Tuesday, May 14, 2024

திருக்குறள் - தவம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - தவம் - ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/05/blog-post_14.html

துறவறத்தில் முதல் அதிகாரம் அருளுடைமை. இல்லறத்துக்கு எவ்வாறு அன்பு அடிப்படையோ, அது போல துறவறத்துக்கு அருள் அடிப்படை. அனைத்து உயிர்கள் மேலும் செலுத்தும் கருணை அருள் எனப்படும்.  


இரண்டாவது அதிகாரம் புலால் மறுத்தல்.  அனைத்து உயிர்கள் மேலும் கருணை இருந்தால், அவற்றை கொன்று தின்ன மனம் வராது. எனவே, புலால் மறுத்தலை இரண்டாவது அதிகாரமாக வைத்தார். 


அடுத்ததாக தவம் என்ற அதிகாரம். 


தவம் செய்தால் பெரிய பெரிய சக்திகள் வரும், மூன்று காலத்தையும் உணர முடியும், பணம், செல்வாக்கு, பதவி எல்லாம் கிடைக்கும் என்று பல நூல்கள் சொல்கின்றன. தவம் செய்து பெரிய பெரிய வரங்களைப் பெறலாம் என்று படித்து இருக்கிறோம். 


தவம் என்றால் என்ன?  


காட்டுக்குப் போய், புற்று மேலே வளரும் படி உண்ணாமல், உறங்காமல் இருப்பதா?  நீருக்குள் மூழ்கி, நெருப்புக்கு நடுவில் இருப்பதா தவம். அப்படி எல்லாம் செய்தால் யாருக்கு என்ன பயன்?  நீருக்குள் மூழ்கியே இருப்பது தவம் என்றால் தவளை, மீன் போன்றவை பெரிய தவசீலர்களாகி விடும். 


இந்த அதிகாரத்தில் தவம் என்றால் என்ன, அதை எப்படிச் செய்வது, அதனால் என்னென்ன பலன்கள், என்பது பற்றி சொல்ல இருக்கிறார். 


மிக முக்கியமான அதிகாரம். 


கவனமாக சிந்திப்போம். 



Thursday, May 9, 2024

திருக்குறள் - கைகூப்பித் தொழும்

 திருக்குறள் - கைகூப்பித் தொழும் 


மீன் பிடிப்பதற்கு என்றே சில கப்பல்கள் இருக்கின்றன. ஆழ்கடலில் சென்று பெரிய அளவில் மீன்களைப் பிடித்து, அவற்றை வெட்டி, சுத்தம் செய்து, தேவையான இரசாயானங்களைச் சேர்த்து டப்பாவில் அடைத்து கரைக்கு கொண்டு வந்து விற்பார்கள். கடலிலேயே எல்லாம் முடிந்து விடும். விற்பது மட்டும்தான் கரையில். 


அந்தக் கப்பலில் வேலை  செய்பவர்களைக் கேட்டால், "இத்தனை மீனையும் நானா தின்னப் போகிறேன்....யாரோ உண்ணப் போகிறார்கள். நான் என் கடமையைச் செய்கிறேன். நான் இல்லாவிட்டால் வேறு      ஒருவன் செய்வான். நான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இது நடக்கத்தான் போகிறது....என் குற்றம் எதுவும் இல்லை..." என்பார்கள். 


அந்த மீனை உண்பவர்களைக் கேட்டால், "...நான் வாங்கும் போது, அந்த மீன் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. நான் அந்த மீனைப் பிடிக்கவும் இல்லை, கொல்லவும் இல்லை, பதப்படுத்தவும் இல்லை...டப்பாவில் இருந்தது, வாங்கி வந்தேன்...இறந்த மீனை உண்பது எப்படி பாவமாகும்? கொள்வதுதானே பாவம். மீன் இறந்த பின், நான் உண்ணாவிட்டாலும், வேறு யாரும் உண்ணாவிட்டாலும், அந்த மீன் மீண்டும் உயிரோடு வரப் போவது இல்லை...உண்டால் என்ன பாவம்" என்பார்கள். 


இது ஒரு ஓயாத சண்டை. 


பார்த்தார் வள்ளுவர்..."உயிர்களை கொல்லவும் கூடாது, கொன்றதை தின்பதும் கூடாது...ஒருவன் இரண்டையும் செய்யக் கூடாது" என்கிறார். 


