திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து
தினமும் உடற் பயிற்சி செய்யணும்னு நினைக்கிறேன். எங்க முடியுது, ஏதாவது ஒரு தடங்கல்.
ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது படிக்கணும்னு நினைக்கிறேன், எங்க முடியுது...whatsapp செய்தி, டிவி, நண்பர்கள் தொலைபேசி என்று ஏதாவது வந்து குழப்பி விடுகிறது.
கணவன்/மனைவி/பிள்ளைகள் கூட நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்க முடியுது. எனக்கு நேரம் இருக்கும் பொழுது அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனக்கு இல்லை.
என்ன செய்தாலும் ஏதாவது குத்தம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவன்/மனைவி. எப்படித்தான் அன்பாக இருப்பது. அன்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், முடிய மாட்டேன் என்கிறதே...
என்று இப்படி நமக்கு நாளும் பல சிக்கல்கள் வருகின்றன.
இவற்றை மீறி எப்படி நாம் நினைத்ததை செய்வது?
நமக்கு மட்டும் அல்ல, மணிவாசகருக்கும் இந்த சிக்கல் இருந்திருக்கிறது.
இறைவன் மேல் பக்தி செய்ய வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்தார். முடியவில்லை. ஏதோ ஒரு வேலை வந்து குழப்பிக் கொண்டே இருந்தது.
என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒரு வழியும் கண்டு பிடித்து விட்டார். கண்டு பிடித்தது மட்டும் அல்ல, அதை நமக்கும் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.
அது என்ன வழி தெரியுமா ?
செய்ய முடியாவிட்டாலும், செய்வது போல நடி. நாளடைவில் அந்த நடிப்பே நிஜமாகி விடும்.
புரியவில்லையா?
படிக்க முடியவில்லையா ? ஒரு பிரச்சனையும் இல்லை. படிப்பது போல நடி. தினமும் சும்மா இரண்டு மணி நேரம் படிப்பது போல பாவனை பண்ணு. புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு சும்மா இரு. படம் பாரு. ஒண்ணும் படிக்க வேண்டாம். இப்படி செய்து கொண்டிருந்தால், நாளடைவில் இந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிர படிப்பில் கொண்டு போய் விட்டு விடும்.
மனைவி மேல் கோபமும், எரிச்சலும் வருகிறதா? அவள் மேல் அன்பாக இருப்பது போல் நடியுங்கள். அவள் செய்த சமையலை பாராட்டுங்கள். அவள் உடையை இரசியுங்கள். அவள் வீட்டாரைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள். உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த நடிப்பு நாளடைவில் உண்மையாக மாறிவிடும்.
பிள்ளை சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறானா? அவன் நல்லவன் என்று நினைத்து அவனை நடத்துங்கள். அவனிடம் அன்பு செலுத்துங்கள். பொய்யாகவேணும் செய்யுங்கள். அந்த பொய், நாளடைவில் உண்மையாக மாறும்.
மணிவாசகர் என்ன செய்தார் தெரியுமா,
தானும் பக்தி செய்பவர் போல மற்ற அடியார்களுடன் சேர்ந்து கோவிலுக்கு அவர்கள் பின்னால் போய் விடுவாராம். அவர் மனதில் அப்போது பக்தி இல்லை. பக்திமான் போல் நடித்தேன் என்கிறார்.
நாடகம்தான் என்றாலும், நாடிவில் அது உண்மையான பக்தியாக மாறியது உலகறியும்.
பாடல்
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.
பொருள்
நாடகத்தால் = நடிப்பால்
உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல
நடித்து = நடித்து
நானடுவே = நான் நடுவே
வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே
புகுந்திடுவான் = புக வேண்டி
மிகப்பெரிதும் = மிக வேகமாக
விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்
ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன
மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே
இடையறா = இடைவிடாத
அன்புனக்கென் = அன்பு உனக்கு என்
ஊடகத்தே = உள்ளத்தில்
நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக
தந்தருள் = தந்து அருள்வாய்
எம் உடையானே.= என்னை உடையவனே
இதைத்தான் இன்று மேல் நாட்டு உளவியல் அறிஞர்கள் (psychologists ) fake it till you make it என்று சொல்லுகிறார்கள்.
கீழே உள்ள இணைய தளத்தில் இது பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்துணர்க.
http://mentalfloss.com/article/74310/8-fake-it-til-you-make-it-strategies-backed-science
நம் மூளை இருக்கிறதே, அதுக்கு ஒண்ணே ஒண்ணுதான் தெரியும். எதைச் சொன்னாலும் அது ஏற்றுக் கொள்ளும்.
முடியும் என்று சொன்னால் , ஆமாம் முடியும் என்று ஏற்றுக் கொண்டு அதற்கு தகுந்த மாதிரி உங்களை தயார் படுத்தும்.
முடியாது என்று நினைத்தால் ஆமாம் முடியாது என்று ஏற்றுக் கொண்டு எவ்வாறு செய்யாமல் இருப்பது என்று வழி காணும்.
ஆங்கிலத்தில் GIGO என்று சொல்லுவார்கள். அதாவது Garbage In Garbage Out.
எதை நம்புகிறோமோ, அதுவே நடக்கும்.
அதனால்தான் படித்து படித்து சொன்னார்கள், நல்லவர்களோடு சேர்ந்து இரு, கெட்டவர்களை கண்டால் ஓடி விடு என்று.
நல்ல குணங்கள் உங்களிடம் இருப்பது போல நினைத்துக் கொண்டு அது படி நடங்கள். உண்மையில் அது இல்லாவிட்டால், இருப்பது போல நடியுங்கள். நாளடைவில் அது உண்மையாகிவிடும்.
ஆச்சரியமாக இருக்கிறது இல்ல? செய்து பாருங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_6.html
அருமையான உரை. இந்தப் பாடலை நானாகப் படித்திருந்தாலும் இப்படி எனக்குத் தோன்றி இருக்காது.
ReplyDeleteFantastic. Brilliantly written! I have taken the liberty to share this in Twitter today - https://twitter.com/gladfellow/status/1348508579653853189?s=20
ReplyDeleteஅருமையாக உள்ளது. எளிமையான விளக்கம். நடைமுறை பேச்சில் நல்ல தமிழில் கூறியிருப்பது பாராட்டதக்கது.
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteSuperb explanation
ReplyDelete