Tuesday, December 20, 2016

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?


ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் ? வேலை செய்வதற்கு எப்படி திட்டமிட வேண்டும் ? திட்டமிடுவதற்கு என்னென்ன வேண்டும் ? எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு எப்படி முடிவு எடுக்க வேண்டும் ? இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

பொருள்

அழிவதூஉம் = அழிவதையும்

ஆவதூஉம் = ஆவதையும்

ஆகி = ஆன பின்

வழிபயக்கும் = வழியை தரும்

ஊதியமும் =  பயனையும்

சூழ்ந்து செயல் = ஆராய்ந்து செய்ய வேண்டும்


இதுல என்ன பெருசா இருக்கு ?

சிந்திப்போம்.

நாம் ஒரு செயலை செய்யப் போகும் போது பொதுவாக  அதில் உள்ள நன்மைகள், சுகம் மட்டும் தான் தெரியும்.

டிவி வாங்கணுமா,கார் வாங்க வேண்டுமா, வீடு வாங்க வேண்டுமா...அதை எப்படியெல்லாம்  அனுபவிக்கலாம் என்று நாம் கனவு காணுவோம். பெரிய டிவி, பெரிய கார், அதில் குளிர் சாதன வசதி, நல்ல ஒலி பெருக்கி சாதனம், அது இது என்று  கனவு காணுவோம்.

வீடு என்றால், அதில் என்னென்ன செய்யலாம், சோபா எங்க போடலாம், AC எங்க மாட்டலாம் என்று சிந்தனை ஓடும்.

ஆனால், அதில் இருந்து வரும் சிக்கல்கள் தெரியாது.

ஒரு வீடு வாங்கினால்,  அதற்கு  வட்டி கட்ட வேண்டும், வீட்டை பாதுக்காக்க வேண்டும், வரி கட்ட வேண்டும், பக்கத்து வீட்டுக்காரரின் தொல்லை, வழக்கு ஏதாவது வரலாம், எங்காவது விரிசல் விட்டால் மனம் வலிக்கும். இப்படி ஆயிரம் தொல்லைகள். நாம் இவற்றை யோசிப்பது கிடையாது.

திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்...மனைவி வருவாள், அவளோடு சந்தோஷமாக இருக்கலாம், ருசியாக சமைத்துத் தருவாள், சமுதாயத்தில் ஒரு  மதிப்பு , மரியாதை வரும் என்று மனம் இறக்கை கட்டி பறக்கும்.

இது ஆவது.

அழிவது எது ?  அவளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும். அவற்றை நிறைவேற்ற  வேண்டும். பிள்ளைகள் வரும். அவற்றை படிக்க வைத்து , ஆளாக்க வேண்டும். மாமியார் மருமகள் உறவில் வரும் சிக்கல்கள். எதிர்பார்ப்புகள். ஏமாற்றங்கள்.

இவை அழிவு.

இப்படி எதை எடுத்தாலும் ஆவதும் இருக்கும், அழிவதும் இருக்கும்.

சரி, புரியுது.

இரண்டையும் பட்டியல் போட்டாச்சு.

எப்படி முடிவு எடுப்பது. எதை எடுத்தாலும் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும். என்ன செய்வது. மேலே எப்படி போவது ?


"வழிபயக்கும் ஊதியமும்"  நீண்ட கால நன்மை, அல்லது பயன் என்ன என்று அறிய வேண்டும்.

எதைச் செய்தாலும், கொஞ்சம் இழப்பு இருக்கும். கொஞ்சம் பலனும் இருக்கும்.  நீண்ட கால நன்மை என்ன என்று யோசிக்க வேண்டும்.

ஒரு மாணவன் படிக்க உட்காருகிறான் என்றால், நண்பர்களோடு இனிமையாக அரட்டை அடிப்பது, டிவி பார்ப்பது போன்ற சுகங்கள் இழப்பு. அறிவு வளர்வது அதில் வரும்  ஆக்கம். அறிவு வளர்ந்து என்ன செய்வது ? நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்...இவை எல்லாம் நீண்ட கால பயன்கள்.


உடற் பயிற்சி செய்கிறோம் என்றால், வலி, உடற் பயிற்சி கூடத்திற்கு (gym ) கொடுக்கும் பணம்,  நேர விரயம் இவை எல்லாம் அழிவு.

ஆக்கம் , உடல் உறுதி.

நீண்ட கால பயன் - ஆரோக்கியமான உடல்,  குறையும் மருத்துவ செலவு, நீண்ட ஆயுள்.

சரி, அழிவு, ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றை அறிந்து கொண்டோம்.

அடுத்து என்ன செய்வது ?

"சூழ்ந்து"  அதாவது ஆராய்ந்து. அழிவு எவ்வளவு ? ஆக்கம் எவ்வளவு ? நீண்ட கால பயன் எவ்வளவு ?  எப்படி ஆராய்வது ? ஒவ்வொரு செயலுக்கும் வேற வேற மாதிரி  ஆராய வேண்டும். ஒரு டிவி வாங்குவது மாதிரி அல்ல ஒரு வீடு வாங்குவது. அழிவு , ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றின் அளவை பொறுத்து நம் ஆராய்ச்சி அமைய வேண்டும். சில விஷயங்களை நாமே ஆராய முடியும்.  சிலவற்றிற்கு மற்றவர்களின் உதவி தேவைப் படும்.

வீடு வாங்குவது என்றால் ஒரு வக்கீலை பார்க்க வேண்டும்.

திருமணம் செய்வது என்றால் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஆராய என்ன கருவிகள் (tools ) வேண்டும், எப்படி ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவை எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஆராய்ந்த பின், "செயல்" .

அதற்கு பின் செயல்பட வேண்டும்.

இதில் இன்னும் கூர்மையாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,

முதலில் அழிவை சொல்லி அடுத்து ஆக்கத்தை சொல்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

ஆக்கம் வராவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நட்டம் வந்து விட்டால்  அதை தாங்கும்  சக்தி வேண்டும்.

உதாரணமாக, வீடு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் விலை உயர்வது  ஆக்கம், நீண்ட கால பலன். அது நிகழாவிட்டால் பரவாயில்லை. ஆனால், வீடு வாங்கிய பின், அந்த வீட்டுக்கு இன்னொருவன்  உரிமை கொண்டாடி  நீதி மன்றம் போனால் , வீடு நம் கையை விட்டுப் போனால்  அந்த நட்டத்தை நம்மால் தாங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

முதலில் அழிவை ஆராய வேண்டும்.

மேலும், அழிவை ஆராய்வதன் மூலம், அதை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட முடியும். (Risk Management ).

முதலில் அழிவு.

பின் ஆக்கம்.

பின் நீண்ட கால பயன்

பின் இந்த மூன்றையும் சரியாக எடை போடுவது.

பின், செயல் படவேண்டும்.

புரியுதா ?  

1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete