திருவருட்பா - நடுக்கம்
சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய மகன் ஏதோ வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். என்னதான் விளையாடுகிறான் என்று பார்த்தேன்.
ஏதோ சேசிங் கேம் போல. பைக்கில் செல்லும் ஒருவன், முன்னால் செல்லும் ஒரு ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து, அதில் உள்ள ஒரு நோயாளியை வெளியே இழுத்து, பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு, பைக்கில் பறக்கிறான். போகிற வழியில் தெருவில் சும்மா போய் கொண்டு இருப்பவர்களை காலால் எட்டி உதைத்து கீழே விழ வைக்கிறான். பைக்கில் செல்லும் மற்றவர்கள் மேல் வண்டியை விட்டு ஏத்துகிறான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டேன். அவனோ, கேம் அங்கிள் ...என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் சாலையில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு அதில் ஒரு வருத்தமோ, கவலையோ இல்லை. நோயாளியை பாலத்தின் மேல் இருந்து தள்ளி விடுவது என்ன விளையாட்டோ தெரியவில்லை.
சின்னப் பையன். வீடியோ கேம் விளையாடுகிறான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம்.
பெரியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்று வரும் சினிமா, டிவி சீரியல்கள் போன்றவற்றில் வரும் வன்முறைக்கு அளவே இல்லை. தலையை சீவுவதும், இரத்தம் சொட்ட சொட்ட வெட்டுவதும், வெடி வைப்பதும், கையை காலை முறிப்பதும்....வன்முறை எல்லை மீறி காட்டுகிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விடும். சாதாரண வன்முறையில் ருசி குறைந்து மேலும் மேலும் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும்.
மனம் மரத்து, இறுகிப் போய் விடும். உயிர்கள் மேல் அன்பு போய் விடும். கருணை வற்றும்.
வள்ளல் பெருமான் சொல்கிறார்....
"மீனவர்கள் மீன் வலையும், தூண்டிலும் கொண்டு போவதைப் பார்த்து உள்ளம் நடுங்கினேன்" என்கிறார்.
ஐயோ, இவ்வளவு மீன்கள் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறி துடி துடித்து இறக்குமோ என்று என்று பதறுகிறார். மீனவர்கள் இன்னும் மீனைப் பிடிக்கவில்லை. மீன்கள் சாகவில்லை. சாகுமே, என்று நினைத்து வருந்துகிறார்.
அந்தத் தூண்டிலையும், வலையையும் கொலை கருவிகளாக பார்க்கிறார்.
உயிர்கள் மேல் எவ்வளவு கருணை இருந்தால் ஒரு மனிதன் இவ்வளவு துடிக்க முடியும்.
பாடல்
துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
என் தந்தை நின் திரு உளம் அறியும்.
பொருள்
துண்ணெனக் = துடித்து எழுந்து
கொடியோர் = கொடியவர்கள்
பிற உயிர் கொல்லத் = பிற உயிர்களைத் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் = தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். இவரைக் கொல்ல வில்லை. மற்ற உயிர்களை கொல்வதை அறிந்து இவர் பயப்படுகிறார்.
கண்ணினால் = என்னுடைய கண்களால்
ஐயோ = ஐயோ
பிற உயிர் பதைக்கக் = பிற உயிர்கள் பதை பதைக்க துடிப்பதை
கண்ட காலத்திலும் பதைத்தேன் = கண்ட போது பதைத்தேன்
மண்ணினில் = மண்ணில் (கடற் கரையில்)
வலையும் = மீன் பிடிக்கும் வலையும்
தூண்டிலும் = தூண்டிலும்
கண்ணி = மீன் பிடிக்கும் கண்ணிகளும்
வகைகளும் = அது போன்ற கருவிகளையும்
கண்ட போதெல்லாம் = ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
எண்ணி = அவை எப்படி எல்லாம் உயிர்களை வதைக்குமோ என்று எண்ணி
என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் = என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
என் தந்தை நின் திரு உளம் அறியும் = என் தந்தை போன்றவனே, நீ அறிவாய்
.
மற்ற உயிர்களுக்கு துன்பம் வருமே, இவர்கள் துன்பம் செய்வார்களே என்று இவர் பதறுகிறார்.
ஜீவ காருண்யத்தின் உச்சம்.