Showing posts with label குறுந்தொகை. Show all posts
Showing posts with label குறுந்தொகை. Show all posts

Thursday, January 1, 2015

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 2

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம்.

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு

பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்

புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------

1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி  கூறுவது.  இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு.  அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால்  தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.

சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.

அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.

அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும்  இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள்,  என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.

இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை  காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான்  என்று சொல்லுவார்கள்.

இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில்   யாரும் சொல்லுவது இல்லை.

திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே,  யார் கொடுத்தது " என்று .

ஞான சம்பந்தர் சொன்னார்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே


பெம்மான் இவன் அன்றே என்று  கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான்  என்று இறைவனை அண்மைச் சுட்டில்  காட்டினார்.

பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.

சரி, பாடலுக்கு வருவோம்.

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   


இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல்.  இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி  அங்கே நிற்கிறாள்.  அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ  எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை  பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது. 

நின் சொல் கொண்ட என் சொல் தேறி


உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு 

இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். 

தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும்  அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் " 

 அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி  , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை  தலைவி ஏற்றுக் கொண்டாள் . 

இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும். 

தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும்.   ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன்  சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு  நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை  நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை  கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு  தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான்  சொன்னேன் "  (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).

மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது. 

அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக்  கொள்ளா விட்டால் என்ன  செய்வது என்ற தலைவனின்  பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி  தலைவியின்  காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.

அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம். 

 
 

Monday, December 29, 2014

குறுந்தொகை - புது நலன் இழந்த

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம். 

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு
 
பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்
 
புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை 

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.


Monday, September 29, 2014

குறுந்தொகை - பெண்ணின் காதல் வெளிப்பாடு

குறுந்தொகை - பெண்ணின் காதல் வெளிப்பாடு 


குறுந்தொகையில், ஒரு இளம் பெண் தன் காதல், காம உணர்வை எவ்வளவு மென்மையாக வெளிப்படுத்திகிறாள்.


அவர் கொதிக்கும் பாலைவனத்தின் வழியே போய்   இருக்கிறார். அந்த வழியில் வறண்ட, வெப்பமான காற்று  அடிக்கும். மரங்கள் எல்லாம் பட்டுப் போய் நிற்கும். அவர் என்னை அணைத்து என் மார்பில் துயில்வதை விடுத்து இப்படி துன்பப் படுகிறாரே என்று நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது.

பாடல்

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென  
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் 
மலையுடை யருஞ்சுர மென்பநம்     

முலையிடை முனிநர் சென்ற வாறே. 

பொருள்

வெந்திறற் கடுவளி = வெம்மையான + திறல் + கடுமையான + வெளி = வெப்பம் உடைய, வலிமையான, வேகமாக அடிக்கும் காற்று

பொங்கர்ப் = மரத்தின் கிளை(களின் ஊடே)

போந்தென = வீசுவதால் 

நெற்று = முதிர்ந்த காய்ந்த காய்

விளை = விளைந்த

யுழிஞ்சில் = உழிஞ்சில் என்ற மரத்தில் 

வற்ற லார்க்கும் = வறண்டு, வத்தல் போல சுருங்கிக் கிடக்கும்

மலையுடை = மலைகளின் ஊடே

யருஞ்சுர மென்ப = அரும் சுரம் என்ப. சுரம் என்றால் காய்ந்து போன காடு. கொடுமையான, காய்ந்து போன காடு

நம் முலையிடை = என் மார்பின் இடை 

முனிநர் சென்ற வாறே. = கோபித்து சென்றவர்

அவன் பிரிந்து சென்ற ஏக்கம் ஒரு புறம். அவன் எப்படி துன்பப் படுகிறானோ என்றோ கவலை ஒரு புறம். பெண்ணின் உணர்சிகளை பிரதிபலிக்கும் அற்புதமான பாடல்.


( மனைவியை மார்போடு அணைத்துத் தூங்குவதை ஆண்டாள்  கூறுகிறாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.

)


Saturday, February 22, 2014

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே 




பெண்ணுக்கு காதல் சங்க காலம் தொட்டு இன்று வரை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

குறுந்தொகைப் பெண்ணின் மனம் படும் பாட்டை இந்த பாடல் விளக்குகிறது.

காதலன் போய் விட்டான். என்ன ஆனான் என்று தெரியவில்லை.

 ஏதோ சொல்லிவிட்டு போய் இருக்கிறான். அந்த சொல்லை அவன்  காக்கவில்லை.

அது என்ன சொல் என்று பாடல் சொல்ல வில்லை. நம் கற்பனைக்கு விட்டு விடுகிறது.

ஒரு வேளை "ஒரு மாதத்தில் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பானோ ?"

தெரியாது.அப்படி எதுவாவது இருக்கலாம்.

அவள், தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

"என் உடல் வருத்தத்தில் மெலிகிறது. என் வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன. இந்த நோய் என் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் நான் எப்படி உயிர் வாழ்வேன். இந்த நண்டுகளைப் பார். இங்கு விளையாடும் பெண்கள் அதைப் பிடித்து விளையாட நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயந்து அது கடலை நோக்கி ஓடுகிறது. நல்ல வேளை , கடல் அந்த நண்டை தனக்குள் இழுத்துக் கொண்டு அதன் துயர் தீர்க்கிறது. அவனோ சொன்ன சொல் மாறி விட்டது"



ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்      
நோய்மலி வருத்த மன்னை யறியின்  
உளெனோ வாழி தோழி விளியா  
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை  
ஓரை மகளி ரோராங் காட்ட  
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி  
ஓங்குவரல் விரிதிரை களையும்  
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 

Sunday, January 19, 2014

குறுந்தொகை - காடா ? வீடா ? எது சுகம்

குறுந்தொகை - காடா ? வீடா ? எது சுகம் 



உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!