பாடல் 


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்


பொருள் 


கொல்லான்  = உயிர்களை கொல்ல மாட்டான் 


புலாலை மறுத்தானைக் = மாமிசத்தை உண்ணமாட்டான் 


கைகூப்பி = (அவனை) கை கூப்பி 


எல்லா உயிரும் தொழும் = அனைத்து உயிர்களும் தொழும் 


மனிதன் நினைத்தால் எந்த உயிரையும் கொன்று தின்ன முடியும். அப்படி செய்யாமல் இருப்பவனைப் பார்த்து எல்லா உயிர்களும் தங்கள் மேல் கருணை கொண்டு கொல்லாமல் விட்டதை நன்றியோடு நினைத்து அவனை நோக்கி கை கூப்பித் தொழும் என்றார். 


இல்லை என்றால் என்ன ஆகும், "கொலைகாரன் வருகிறான் என்று உயிருக்கு பயந்து அவை ஓடும்" என்பது ஆயிற்று. 

Wednesday, May 8, 2024

தேம்பாவணி - ஊர் வர்ணனை

 தேம்பாவணி - ஊர் வர்ணனை 



தேம்பாவணி என்ற இந்த நூலை எழுதியவர் வீரமாமுனிவர் என்ற வெளிநாட்டவர். 


இயேசுவின் தந்தை பற்றிய ஒரு கிறித்துவ நூல். 1700-களில் எழுதப்பட்டது. 


தேன் + பா + அணி எனக் கொண்டால் தேன் போன்ற பாடல்களைக் கொண்ட நூல் என்று ஆகும். 


மிக மிக இனிமையான பாடல்களைக் கொண்டது. 


நாட்டு வளம் பற்றி கூற வந்த வீரமாமுனிவர், 


மக்கள் எப்போதும் அலைந்து கொண்டு இருப்பார்கள். படிப்பு, வேலை, தொழில்,  என்று ஏதேனும் ஒன்று பற்றி அலைந்து கொண்டே இருப்பார்கள். தெருவில் பார்த்தால் தெரியும். எவ்வளவு பேருந்துகள், இரயில், கார், பைக், ஆட்டோ என்று எவ்வளவு அலைச்சல். இயேசுவின் தந்தை பிறந்த அந்த ஊரில் நீர் மட்டும்தான் அலை அலையாக அடிக்கும் அல்லது வேறு ஒன்றும் அலைவது இல்லையாம். 


பொருள் சம்பாதிக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள். சண்டை, சச்சரவு, போர், என்று பொருள் வேண்டி ஆயிரம் சிக்கல்கள். அவர் காட்டும் நாட்டில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று பணக்காரர்கள் சண்டை போடுவார்களாம். நான் உதவி செய்வேன், நீ உதவி செய்வாய் என்று சண்டை போடுவார்களாம். அதைத் தவிர வேறு எந்த வித சண்டையும் கிடையாது. 


மழை பொழியும் மேகம் அல்லது வேறு எங்கும் கறை கிடையாது. நீர் மேகம் மட்டும் கறுத்து கறை படிந்து இருக்கும். 


அந்த நாட்டில் சிறைச்சாலைகளே கிடையாது. காவல் என்பது அற வழியில் மக்களே செலுத்துவதற்கே அன்றி குற்றம் புரிந்தவர்களை அடைக்கும் சிறை கிடையாது. 


பாடல் 



நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்

போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்

கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்

சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே 

 

பொருள் 




நீர் அல்லதும் = நீரைத் தவிர 


அலை இல்லது = வேறு எதுவும் அலைவது இல்லை 


நிறை = நிறைந்த 


வான் பொருள் = வான் வரை குவிந்து கிடக்கும் பொருள் கொண்டோர் 


இடுவார் = தானம் செய்வார்  


போர்   அல்லது = அதற்கு போட்டி போட்டு செய்யும் போர் அல்லது 


பகை இல்லது = வேறு எந்த பகையும் இல்லாத நாடு 


புரிவான் மழை பொழியும் = வானில் இருந்து பொழியும் 


கார் = கரிய மேகம் 


அல்லது = தவிர 


கறை இல்லது = வேறு எங்கும் கறை கிடையாது 


கடி காவலும் = சிறந்த காவலும் 


அறனால் = அற வழியில் 



சீர் = நெறி படுத்தல் 


அல்லது = தவிர 


சிறை இல்லது = சிறை என்பது கிடையாது 


திரு மா நகர் இடையே = அந்தத் திரு நகரில் 


 


Tuesday, April 16, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - வேள்வி

 திருக்குறள் - புலால் மறுத்தல் - வேள்வி 

https://interestingtamilpoems.blogspot.com/2024/04/blog-post_16.html

மக்கள் எப்படி எல்லாம் உயிர்க்  கொலை செய்கிறார்கள் !


