Wednesday, August 27, 2014

சிவ புராணம் - பூவில் மணம் போல

சிவ புராணம் - பூவில் மணம் போல


தோற்றம், நிலைப்பு, இறுதி என்ற இந்த மூன்றும் இல்லாதவனே. அனைத்து உலகையும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய். என்னை இந்த உலகில் போக்குவாய். என்னை உன்னுடைய பணியில் புகுவிப்பாய். பூவில் மணம் போல இருப்பவனே. தூரத்தில் இருப்பவனே. அருகில் இருப்பவனே.

பாடல்

ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

பொருள்


ஆக்கம் = தொடக்கம்

அளவு = இருத்தல்

இறுதி யில்லாய் = முடிவு இல்லாதவனே

அனைத்துலகும் = அனைத்து உலகையும்

ஆக்குவாய் = ஆக்குவாய்

காப்பாய் = காத்தருள்வாய்

அழிப்பாய் = அழிப்பாய்

அருள்தருவாய் = அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் = என்னை இந்த பிறவியில் போக்குவாய்

புகுவிப்பாய் நின்தொழும்பின் = உன் பணியில் என்னை புகும்படி செய்வாய்

நாற்றத்தின் நேரியாய் = பூவின் மணம் போல

சேயாய் = தூரத்தில் இருப்பவனே

நணியானே = அருகிலும் இருப்பவனே


சரி. மிக எளிமையான பகுதி. மேலே செல்வோம் என்று அவசரப் படக்கூடாது.

எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு நியதி உண்டு.

பிறத்தல், வளர்தல்,அழிதல் என்று ஒரு வரை முறை உண்டு. இதைத்தான் நாம் தினமும்  காண்கிறோம்.

நாம் காணாத  ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள  முடியாது.

பிறக்காத ஒன்றை, இறக்காத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா ?

இறைவன் இந்தக்  கணக்கில்   அடங்காதவன்

காலமும் கணக்கும் நீத்த காரணன் என்பார் கம்பர்

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும்,கணக்கும், நீத்த காரணன்-கை வில் 
                                  ஏந்தி,
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும்வெள்ளி்ப்பொருப்பும் விட்டு,-
                         அயோத்தி வந்தான்;

இறைவன் பிறந்து, வளர்ந்து, அழிவது என்ற கணக்கில் வராதவன். அதை எப்படி நாம் புரிந்து கொள்வது ?

"ஆக்கம் அளவு இறுதி இல்லாய்" என்றார்.

ஏன் பூவின் மணம் என்று சொன்னார் ?

பூ தெரிகிறது. ஆனால் அதில் உள்ள மணம் தெரியாது.

கணவனும் மனைவியும் தெரிகிறார்கள். அவர்களுக்கு இடையே உள்ள அன்பு தெரியாது.

செயல் தெரியும். செயலுக்கு  பின்னால் இருக்கும் அறிவு தெரியாது.

அது போல உலகம் தெரிகிறது. அதற்கு பின்னால் உள்ள இறைவன் தெரியாது.

பூவை நுகர்ந்தவர்களுக்கு அதன் மணம் தெரியும்.

மணி வாசகர் சொல்கிறார் ....அனைத்து உலகையும் ஆக்குவாய், அழிப்பாய், காத்து  அருள்வாய் என்று.

நாம் செய்யும் செயல்களில் எத்தனை சதவீதம் நாம் நினைத்து, முடிவு செய்து நடப்பது.

நாளை என்ன செய்வோம் என்று நமக்குத் தெரியாது.

படுக்கப் போகும் போது திருமகள் போல இருந்த கைகேயி, சிறிது நேரத்தில் கூனி சொல் கேட்டு  கொடுமையிலும் கொடுமையான பெண்ணாக ஆனாள் . நினைத்திருப்பாளா இப்படி தான் செய்வோம் என்று.


என் செயல் ஆவது ஒன்றும் இல்லை இனி தெய்வமே உன் செயல் என்று உணரப்  பெற்றேன் என்றார்  பட்டினத்தார்.

 என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
     உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
     பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
     முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே



நான் இங்கு வந்து பிறந்ததும், இப்படி வளர்ந்ததும், இன்று இப்படி இருப்பதும் இறைவா உன் செயல் என்று அனைத்தையும் அவனிடம் விட்டு  விடுகிறார்.

"போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் "

 எல்லாம் அவன் செயல்.   சரணாகதி.

"சேயாய் நணியானே" - அறிந்து கொள்ளும் வரை அவன் தூரத்தில் இருப்பவன். அறிந்து கொண்டவ பின் அண்மையில் இருப்பவன்.

யாவர்க்கும் அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பெம்மான் இவன் அன்றே என்றார் திரு ஞான  சம்பந்தர். பெம்மான் அவன் அன்றே என்று   .சொல்லவில்லை.  "இவன்" என்பது அண்மைச் சுட்டு.  "அவன்" என்பது  சேய்மைச் சுட்டு.

மிக மிக நிதானமாக படிக்க வேண்டிய நூல் சிவ புராணம்.


No comments:

Post a Comment