அவன் பொருள் தேட வெளி நாடு செல்ல விரும்புகிறான். அவனுடைய காதலி தானும் கூட வருவேன் என்கிறாள். அவனுக்கு அவளை அழைத்துச் செல்ல .விருப்பம் இல்லை. அவன் கையில் காசு இல்லை. அவனே எப்படியோ அங்கே இங்கே தங்கி எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவளை வேறு எப்படி கூட்டிக் கொண்டு  என்று அவன் தயங்குகிறான். செல்லும் வழி வேறு கடினமான பாதை. இன்று போல் அன்று வாகன வசதி கிடையாது. 

சுட்டெரிக்கும் வெயில். பாதம் சுடும் மணல். 

பசியும் தாகமும் அழையா விருந்தாளியாக கூடவே வரும்.

செல்லமாக வளர்ந்த பெண் அவள். இதை எல்லாம் தாங்குவாளா ? என்று அவன் யோசிக்கிறான். 

அவளுக்கும் புரிகிறது. இருந்தாலும் அவன் கூட செல்ல வேண்டும் என்ற விருப்பம் நாய் குட்டியாக காலை சுற்றி சுற்றி வருகிறது. 

தன் தோழியிடம் சொல்லி அவனை தன்னையும் அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறாள். 

தோழி வந்து தலைவனிடம் சொல்லுகிறாள்...

"நீ நினைப்பது சரிதான். பாலை நிலம் கொடுமையானது தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நீ போன பின் அவள் தனியாக இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்று  நினைக்கிறாய் ? வணிகர்கள் ஒன்று கூடி வியாபரத்திற்காக ஊர் கோடியில் கூடாரம் அடித்து , தங்குவார்கள். வணிகம் நடக்கும். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். வாங்குவதும் , கொடுப்பதும் ஒரே குதூகலமாய் இருக்கும். இராட்டினம், இசை, உணவு விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், வண்டி கட்டிக் கொண்டு வருபவர்கள் என்று ஒரே கொண்டாட்டமாய்  இருக்கும். பொருள் எல்லாம் விற்று தீர்ந்தவுடன், இடத்தை காலி செய்து விட்டு போய்  விடுவார்கள். அந்த இடமே வெறிச்சோடி போய் விடும். அது போல நீ போன பின், அவள் இருக்கும் வீடு வெறிச்சோடிப் போய் விடும்.  எனவே,அவளையும் கூட்டிக் கொண்டு போ"  என்கிறாள். 

பொருள் 

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து 

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின் 

மருங்கின் = இடத்தின் 

அகன்தலை = விலகிய இடத்தில் 

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல 

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு 

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால் 

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே 

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே ?



Wednesday, January 8, 2014

குறுந்தொகை - நீ உண்ட என் நலனே

குறுந்தொகை - நீ உண்ட என் நலனே 


அது ஒரு கடற்கரையில் உள்ள சின்ன கிராமம் அல்லது சேரி. நீண்ட மணர் பரப்பு. அங்கங்கே புன்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றின் கிளைகள் தாழ்ந்து வளைந்து தரையை தொடுகின்றன. அதற்குள் யாரும் நின்றால் வெளியில் அவ்வளவாக தெரியாது. அந்த மரங்களில் சில பறவைகள் இருக்கின்றன.

அவனும் அவளும் அங்குதான் சந்தித்துக் கொள்வார்கள்.

மெத்தென்ற மணல் பரப்பு. தலை கோதும் கடற் காற்று. மடி தாங்கும்  புன்னை மரம். அழகான அவள். மேலும் அவன்.

ஆனால் இப்போ கொஞ்ச நாளாய் அவன் அவளை கண்டு கொள்வது இல்லை. வருவதும் இல்லை. பார்ப்பதும் இல்லை. அவளுக்கு கவலை. தோழியிடம் சொல்லி அனுப்புகிறாள்.

தோழி, தலைவனிடம் சென்று கூறுகிறாள்.

"நீ அவளை கை விட்டு விடும் நாளும் வந்து விடும் போல் இருக்கிறது. ஒரு வேளை நீ அப்படி அவளை கை விட்டு விட்டால், நீ அவளை சந்திப்பதற்கு முன் எப்படி இருந்தாளோ அப்படியே அவளை திருப்பிக் கொடு " என்று அவனிடம் சண்டை பிடிக்கிறாள்.


பாடல்

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.


பொருள்


விட்டென விடுக்கும் நாள் வருக = நீ அவளை விட்டு விட்டு செல்லும் நாளும் வருக. அதாவது, அந்த நாளும் வந்து விடும் போல இருக்கிறது. அப்படி என்றால், அது வரட்டும். 

அது நீ = அதை நீ

நேர்ந்தனை ஆயின் = விரும்புவாய் ஆயின்

தந்தனை சென்மோ! = தந்து விட்டு செல்

குன்றத்தன்ன = குன்று போல

குவவு மணல் அடைகரை = குவிந்த மணலை கொண்ட கரையில்

நின்ற புன்னை  = நிற்கின்ற புன்னை மரங்கள்

நிலம் தோய் படு சினை = நிலம் தொடும் கிளைகள் (சினை = கிளை)

வம்ப நாரை சேக்கும் = இளைய நாரை (ஒரு வித பறவை) வந்து இருக்கும்

தண் கடற் சேர்ப்ப! = குளிர்ந்த கடலை கொண்ட தலைவனே

நீ உண்ட என் நலனே. = நீ அனுபவித்த எம் நலனே


ஏன் இந்த நாரையை இங்கு சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்....

நாரை ஒரு வித  மீன் கொத்தி பறவை. கடலுக்குச் செல்லாமால் நிலத்தில் மரக் கிளையில்  உட்கார்ந்து இருக்கிறது. அதற்கு உண்ண பிடிக்க வில்லை. பறக்க பிடிக்கவில்லை. தனியாக , மரத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அந்த தலைவியைப் போல. 

நீயும், என் தலைவியும் கூடி இருந்த போது இந்த நாரை சாட்சியாக இருந்திருக்கும். ஞாபகம் இருக்கிறதா ?

இந்த முட்டாள் நாரை கடலுக்கு சென்று, ஆனந்தமாக பறந்து , மீன் பிடித்து உண்பதை விட்டு விட்டு இப்படி மரத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அது போல நீயும் முட்டாள் தனமாக  என் தலைவியை விட்டு விட்டு தனியாக இருக்கப் போகிறாய். 