உண்பதற்காக உயிர்களை கொன்று அவற்றின் உடம்பை உண்பது ஒரு வகை. 


அது அல்லாமல், அந்தக் காலத்தில் யாகம், வேள்வி போன்றவற்றை செய்யும் போது, அதில் உயிர்களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. சில விலங்குகளை உயிரோடு வேள்வித் தீயில் இட்டு தெய்வ வழிபாடு செய்யும் முறைமை இருந்திருக்கிறது.  


வேள்வியில் இடப்படும் பொருள்களுக்கு "அவிர் பாகம்" என்று பெயர். ஹவில் என்ற வட மொழிச் சொல்லை தழுவியது என்பார்கள். 


அப்படி அந்த வேள்வித் தீயில் போடப்படும் பொருள்கள், எந்தத் தெய்வத்தை நோக்கி போடப்பட்டதோ, அந்தத் தெய்வங்கள் மகிழ்ந்து, அப்படி அவர் பாகம் அளித்தவர்களுக்கு நல்ல வரங்கள் வழங்கும் என்பது நம்பிக்கை. 


வள்ளுவர் சொல்கிறார், 


"அப்படி ஆயிரம் வேள்வி செய்து வரும் நற் பலன்களை விட, ஒரே உயிரை கொன்று தின்னாமை என்ற விரதத்தால் வரும் " 


என்று. 


உயிர்க் கொலைகளை செய்து வரும் நன்மைகளை விட, உயிர்களை கொல்லாமல் இருக்கும் விரதத்தின் மகிமை பெரியது என்கிறார். 


பாடல் 


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று


பொருள் 


அவி = அவிர் பாகங்களை 


சொரிந்து = வேள்வியில் இட்டு 


ஆயிரம் = ஆயிரம் வேள்விகள் 


வேட்டலின் = செய்வதைவிட 


ஒன்றன் = எந்த ஒரு விலங்கினதும் 


உயிர் செகுத்து  =உயிரைப் பறித்து 


உண்ணாமை நன்று = உண்ணாமல் இருப்பது நல்லது 


இப்போது கூட, மாமிசத்தை இடுவதற்கு பதில் வெள்ளைப் பூசணிக்காயின் உள் குங்குமத்தை போட்டு, அதை கரைத்து, பூசணியை உடைத்து, அது ஏதோ உயிர் பலி கொடுத்த மாதிரி ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள்.


வேள்விகளில் உயிர் பலி நடந்திருக்கிறது. 


தெய்வத்திற்காக என்றாலும், பலி கொடுக்காமல் இருப்பது நல்லது என்கிறார் வள்ளுவப் பேராசான். 




Monday, April 15, 2024

தேவாரம் - திருவீழிமழலை - விழி காட்டும்

 தேவாரம் - திருவீழிமழலை - விழி காட்டும் 


திருவீழிமழலை


ஒரு பெரிய தெளிவான நீர் தேக்கத்தை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். உங்களூர் ஏரியோ, குளமோ, நீர்த் தொட்டியோ...ஏதோ ஒன்று. தெளிந்த நீர். அதில் தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத்து இருக்கின்றன. அதில் பவளப் பாறைகள் சூரிய ஒளி பட்டு செக்க செவேல் என்று இருக்கிறது. சில பல மீன்கள் அந்த நீரில் விளையாடுகின்றன. 


கற்பனை செய்து கொண்டீர்களா?


அந்த கற்பனையை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து திருவீழிமழலை என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் பிரகாரத்தின் மேல் வையுங்கள். 


இளம் பெண்கள் கோவிலை சுற்றி வருகிறார்கள். அவர்கள் முகம் தாமரை மலர் போல் இருக்கிறது. அவர்களது இதழ்கள் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது. அவர்கள் கண்கள் மீன்கள் போல் அங்கும் இங்கும் அலை பாய்கின்றன.


என்ன இது, கோவிலுக்குப் போனோமா, இறைவனை தர்சித்தோமா என்று இல்லாமல் இது என்ன வர்ணனை என்று நீங்கள் கேட்கலாம். 


செய்தது நான் அல்ல. திருஞான சம்பந்தர். 


அது சிவன் கோவில். எப்படிப்பட்டவன் சிவன், 


உலகமெல்லாம் துன்பப் படி மக்களை இம்சை செய்த அசுரர்களின் கோட்டைகளை, கண்ணாடியின் மேல் உளுந்தைப் போட்டால் எவ்வளவு சீக்கிரம் அது உருண்டு ஓடி விழுந்து விடுமோ, அத்தனை குறுகிய நேரத்தில் அந்தக் கொடிய அசுரர்களை அழித்த சிவன் வாழும் கோவில். அந்தக் கோவில்தான் பெண்கள் வழிபட்டதை ஞான சம்பந்தப் பெருமான் கூறுகிறார். 


பாடல் 


எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி

உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங்கோயில்

கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்

விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.

 

சீர் பிரித்த பின் 


எழுந்து உலகை நலிந்து உழலும்  அவுணர்கடம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி

உழுந்து உருளும் அளவையின் உள்  எரி கொள வெஞ்சிலை வளைத்தோன்      உறையும் கோயில்

கொழுந் தரளம் நகை காட்டக் கோகநகம் முகம் காட்டக் குதித்து நீர் மேல்

விழுந்த கயல் விழி காட்ட விற் பவளம் வாய் காட்டும் மிழலையாமே.


பொருள் 


எழுந்து  = அழிப்பதற்கு எழுந்து 


உலகை = இந்த உலகை 


நலிந்து = நலியச் செய்து 


உழலும் = திரியும் 


அவுணர் = அரக்கர்கள் 


கடம் புரம் = பெரிய கோட்டைகள் 


மூன்றும் = மூன்றும் 


 எழில் = அழகான 


 கண்ணாடி = கண்ணாடி 


உழுந்து உருளும் = அதன் மேல் உளுந்து உருண்டு கீழே விழும் 


அளவைன் = அந்த குறுகிய நேரத்தில் 


உள் = உள்ளாக 


எரி கொள = அவற்றை எரித்த 



 வெஞ்சிலை = வீரமான வில்லை 


வளைத்தோன் = வளைத்த அந்த சிவன் 


 உறையும் கோயில் = இருக்கும் கோவில், அது எது தெரியுமா?


கொழுந் = சிறந்த  


தரளம் = முத்துக்கள் 


 நகை காட்டக்  = புன்னகையில் தெரியும் பற்கள் காட்ட 


கோகநகம் = தாமரை 


 முகம் காட்டக் = முகத்தில் காட்ட 


 குதித்து = குதித்து 


நீர் மேல் = நீரின் மேல் 


விழுந்த = விழும் 


கயல் = மீன் 


விழி காட்ட = விழியில் காட்ட 


விற் பவளம் வாய் காட்டும் = வில் போல் வளைந்த இதழ்கள் பவளத்தைக் காட்ட 


மிழலையாமே. = திருவீழிமழலை என்ற ஊர் 


இந்தத் தலத்தில் உள்ள அம்பாளின் பெயர் ப்ரிஹந்த்குஜாம்பிகை. ஏதாவது புரிகிறதா?  


ப்ரிஹுந் = என்றால் பெரிய, சிறந்த. ப்ருஹந்த்நாயகி = பெரியநாயகி 

குஜம் என்றால் மார்பு.


அம்பிகை = அம்பாள். 


அழகிய முலையம்மை. 


அழகிய தமிழ் பெயர்களை இப்படி புரியாத மொழியில் மாற்றியது யார்? 

Saturday, April 13, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உயிர் பிரிந்த உடல்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - உயிர் பிரிந்த உடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/04/blog-post.html

தவறுகள் நிகழ பல காரணங்கள் இருக்கலாம். அதில் இரண்டை நாம் சிந்திப்போம். 


நம் வீட்டில், நாம் பிறந்தது முதலே ஒரு பழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது தவறு என்றே நமக்குத் தெரியாது. ஏன் என்றால், சிறு வயதில் இருந்தே அப்படித்தான் செய்கிறோம். நம் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். அது எப்படி தவறாக இருக்க முடியும்? அது தவறு என்ற எண்ணமே நமக்கு எழாது. 


