Monday, May 15, 2017

திருக்குறள் - நல்லது செய்றது தப்பா ?

திருக்குறள் - நல்லது செய்றது தப்பா ?


நல்லது செய்வதில் தவறு உண்டா என்று கேட்டால் உண்டு என்கிறார் வள்ளுவர்.

அதெப்படி நல்லது செய்வது தவறாக முடியும் ?

நிறைய வீடுகளில் பிள்ளைகள் கெட்டு போவதற்கு காரணம் பெற்றோர்கள் அந்த பிள்ளைகள் மேல் வைக்கும் அதீத பாசம் தான். பிள்ளை கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள். பின் அவன் சதா சர்வ காலமும் whatsapp லும் facebook லும் பொழுதை போக்குகிறான். படிப்பதே இல்லை என்று நொந்து கொள்ளவார்கள். அவனுக்கு விலை உயர்ந்த செல் போன் வாங்கி கொடுத்தது யார் ?

அதே போல், பிள்ளைகள் துன்பப் படுவார்களே என்று அவர்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுக்க வேண்டியது. பின்னாளில் அவர்களுக்கு சொந்தமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. மலங்க மலங்க முழிப்பார்கள்.

பிள்ளைகளுக்கு நல்லது நினைத்துதான் செய்திருப்பார்கள் பெற்றோர்கள். ஆனால், அதுவே தவறாக முடிந்து விடும்.

ஆயிரம் உதாரணம் சொல்லலாம். பிள்ளைகள் கையில் தாராளமாக பணம் தருவது. அளவுக்கு அதிகாமாக அவர்களை புகழ்வது என்று.

பிள்ளைகள் என்று மட்டும் அல்ல.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு தரா தரம் பார்க்காமல் உதவி செய்வது பின்னாளில் துன்பத்தில் கொண்டு போய் முடியும்.

நல்லவன் என்று நினைத்து ஒட்டுப் போட்டு , தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து  கஷ்டப் படுபவர்களுக்கு உண்டு.

ஓட்டு போடுவது தவறா என்றால் இல்லை. யாருக்கு போடுவது என்பதில் தான் சிக்கல்.


நல்லது செய்வதிலும் தவறு உண்டு, யாருக்கு செய்கிறோம் என்று அறிந்து செய்யாவிட்டால் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் 
பண்பறிந்து ஆற்றாக் கடை 

பொருள்

நன்றாற்றல் = நன்று + ஆற்றல் = நல்லது ஆற்றுவது. நல்லது செய்வது

உள்ளும் = அதிலும்

தவறுண்டு = தவறு உண்டு

அவரவர் = அவர்களின் (யாருக்கு நல்லது செய்கிறோமோ )

பண்பறிந்து = பண்பு அறிந்து

ஆற்றாக் கடை = செய்யாவிட்டால்


யாருக்கு நல்லது செய்கிறோம் ? எவ்வளவு செய்கிறோம் ? எப்போது செய்கிறோம்  என்று அறிந்து செய்ய வேண்டும். 

அறிவை புகட்டுவதாக இருந்தால் கூட யாருக்குச் சொல்லித் தர வேண்டும் என்று  வரையறை வைத்து இருந்தார்கள். கெட்டவனுக்கு தரும் அறிவு கெட்ட வழியில்  மேலும் செல்லவே பயன்படும். 

அடுத்த முறை ஏதாவது நல்லது செய்வதாக இருந்தால் , சிந்தித்து செய்யுங்கள். யாருக்கு , எவ்வளவு, எப்போது என்று சிந்தித்து செயல்படுங்கள். 

நல்லதுதானே செய்கிறோம் என்று கண்ணை மூடிக் கொண்டு செய்யாதீர்கள். 

நல்லாற்றல் உள்ளும் தவறு உண்டு ....

வினை செயல் வகை என்ற அதிகாரத்தில் பத்து குறள் எழுதி இருக்கிறார் வள்ளுவர். அதில் ஒன்று இது. மேலும் இருக்கிறது. திருக்குறளை படித்துப் பாருங்கள். 

No comments:

Post a Comment