என்று அந்த தனிமையான நாரை பல பொருள்களை உணர்த்திக் கொண்டு இருக்கிறது. 

காலம் பல கடந்தும் , அந்த நாரையின் ஒற்றை விழி இன்றும் நம்மை பார்பதை நாம் உணர முடியும். 

குறுந்தொகை !


Sunday, December 29, 2013

குறுந்தொகை - நல் அறிவு இழந்த காமம்

குறுந்தொகை - நல் அறிவு இழந்த காமம் 


அவளுக்கு, அவன் மேல் அளவற்ற காதல். அவனோ மேல் ஜாதிப் பையன். இவளோ சேரியில் வாழ்பவள். காதலுக்கு கண்ணா இருக்கு இதை எல்லாம் அறிந்து கொள்ள ? காதல் வந்து  விட்டது.

பாறையின் இடுக்கில் முளை விடும் செடி போல் அவள் மனதில் காதல்.

தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்....

"அவன் இந்த சேரி பக்கம் எல்லாம் வர மாட்டான், அப்படியே வந்தாலும் என்னை கட்டி அணைக்க மாட்டான். மற்றவர்களின் சுடு காட்டைப் எப்படி வெறுப்போடு பார்ப்போமோ அப்படி என்னை பார்ப்பான். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எப்படி வேறு எதையும் சட்டை பண்ணாமல் நேரே போகுமோ அது போல என் காமம் எதையும் காணாமல் அவன் பால் செல்கிறது " என்று சொல்லி கண் கலங்குகிறாள்.....

பாடல்

ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் 
சேரி வரினு மார முயங்கார் 
ஏதி லாளர் சுடலை போலக் 
காணாக் கழிப மன்னே நாணட்டு 
நல்லறி விழந்த காமம் 
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே. 

பொருள் 

ஓரூர் வாழினுஞ் = ஒரே ஊரில் வாழ்ந்தாலும் 

சேரி வாரார்  = நாம் வாழும் இந்த சேரிக்கு வாரார்

சேரி வரினும் = சேரிக்கு வந்தாலும் 

மார முயங்கார் = என்னை மார்போடு கட்டி அணைக்க மாட்டான்

ஏதி லாளர் = மற்றவர்களின்

சுடலை போலக் = சுடு காட்டைப் போல
 
காணாக் கழிப = காணமல் போய் விடுவான்

மன்னே

நாணட்டு = நாண் + அற்று = நாணம் அற்று

நல்லறி விழந்த காமம் = நல்ல அறிவை இழந்த காமம்

வில்லுமிழ் = வில்லு உமிழும் , வில்லில் இருந்து வெளிப்பட்ட

கணையிற் சென்று = கணை (அம்பு) போல சென்று

சேட் படவே. = தூரத்தில் செல்லுமே அது போல

சுடுகாட்டை யார் விரும்புவார்கள். கண்டாலும் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். சற்று வேகமாக போய் விடுவார்கள். அதிலும் மற்ற ஜாதி காரர்களின்  சுடு காடு என்றால் எவ்வளவு வெறுப்பு இருக்கும் ? அப்படி என் மேல்  வெறுப்பு கொள்கிறான் என்று கலங்குகிறாள்.

அவள் சோகத்தின், கண்ணீரின் ஈரம் காலம் கடந்து வந்தும் நம் நெஞ்சை தொடுகிறது அல்லவா ?




Wednesday, December 25, 2013

குறுந்தொகை - இந்த மனசு போய் என்ன செய்யப் போகிறது ?

குறுந்தொகை - இந்த மனசு போய் என்ன செய்யப் போகிறது ?


நான் இங்கே இருக்கேன்...என்னோட மனசு இருக்கே அது இப்படி ஊருக்கு முந்தி அவளைப் போய் பார்த்து என்ன செய்யப் போகுது...நான் என் கையால அவளை கட்டி பிடிக்கிற மாதிரி வருமா இந்த மனம் கட்டிப் பிடிப்பது ?

இன்னும் எவ்வளவு தூரம் போகணும் அவளை பார்க்க, ஆனா இந்த மனம் எங்கே கேக்குது...அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளை பார்க்க....



அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 
நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
சேய வம்ம விருமா மிடையே 
மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
கோட்புலி வழங்குஞ் சோலை 
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள்

அஞ்சுவது அறியாது = அஞ்சுவதை அறியாமல்

தமர் = தமர் என்றால் துணை, உறவு. இங்கு தலைவி

துணை = துணை

தழீஇய  = தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் மனம்

நம் பிரிந்தன்று = நம்மை விட்டு பிரிந்து சென்றது

ஆயினும் = ஆனாலும்

எஞ்சிய = மீதம் உள்ள (வெறும் மனம் மட்டும் போனால், மீதியுள்ள உடல்)


கை = கை

பிணி = பிணித்தல், தழுவதல்

நெகிழின் = நெகிழ்ந்தால்

அ ஃது எவன் = அதனால் என்ன பயன் ?

நன்றும் = நல்ல, இந்த இடத்தில் நிறைய

சேய = தூரம் உள்ள

இருவாம் இடையே  = எங்கள் இருவருக்கும் உள்ள இடை வெளி

மாக் கடல் = பெரிய கடல்

திரையின் = அலைகளின்
முழங்கி  = முழக்கம் போன்ற ஒலி

வலனேர்பு = வலமாக எழுந்து
 
கோட்புலி = கொடுமையான புலி

வழங்குஞ் சோலை = இருக்கும் கானகம்

எனைத்து = எத்தனை

என்று = என்று

எண்ணுகோ  = எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைப்பதற்கு

மலைவே = மலைபோல் தடையாக உள்ள

கொஞ்சம் கரடு முரடான பாடல் அமைப்பு தான். வார்த்தைகளை கொஞ்சம் இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம்  விளங்கும்.


தலைவன் வேலை முடித்து விட்டு ஊர் திரும்புகிறான். சண்டைக்கு போய் விட்டோ, அல்லது பொருள் சேர்த்துவிட்டோ ரொம்ப நாள் கழித்து வருகிறான்.