இரண்டாவது வகை என்ன என்றால், எந்த ஒரு தவறும் முதல் முறை செய்யும் போது மனம் உறுத்தும். அப்புறம் அப்புறம் பழகிப் போய் விடும். நாளடைவில், அப்படிச் செய்தால் என்ன தவறு என்று வாதிக்கச் சொல்லும். அப்படி செய்யாமல் இருப்பதுதான் தவறு என்று கூட சொல்லும். 


நிறைய பேர் புலால் உண்ணாமல் இருப்பார்கள். கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில் நண்பர்கள் பழக்கி விட்டு விடுவார்கள். நாக்கு உருசி கண்டு விடும். பின் அதை விட மனம் வராது. அது மட்டும் அல்ல, அந்த மாமிச உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது, ஏன் அதை கட்டாயம் உண்ண வேண்டும் என்றெல்லாம் மனம் வாதிக்கத் தொடங்கும். 


அது போல, அசைவ உணவு உண்ணும் குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு அது தவறு என்று புரியவே புரியாது. 


தீவிர சைவ உணவு உண்பவர்களிடம் "மாட்டின் பால் என்பது மாட்டின் இரத்தம் தான். அதைத் தான் நீ குடிக்கிறாய்" என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அது எப்படி என்றுதான் வாதம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"என்னதான் சொன்னாலும், மாமிச உணவு என்பது, பிணத்தை தின்பது மாதிரி. உயிர் அற்ற ஒரு விலங்கை தின்பது, அந்த விலங்கின் பிணத்தைத் தின்பது மாதிரித்தானே. குற்றமற்ற பார்வை, நோக்கம் உள்ளவர்கள் அதை புரிந்து கொண்டு, அந்தக் காரியத்தை செய்ய மாட்டார்கள்" என்கிறார். 


பாடல் 


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்


பொருள் 



செயிரின்  = குற்றத்தில் இருந்து 


தலைப்பிரிந்த = விலகி நிற்கும், அதோடு தன்னை ஒன்று படுத்தாமல் இருக்கும் 


காட்சியார் = நோக்கம், பார்வை உள்ளவர்கள் 


 உண்ணார் = உண்ண மாட்டார்கள் 


உயிரின் = உயிரை விட்டு 


தலைப்பிரிந்த = பிரிந்து வந்த 


ஊன் = மாமிசம் 


குற்றத்தை நீண்ட நாள் செய்து வந்தால், அது குற்றமாகத் தெரியாது. அதோடு ஒன்றிப் போய் விடுவோம். 


அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்து இருப்பவர்கள் ஒரு வகையில் திருடர்கள்தான் என்று சிலர் சொல்கிறார்கள். பணக்கார்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா?  


நாம் செய்வது சரியா தவறா என்று சற்று தள்ளி நின்று யோசிக்க வேண்டும். நான் செய்வதால் அது சரி என்று ஆகிவிடக் கூடாது. 


சிந்திக்க வேண்டிய குறள்.




Sunday, March 31, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண்

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_31.html


நம் உடம்பில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டால், அல்லது கீழே விழுந்து அடி பட்டாலோ, ஒரு புண் வரும் அல்லவா. தோல் கிழிந்து, சதை கிழிந்து, இரத்தம் வரும். அந்த புண்ணை யாராவது தின்பார்களா?  


ஒரு விலங்கை கத்தியால் வெட்டினால், அதுவும் அதன் உடலில் வரும் புண்தானே. அந்தப் புண்ணை யாராவது தின்பார்களா?  எவ்வளவு அசிங்கம் அது. எவ்வளவு அருவெறுப்பு அது. அது தெரியாததால் தான் மக்கள் ஒரு விலங்கின் புண்ணை உண்கிறார்கள் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்

புண்ண துணர்வார்ப் பெறின்.


பொருள் 


உண்ணாமை வேண்டும் = உண்ணாமல் இருப்பார்கள் (எப்போது என்றால்)


புலாலைப் = புலால் என்பது 


பிறிதொன்றின் = மற்றொரு உடம்பின் 


புண்ணது = புண் அது (என்று)  


உணர்வார்ப் பெறின் = உணரும் அறிவைப் பெற்றால் 


மாமிசம் என்பது ஒரு விலங்கின் புண். புண்ணை யாராவது தின்பார்களா? என்று ஒரு அருவெறுப்பை உண்டாக்குகிறார்.