடிப்பவர்கள், ப்ளேடு போடுபவர்கள், அந்த மாதிரி பெண்கள் எல்லாம் இருப்பாங்க...இது சரியான வழி இல்லை...நான் உங்களுக்கு போகும் இடமும் நல்ல வழியும் சொல்லியும் தருகிறேன் என்கிறார். 


நாம்: ஐயா, நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து எனக்கு நல்ல ஒரு வழியை காட்டினீங்க...ஆமா நீங்க யாரு ?


அவர்: நானா, இந்த ஊர் தான்...எனக்கு எல்லா வழியும் தெரியும்...


அதிசயமாக இல்லை?  கால் போன பாதையில், குறி ஒன்றும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்த நம்மை தடுத்து, போகும் இடம் காட்டி, போகும் வழியும் காட்டும் ஒருவர் வந்தால் அது எப்படி இருக்கும்?


பாடல் 


இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்

பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை

தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ

அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


இருள் திணிந்து = அறியாமை என்ற இருள் நிறைந்து 


எழுந்திட்டது = புறப்பட்டது 


ஓர் வல்வினைச் = வஞ்சனையை செய்யும் வினைகள் 


சிறு குடில், இது: = வாழும் ஒரு சிறு குடில் இது (இந்த உடல்) 


இத்தைப் = இதைப் போய் 


பொருள் எனக் களித்து = ஏதோ பெரிய விஷயம் என்று கருதி 


அரு = கொடுமையான 


நரகத்திடை = நரகத்தில் போய் 


விழப் புகுகின்றேனை = விழ இருந்த என்னை 


தெருளும் = தெளிவாகத் தெரியும் 


மும்மதில் =  = மூன்று சுவர்களைக் கொண்ட அந்த அரக்கர்களின் உலகத்தை 


நொடி வரை = ஒரு நொடியில் 


 இடிதர = இடித்துச் தள்ளி 


சினப் பதத்தொடு = சினம் கொண்டு 


செம் தீ = நெற்றிக் கண் அனலை 


அருளும் = அருள் செய்யும் 


மெய்ந்நெறி = மெய்யே வடிவாகக் கொண்ட ஈசன் 


பொய்ந்நெறி நீக்கிய = என்னுடைய பொய்யான வாழ்க்கை முறைகளை நீக்கிய 


அதிசயம் கண்டாமே! 


அவன் தான் வழி. அவன் தான் இலக்கு.


அதிசயப் பத்து நிறைவு பெற்றது.



Friday, May 16, 2025

திருக்குறள் - வெகுளாமை - பகைவன்

 திருக்குறள் - வெகுளாமை - பகைவன் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/05/blog-post_16.html



நமக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நினைத்தாலே நமக்கு ஒரு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. நன்றாக சிரித்து, மகிழ்ந்து கொண்டிருப்போம், திடீரென்று அவன் வந்து விட்டால் நம் முகத்தில் உள்ள சந்தோஷம் அனைத்தும் போய் விடும். அவன் நேரில் வர வேண்டும் என்று கூட இல்லை, அவன் நினைப்பு வந்தாலே போதும், நம் சந்தோஷம் வறண்டு விடும். 


அப்படி நமக்கு இருக்கும் எதிரிகளிலேயே பெரிய எதிரி யார் தெரியுமா? 


கோபம். 


கோபம் தான் நமது முதல் எதிரி.


ஏன்?


எதிரி என்ன செய்வான்?  


நம் முகத்தில் உள்ள சிரிப்பை அழிப்பான். மனதில் உள்ள சந்தோஷத்தை அழிப்பான். 


கோபமும் அதைத்தான் செய்கிறது. 


கோபம் கொண்ட ஒருவரின் முகத்தைப் பார்த்தால் தெரியும். அதில் ஒரு துளி கூட புன்னகை இருக்காது, ஒரு சின்ன சந்தோஷம் கூட இருக்காது. 


பாடல் 


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற


பொருள் 


நகையும் = சிரிப்பையும் 


உவகையும் = சந்தோஷத்தையும் 


கொல்லும் = நீக்கும் 


சினத்தின் = கோபத்தைவிட 


பகையும்  உளவோ பிற = வேறு ஒரு பகையும் உள்ளதோ ? (இல்லை)


இந்தக் குறள் துறவறத்தில் உள்ளது. 


துறவிக்கு ஏது பகைவன்? அவரோடு யார் போய் சண்டைப் போடப் போகிறார்கள். 


பரிமேலழகர் சொல்கிறார், 


துறவிக்கு வெளிப் பகை இல்லை. உள் பகை உண்டு. வெளிப் பகை என்ன செய்யுமோ, அதையே உள் பகையும் செய்யும் என்கிறார். 


மேலும், நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், துறவி என்றால் கடினமான வாழ்க்கை, சந்தோஷமே இருக்காது, ஒரு வறண்ட வாழ்க்கை, என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம். 


வள்ளுவர் சொல்கிறார், துறவிகளிடம் நகையும் (சிரிப்பு) உவகையும் எப்போதும் இருக்குமாம். அதை இந்த சினம் கொன்று விடுவதால், அது ஒரு பகை என்கிறார். 


துறவறத்தில் மிகுந்த இன்பம் இருக்கிறது என்று சொல்லமால் சொல்கிறார். 


ஏன் உவகை, என்ன சந்தோஷம்?


இனி பிறவி கிடையாது என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? அதை விட பெரிய நல்ல செய்தி என்ன இருக்க முடியும்?


துறவி ஆகிவிட்டால், பணம் சேர்க்க வேண்டும், அதைப் பாதுக்காக வேண்டும், அதைத் தருபவனிடம் பல்லைக் காட்ட வேண்டும், அதை பிடுங்கிக் கொண்டு போகிறவனிடம் பயப்பட வேண்டும், உறவுகளில், நட்பில் உள்ள சிக்கல்கள் என்று எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். ஒரு கவலையும் இல்லை. 


கண்மூடி தியானிக்க வேண்டிய குறள்.