தேரில் மிக விரைவாக மனைவியைத் தேடி வருகிறான்.

வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள்.

அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது.

ஆபத்தான வழிதான்.

அவன் நினைத்துப் பார்க்கிறான்... அவள் எப்படி இருப்பாள் ? என்ன உடை உடுத்தி இருப்பாள் ? என்ன நகை போட்டு இருப்பாள் என்று அவன் அவன் கற்பனை விரிகிறது...அவளைப் பார்க்க அவன் மனம் அவனுக்கு முன்னே ஓடிவிட்டது.

கற்பனையில் அவளைக் கண்டு மகிழ்கிறான்...


அவனுக்கு புன் முறுவல் வருகிறது....

இந்த மனம் போய் என்ன செய்யப் போகிறது...இந்த மனதால் அவளை கட்டி பிடிக்க முடியுமா  ? அப்படியே கட்டி பிடித்தாலும் நான் என் கையால் அவளை அணைப்பது போல  வருமா என்று புன்முறுவல் பூக்கிறான்....


இரசனையான பாடல் ...

தலைவன் தலைவிக்கு இடையே உள்ள அன்பை வெளிப் படுத்தும் ஒரு இனிய பாடல்.

இப்படி பல பாடல்களைக் கொண்டது குறுந்தொகை....நேரமிருப்பின் மூல நூலைப் படித்துப் பாருங்கள்.




Sunday, October 27, 2013

குறுந்தொகை - காமர் மாந்தி

குறுந்தொகை - காமர் மாந்தி 


இது நடந்ததா, நடக்குமா இல்லை வெறும் கற்பனையா என்று தெரியாது. இருந்தாலும் மனதைத் தொடும் பாடல்.

தோழி சொல்கிறாள் தலைவனிடம்

கரிய தலையை கொண்ட ஆண்  குரங்கு இறந்த  பின்,அதன் ஜோடி பெண் குரங்கு அதன் குட்டிகளை தன் உறவினர்களிடம் கொடுத்து விட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொள்ளும் மலைகளை கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே, இனிமேல் இரவு நேரத்தில் தலைவியை காண வராதே...இரவில், மலை பாங்கான வழியில் உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எங்களுக்கு வருத்தமாய் இருக்கிறது.....

பாடல்

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

பொருள்

கருங்கண் = கரிய கண்கள் 

தா(க்) = தாவும்

கலை =  ஆண் குரங்கு

பெரும் பிறிது = பெரிய பிரிவு , அதாவது மரணம்

உற்றனக் = அடைந்ததை

கைம்மை = விதவையான

உய்யாக் = வாழும் வழி தெரியாத, வாழ விருப்பம் இல்லாத

காமர் மந்தி = காதல் கொண்ட பெண் குரங்கு

கல்லா = வயதாகத

வன் பறழ் = சுட்டித் தனம் நிறைந்த குட்டியை

கிளை முதல் சேர்த்தி = உறவினர்களிடம் சேர்த்துவிட்டு

ஓங்கு = உயர்ந்த

வரை = மலை

அடுக்கத்துப் பாய்ந்து = பள்ளத்தில் பாய்ந்து

உயிர் செகுக்கும் = உயிரை விடும்

சாரல் நாட = அந்த மாதிரி உள்ள நாட்டைச் சேர்ந்தவனே

நடுநாள் = நடு இரவில்

வாரல் = நீ வராதே 

வாழியோ = நீ வாழ்க 

வருந்துதும் யாமே. = நாங்கள் வருந்துவோம்

குரங்குக்கு அவ்வளவு காதல், அவ்வளவு பொறுப்பு....அப்படி என்றால் அந்த ஊர் மக்களைப் பற்றி  என்ன சொல்லுவது....




Wednesday, October 23, 2013

குறுந்தொகை - யாயும் ஞாயும்

குறுந்தொகை - யாயும் ஞாயும் 


தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப் படுகிறார்கள். அவர்கள் உள்ளம் ஒன்றோடு ஒன்று கலக்கிறது.

என்ன ஆச்சரியம் !

கலந்தது அவர்கள், ஆனால் அவளின் தாய்க்கும் அவனின் தாய்க்கும் உறவு ஏற்பட்டது. அவர்கள் உறவினர்கள் ஆகி விட்டார்கள். அவனின் தந்தைக்கும் அவளின் தந்தைக்கும் உறவு ஏற்பட்டது. அவர்களும் உறவினர்கள் ஆகி விட்டார்கள். நிலத்தோடு கலந்த நீர் நிலந்தின் தன்மையை பெறுவதைப் போல அவளின் மனம் அவனோடு இரண்டற கலந்து விட்டது.

குறுந்தொகையில் உள்ள ஆச்சரியமான எளிமையான பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார் ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள் ?

செம்புலப் பெயல் நீர் போல = சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே

Sunday, September 29, 2013

குறுந்தொகை - மணந்த மார்பே

குறுந்தொகை - மணந்த மார்பே 


குறுந்தொகை போன்ற பாடல்களை படிக்கும் போது அவை எழுதப் பட்ட காலத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத காலம். சின்ன கிராமங்கள். விவசாயம் மட்டுமே பிரதானமாய் இருந்த காலம். ஊரை அடுத்து காடு இருக்கும். சில சமயம் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. 

அது ஒரு குளிர் காலம். முன் பனிக் காலம். பின்னிரவு நேரம். நிலவொளியில் ஊரே குளித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காற்று உயிரையும் சேர்த்து வருடிச் செல்லும் காலம். 
குளிர் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே. காட்டில் உள்ள மான்களையும் அது சென்று காதோரம் காதல் பேசி விட்டு செல்கிறது. குளிர் தாங்காமல் அவை மெல்ல மெல்ல அந்த கிராமத்துக்கு வருகின்றன. அங்குள்ள வயல்களில் உளுந்து விளைந்திருக்கிறது. அவற்றை அவை உண்ண நினைக்கின்றன. உணவு உண்டால் கொஞ்சம் உடல் சூடு பிறக்கும். இந்த குளிரை தாங்க முடியும் என்று அவை நினைகின்றன. 

அந்த ஊரில் உள்ள தலைவிக்கும் தூக்கம் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து நிலவொளியில் வயல் வரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். மான்கள் மெல்ல மெல்ல வருவது தெரிகிறது. 

ஹ்ம்ம்ம் என்ற பெரு மூச்சு வருகிறது...அவன் அருகில் இருந்தால் இந்த குளிருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அவன் மார்பில் சாய்ந்து இந்த குளிர் தரும் துன்பத்தை போக்கிக் கொள்ளலாமே என்று நினைக்கிறாள். 

பாடல் 

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

பொருள்

பூழ்க்கால் = காடை என்ற பறவையின் காலைப் 

அன்ன = போல 
செங்கால் = சிவந்த கால்களை உடைய 
உழுந்தின் = உளுந்து செடியின் 

ஊழ்ப்படு = காலத்தால் 
முதுகாய் = முற்றிய காய்களை 
உழையினங் கவரும் = மான் இனம் கவரும். உண்பதற்கு வரும் 
அரும்பனி = கடுமையான பனி
அற்சிரம் = அந்த சிரமத்தை  
தீர்க்கும் = போக்கும் 
மருந்து பிறிதில்லை = மருந்து பிறிது இல்லை 
அவர் மணந்த மார்பே = அவரோடு நான் இணைந்திருந்த அவரின் மார்பை தவிர 

யோசித்துப் பார்த்தேன்....எதுக்கு இந்த மான், உளுந்து எல்லாம் இந்த பாடலில். பேசாமல் குளிர் வேதனை போக்க மருந்து அவன் மார்பு என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே ?

சொல்லலாம். 

மான்கள் வருவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கும் அந்த ஊரின் தன்மை, உளுந்து விளையும் மண்ணின் தன்மை, குறைந்த மழை பெய்யும் அடி வருடும் வறட்சி, பயிர்களை உண்ணத் தலைப்படும் மான்களின் பசி, அது இரவு நேரமாக இருக்கும் என்ற யூகத்திற்கு இடம் தருவதும், (பகலில் வந்தால் விரட்டி விடுவார்களே), தூக்கம் வராதா தலைவி அதை பார்த்துக் கொண்டிருப்பதும், தலைவனை நினைத்து ஏங்குவதும் ... 

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அழகான பாடல் 
 

 


Sunday, September 22, 2013

குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?

குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?


காதல் - உயிர்களின் ஜீவ நாடி.

காதலுக்காக ஏங்குவதும், காதலைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்பாத உயிர்கள் இருக்குமா என்ன ?

ஆனால், சுத்தி முத்தும் பார்த்தால் அப்படி காதலுக்காக உருகுபவர்கள் நிறைய இருப்பது மாதிரி தெரியவில்லை.

பணம், பொருள், பதவி, அறிவு என்று பலவற்றை தேடுபவர்கள்தான் அதிகமாகத் தெரிகிறார்கள்.

அன்பு யாருக்கு வேண்டும் ?

தான் அன்பு செலுத்துபவர்களின் வரும் வழி பார்த்து , விழி சோர நிற்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ?

மழை தேடும் மண்ணைப் போல மனம் தேடும் மக்கள் எத்தனை ?

காதலிக்காக காதலனுக்காக கால் கடுக்க நடந்தவர்கள், காத்துக் கிடந்து கால் தேய்ந்தவர்கள் எவ்வளவு பேர் ?

பாடல்

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

பொருள்


Saturday, September 21, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 




அந்தக் காலம். 

 ஒரு சின்ன கிராமம். 

 மின்சாரம் கிடையாது. மழையை நம்பிய விவசாயம். விவசாயம் இல்லை என்றால் வருமானம் இல்லை, வேலை இல்லை. சாப்பாட்டுக்கு  வழி இல்லை. 

மக்கள் என்ன செய்வார்கள் ? ஊரைக் காலி செய்துவிட்டு போய் விடுவார்கள். வீடுகளை அப்படியே விட்டு விட்டுப்  போய் விடுவார்கள்.

காலி வீட்டை ஏன் பூட்டி வைக்க வேண்டும் ? அப்படியே திறந்து கிடக்கும்.

வெயில். கொளுத்தும் வெயில். பட்டுப் போன மரங்கள். சூடு தாங்காமல் மரத்தில் உள்ள அணில்கள் அங்குள்ள வீடுகளின் மேல் உள்ள ஓடுகளில் தாவி தாவி இறங்கி வீட்டு முற்றத்தில் இறங்கி நிழல் தேடி வரும். வீட்டில் சிதறி கிடக்கும் சில பல தானிய மணிகளை உண்ணும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் எங்கும் ஓடும்...உணவைத் தேடி.

முற்றத்தை தாண்டிக் குதித்து வாசலுக்கு ஓடும். அங்கிருந்து முற்றம் வழியாக பின் வாசலுக்கு ஓடும்.  

அங்குள்ள வீடுகளில் அணில்களின் ஓட்டத்தைத் தவிர வேறு ஒரு உயிரும் இல்லை. 

ஆனால் , முன்பு அப்படி அல்ல. 

தேரும் திருவிழாவுமாக அந்த ஊர் ஒரே கோலாகாலமாக  இருக்கும்.வான வேடிக்கை, இசைக் கருவிகளின் இசை, கடைத் தெருக்களில் வாங்கவும் விற்கவும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.  

அந்த  வீட்டுகளுக்கு வருத்தம் இருக்குமா ? கணவனும், மனைவியும், பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து அவர்கள் சுக துக்கங்களைப் பார்த்த அந்த வீடுகளுக்கு, இப்போது தனிமையில் இருப்பது கொஞ்சம் வருத்தமாய் இருக்குமோ ?


அந்த வீடுகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறாள் அந்தப் பெண். அவள் காதலனும் பஞ்சம் பிழைக்க வெளியூர் போய் விட்டான். அவனோடு இருந்த காலத்தில் விழாக் கோலம் பூண்ட ஊர் போல சந்தோஷமாக  இருந்தேன்.ஆனால் இன்றோ அவனைப் பிரிந்து அணில்கள் விளையாடும் வெற்று ஊர் போல இருக்கிறது என் வாழ்க்கையும் 


 பாடல் 

காதலர் உழைய ராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.


பொருள் 


Saturday, September 14, 2013

குறுந்தொகை - ஆணின் நாணம்

குறுந்தொகை - ஆணின் நாணம் 




அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.

பெண்ணுக்கு நாணம் வரும். கேள்வி பட்டு இருக்கிறோம். ஆணின் நாணம் ?

குறுந்தொகை ஆணின் நாணத்தைப் பற்றி பேசுகிறது.

அவன் ஒரு இளைஞன்,  அந்த ஊரில் ஒரு அழகான பெண். அவள் மேல் அவனுக்கு ரொம்ப காதல். ஆனால், அவளோ இவன் காதலை ஏற்றுக் கொள்வதாக இல்லை. ரொம்பத்தான் ராங்கி பண்ணிக்  கொள்ளுகிறாள். இவனும் விடுவதாக இல்லை. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று இருக்கிறான்.

அந்த காலத்தில் மடல் ஊறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணை விரும்பும் ஆடவன், அவளை அடைவதற்கு அவளின் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை  என்றால்,அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால், பனை ஓலையில் குதிரை மாதிரி பொம்மை செய்து, அதன் மேல் ஏறி உட்கர்ந்து கொள்வான்.

ஊரில் உள்ளோர் எல்லாம் அவனைப் பார்த்து சிரிப்பார்கள், சில பேர் பாவம் என்று நினைப்பார்கள். எப்படியோ, ஊர் எல்லாம் தெரிந்து விடும்.

அந்த பெண்ணை வேறு யார் மணப்பார்கள் ? கடைசியில் அவளை அவனுக்கே கட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்தப் பாடலில், தலைவன் தான் அப்படி செய்வேன் என்று சொல்லவில்லை. இருந்தாலும்  எப்படியாவது அவளை மணந்து  கொள்வேன்.

அப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக ஊருக்குள் செல்லும்போது , அப்போது இந்த ஊரில் உள்ளவர்கள் சொல்லுவார்கள்..."இவன் கொஞ்சம்  விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும், நல்ல பையன் ...இவள் ஒரு நல்லவனைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் " என்று சொல்லுவார்கள். அப்படி சொல்வதை கேட்க்கும்போது எனக்கு   கொஞ்சம் வெட்கமாக இருக்கும் என்கிறான்.


துள்ளித் திரிந்த வாலிபப் பையன், காதலியை கை பிடிக்க என்ன வெல்லாம் செய்தான், இப்ப பாரு எவ்வளவு நல்ல பையனாக இருக்கிறான் என்று சொல்லுவார்கள். அதை கேட்கும் போது எனக்கு கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.

பொருள்


அமிழ்து பொதி செந்நா = அவளுடைய நாக்கு இருக்கிறதே, அது அமிழ்தை பொதிந்து வைத்ததைப் போல இனிமையானது

அஞ்சவந்த = அஞ்சும்படி

வார்ந்து = வார்த்து வைத்ததைப் போன்ற

இலங்கு = விளங்கும் 

வைஎயிற்றுச் = கூர்மையான பற்கள்

சின்மொழி = சின்ன சின்ன மொழி பேசும் 

அரிவையைப் = இளம் பெண்ணை

பெறுகதில் அம்ம யானே! = எப்படியாவது பெறுவேன்

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் அம்ம, = நீ அறிவாய்

இவ்வூரே! = இந்த ஊரே

மறுகில் = தெருவில்

நல்லோள் கணவன் இவன் எனப் = நல்ல பெண்ணை மணந்த கணவன் இவன் என

பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே = பலபேர் சொல்லுவதை கேட்க்கும் போது  நான் கொஞ்சம்  நாணம் அடைவேன்


Wednesday, September 11, 2013

குறுந்தொகை - பிரிவுத் துயர்

குறுந்தொகை - பிரிவுத் துயர்

பிரிவுத் துயர் எவ்வளவு கடினமானது என்று அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

இருப்பு கொள்ளாது. எப்ப பாக்கப் போறோம், எப்ப பாக்க போறோம் என்று மனம் கிடந்து தவிக்கும். வெளியேயும் சொல்ல முடியாது. உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாது.

இங்கே பார்க்க மாட்டோமா, அங்கே பார்த்து விட மாட்டோமா என்று மனம் கிடந்து அலையும்.

பார்க்கும் இடம் எல்லாம் அவன் அல்லது அவளாகத் தெரியும்.

கூட்டமாக இருக்கும் இடம் எல்லாம் மனம் கவர்ந்தவனையோ, வளையோ மனம் கண்டு விட பர பரக்கும் .

காணாமல் சோர்ந்து போகும்.

அந்த பிரிவு துயரை தாங்கிக் கொள்ளவும் ஒரு வலு வேண்டும். எவ்வளவு நாள் தான் இந்த பிரிவைத் தாங்க முடியும் ?

குறுந்தொகையில் , தலைவி தலைவனை பிரிந்த துயரை தோழிக்கு சொல்கிறாள்.

அவள் ஊரில் மலைகள் உண்டு. அழகிய சோலைகள் உண்டு. அந்த சோலைகளில் வாழும் மயில்கள்,  பாறையோரம் முட்டை இட்டு வைத்து இருக்கும். அந்த முட்டைகளை, அங்கு உள்ள ஆண் குரங்கு குட்டிகள் பந்து என நினைத்து உருட்டி விளையாடும். அப்படிபட்ட குரங்குகளை கொண்ட நாட்டின் தலைவனை நட்பாக கொண்டேன். இன்று அவன் பிரிவு என்ன வாட்டுகிறது. இந்த பிரிவுத் துயரை ஆற்றல் உள்ளவர்களால் தான் தாங்க முடியும். (என்னால் முடியாது என்பது பொருள்)

பாடல்

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே.

பொருள்


Sunday, September 8, 2013

குறுந்தொகை - நனைந்த பாறைகள்

குறுந்தொகை - நனைந்த பாறைகள் 


மழை !

மழையைக் கண்டால் எல்லோரும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். குடைக்குள் மறைந்து கொள்கிறார்கள்.

எத்தனை பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும் ?

மழை முதலில் உடையை நனைக்கும்...பின் உடலை ...பின் உயிரை நனைக்கும்.

மழை விட்ட பின், ஊரே கழுவி விட்ட மாதிரி சுத்தமாக இருக்கும். இலைகள் எல்லாம் பளிச்சென்று இருக்கும். காற்றில் ஈரம் காதோரம் கவிதை சொல்லும்.

அது ஒரு சின்ன கிராமம். அவனும் அவளும் ஊருக்கு வெளியே அடிக்கடி சந்திப்பார்கள். யார் கண்ணிலும் படாமல் இருக்க அங்கிருக்கும் பெரிய பாறைகளுக்கு பின்னே மறைவாக அமர்ந்து பேசுவார்கள், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயல்வார்கள்...

கொஞ்ச நாளாக அவன் வரவில்லை. அவனைத் தேடி அவள் போகிறாள். அவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு பாறையாக சென்று பார்க்கிறாள்.

அவர்கள் வருவார்களோ இல்லையோ, காத்திருப்பது ஒரு சுகம். அதிலும் மழையில் காத்திருப்பது இன்னும் சுகம்.

அவள் காத்து இருக்கிறாள்.

மழை அன்றும் பெய்தது.

பெய்து ஓய்ந்தது.

அங்கிருந்த பாறைகள் எல்லாம் குளித்து வரும் யானை போல பள பளப்பாக இருக்கிறது.

அவளோட தோழி கேட்க்கிறாள் "எங்கடி போயிட்டு வர்ற..இந்த மழையில் ?"

"அவனைத் தேடித்தான்...ஒரு வேளை வருவானோ என்று காத்து இருந்தேன்...வரலை " என்றாள்.

அவள் கண்ணில் வருத்தம் ஒரு புறம், இன்னொரு புறம் அவனுக்காக காத்திருந்த காதல் ஒரு புறம்....அதைத்தான் பசலை என்கிறார்களோ....

பாடல்


மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.

பொருள்

மாசுஅறக் = தூசி இல்லாத

கழீஇய = கழுவி விட்ட


யானை போலப் = யானையைப் போல

பெரும்பெயல் = அடித்துப் பெய்த மழையில்

உழந்த = அங்கும் இங்கும் அலையும்

இரும்பிணர்த் = கரிய, கரடு முரடான

துறு கல் = பெரிய பாறைகள்

பைதல் = நனைந்த, ஈரமான

ஒருதலைச் சேக்கும் = அந்த பாறைகளின் மறுபக்கம் என்னை சேர்க்கும். ஒருதலை என்றால் ஒரு பக்கம். பாறையின் அந்தப் பக்கம்.

நாடன் = அந்த ஊர்க் காரன்

நோய் தந்தனனே = காதல் எனும் நோய் தந்தான். பிரிவு எனும் நோய் தந்தான்.

தோழி! = தோழி

பசலை ஆர்ந்த = பசலை படர்ந்தது

 நம் குவளை அம் கண்ணே = குவளை போன்ற என் அழகிய  கண்ணே


காலம் காலமாக , இந்த காதல் பயிரை , மழைதான் நீர் விட்டு வளர்த்து இருக்கிறது. 


Saturday, August 31, 2013

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர்

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர் 


அவர்களுக்குள்  காதல். அவர்கள் காதலிப்பதை ஊரே  அறியும். திருமணத்திற்கு பொருள் சேர்க்க வேண்டாமா ? அவன் திரும்பி வருவதாகச் சொல்லி, பொருள் தேட சென்று  .விட்டான். நாள் ஆகிக் கொண்டே  இருக்கிறது.அவன் வந்தபாடில்லை. ஊர் எல்லாம் ஒரு மாதிரி பேசத் தொடங்கி  விட்டது. "இனிமேல் எங்கே வரப் போகிறான்....இவளை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்...பாவம் இவ...இனிமேல் இவளை யார் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள்" என்று கண்டமேனிக்கு ஊர் பேசுகிறது.

அவளுக்கோ, அவன் வரவில்லையே என்று ஒரு புறம்  கவலை. இன்னொருபுறம் அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலை. போன வழியோ பாலை  வனம். நல்ல ரோடு  கிடையாது. கொதிக்கும் பாலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நீர்ச் சுனைகள்  இருக்கும்.வழிப் பறி கொள்ளைகாரர்கள் வேறு. அவனுக்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று கவலை. 
இன்னொரு புறம், இந்த ஊரைப் பற்றி  எரிச்சல்...அவளுடைய வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறதே என்று....

பாடல்


எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்பவர் தேர் சென்ற ஆறே
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

பொருள்


எறும்பி அளையின் = எறும்பு ஊர்ந்து சென்ற தடம் போன்ற சின்ன பாதைகள் உள்ள

குறும்பல் சுனைய = சின்ன , பல குட்டைகளை  கொண்ட

உலைக் கல் அன்ன பாறை ஏறிக் = உலை போல் கொதிக்கும் பாறையின் மேல் ஏறி


கொடு வில் எயினர் = கொடிய வில்லை ஏந்திய வேடர்கள்

 பகழி மாய்க்கும் = அம்புகளை எய்து ஆட்களை கொல்லும்

கவலைத்து = கவலை தரக் கூடியது

என்பவர் தேர் சென்ற ஆறே = அவர் தேர் சென்ற வழி

அது மற்ற அவலம் கொள்ளாது = அப்படி அவர் சென்ற துன்பத்தை நினைக்காது

நொதுமல் கழறும் = பழிச் சொற்களை கூறும் 

இவ் அழுங்கல் ஊரே. = இந்த ஆரவாரமான, சத்தம் போடும் ஊரே



Wednesday, March 27, 2013

குறுந்தொகை - மொழி தெரியாத காதலன்

 குறுந்தொகை - மொழி தெரியாத காதலன் 



காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள்...காதுமா இல்லை ? மொழி தெரியாத  பற்றிய ஒரு பாடல் குறுந்தொகையில்...


கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் 
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி 
ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே 
எழுவினி வாழியென் னெஞ்சே முனாது 
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
மொழிபெயர் தேஎத்த ராயினும் 
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே. 


படிச்சாச்சா ? நல்லா இருக்குல ? எவ்வளவு இனிமையான பாடல்...அப்படின்னு சொல்லிட்டு போனா "உன்னை தூக்கி சைப்ரஸ்ல போட "னு  என்கூட சண்டைக்கு வருவீர்கள் 

சீர் பிரிக்கு முன், வார்த்தைக்கு வார்த்தைக்கு அர்த்தம் பார்க்குமுன் , பாடலின் பின்னணியை பார்ப்போம் ...


அவளுக்கு அவன் மேல் காதல். 

இரண்டு பேருக்கும் மொழி கூட பொது கிடையாது. எப்படிதான் காதலை சொன்னார்களோ. அதுதான் சுவாரசியமான விஷயம் 

அவன், அவனுடைய சொந்த ஊருக்குப் போய் விட்டான்....காதலிக்கு   வழக்கம் போல் கை வளையல்கள் நெகிழ்கிறது, தூக்கம்  வரவில்லை, (மின்சாரம், மின் விசிறி இல்லாமல் அந்த காலத்தில் எப்படி  தான் தூங்கினார்களோ ?)...பேசாம அவன் இருக்கும் ஊருக்கு போயிரலாமா  என்று யோசிக்கிறாள் ..என்ன அந்த ஊரில் எல்லோரும் வேறு மொழி பேசுபவர்கள் ... 

முதலில் பாடலை சீர் பிரிப்போம் 



கோடு ஈர் இலங்கு வளை நெகிழும் நாள் தொறும் 
பாடு இல் கலி உழும் கண்ணோடு புலம்பி 
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே 
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது 
குல்லை கண்ணி வடுகர் முனை அது 
பல் வேறு கட்டி நல் நாட்டு உம்பர் 
மொழி பெயர்த்தே எத்தர் ஆயினும் 
வழி பாடல் சூழ்ந்திசினி அவருடைய நாடே 

நிறையவே புரியுது இல்ல ?

வார்த்தை வார்த்தையா பிரிச்சு மேஞ்சுருவோமா ?



Thursday, March 14, 2013

குறுந்தொகை - நின் நெஞ்சு நேர்பவளே


குறுந்தொகை - நின் நெஞ்சு நேர்பவளே 


அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். காதலித்த போதும், திருமணம் ஆன பின்னும் அவளின் அன்பு மாறவில்லை. நாள் ஆக நாள் ஆக அவனுக்குள் ஏதேதோ தேடல்கள். அவனுக்கு அவள் மேல் இருந்த அன்பு குறைந்தது என்று சொல்ல முடியாது ஆனால் ஏதோ ஒரு திரை விழுந்த மாதிரி ஒரு வாழ்க்கை போய்  கொண்டே இருக்கிறது.

அவளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு வேறு யாரையாவது பிடித்திருக்கிறதோ ? தன்னை மணந்து கொண்டதால் அவனுக்கு வாழ்வில் அவன் தேடும் இன்பம் கிடைக்கவில்லையோ என்று அவள் வருந்துகிறாள். அவன் வேறு யாரையாவது தேடுகிறானா ?

நினைக்க நினைக்க அவன் மேல் அன்பு பெருகுகிறதே தவிர குறையவில்லை.

இன்னொரு பிறவி என்று வந்தால் அவன் மனம் முழுவதும் நானே நிறைந்திருக்க வேண்டும் மனதிற்குள் வேண்டிக் கொள்கிறாள்.

பாடல்

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து 
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப 
இம்மை மாறி மறுமை யாயினும் 
நீயா கியரென் கணவனை 
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 


பொருள்:


அணிற்பல் லன்ன = அணிலின் பல்லை போன்ற. (சிறிய, கூரிய பற்கள்)

கொங்குமுதிர் முண்டகத்து = கொங்கு என்றால் பூவில் உண்டாகும் மகரந்தம் அல்லது தேன். மகரந்தம் முற்றி முதிர்ந்த முள்ளிச் செடியில்

மணிக்கே ழன்ன = நீல மணிகளை போன்ற

மாநீர்ச் = பெரிய நீர், கடல்

சேர்ப்ப = சேர்ந்தவனே, தலைவனே

இம்மை மாறி = இந்த பிறவி போய்

மறுமை யாயினும் = மறு பிறவி வந்தாலும்

நீயா கியரென் கணவனை = நீயே என் கணவராக வர வேண்டும்

யானா கியர் = யான் + ஆகியர் = நானே

நின் னெஞ்சுநேர் பவளே.= நின் நெஞ்சு நேர்பவளே = உன் மனதில் இருப்பவளே


நீயே என் கணவனாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நிறுத்தி இருக்கலாம். அவன் கணவன் என்றால் இவள் மனைவி தானே.

அவன் மனதில் இருப்பவளாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவன் மனதுக்கு இனியவளாக, மனதுக்கு பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

இந்தப் பிறவியில் அப்படி இல்லை, அது முடியவும் முடியாது என்று உணர்ந்து அடுத்த பிறவியிலாவது அவன் நெஞ்சு நேர்பவளாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.

நேர்பவளே என்ற சொல் மிக இனிமையான சொல். நேர்தல் இயற்கையாக நிகழ்வது.

கணவன் மேல் பாசம் கொண்ட, அவன் அன்பை முழுமையாகப் பெற முடியாத, ஒரு இளம் பெண்ணின் மனக் கேவல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் காதில் சன்னமாக ஒலிக்கிறது...அவள் கன்னத்தில் உருண்டோடும் கண்ணீர் துளியின் ஈரத்தை நாம் உணரத் தருகிறது இந்தப் பாடல் ....

Sunday, January 20, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்


குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு. 

ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன. 

அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை. 

அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....



காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.  

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

காதலர் உழையராக பெரிது உவந்து 
சாறு கொள் ஊரிற் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அந்த குடி சீறூர் 
மக்கள் போகிய அணில் ஆடும்  முன்றில் 
புல்லப்பு இல் போல  புல்லென்று 
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே 

பொருள்