Showing posts with label திருவிளையாடற் புராணம். Show all posts
Showing posts with label திருவிளையாடற் புராணம். Show all posts

Sunday, September 14, 2014

திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம்

திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம் 


வரலாறு என்பது அரசர்களின், மந்திரிகளின், சேனாதிபதிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய அளவுக்கு சாதாரண மக்களைப் பற்றிப் பேசுவது இல்லை.

யானைகள் சண்டை இட்டால், இடையில் கிடந்து நசுங்கும் செடிகளைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்.

மாணிக்க வாசகரின் பக்தியை, அவரின் தமிழை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன், வைகையில் வெள்ளப் பெருக்கு  வர  வைத்தார்.

வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கரையை பலப் படுத்த வேண்டும் என்பது அரசனின் ஆணை.

தண்டோரா போட்டு சொல்லியாகி விட்டது.

அப்போது.....

அந்த ஊரில் (மதுரையில்) எல்லோருக்கும் ஆள் கிடைத்து விட்டது, ஒருத்தியைத் தவிர. அவள் பெயர் வந்தி . அவள் மதுரையின் தென் கிழக்கு திசையில் வசிப்பவள். மிக வயதானவள்.

பாடல்


இந் நிலை ஊரில் உள்ளார் யாவர்க்கும் கூலி யாளர் 
துன்னி முன் அளந்த எல்லைத் தொழில் முறை மூண்டு 
                                                       செய்வார் 
அந்நிலை நகரின் தென் கீழ்த் திசை உளாள் அளவில் 
                                                       ஆண்டு 

மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி பேர் வந்தி என்பாள்.


பொருள்

இந் நிலை = அந்த நிலையில்

ஊரில் உள்ளார் யாவர்க்கும் = ஊரில் உள்ள அனைவர்க்கும்

கூலி யாளர் = கூலி வேலை செய்பவர்கள் கிடைத்து, அவர்களும்

துன்னி = செறிதல் (ஒன்றாகக் கூடுதல்)

முன் அளந்த எல்லைத் = முன்பே யார் யாருக்கு எந்த இடத்தில் கரையை அடைக்க வேண்டும் என்று அளந்து கொடுத்த எல்லையில்

தொழில் முறை மூண்டு = தொழில் செய்ய ஆவலுடன்

செய்வார் = செய்வார்

அந்நிலை = அந்த நிலையில்

நகரின் = மதுரை நகரின்

தென் கீழ்த் திசை உளாள் = தென் கிழக்கு திசையில் உள்ளவள்

அளவில் = காலத்தில்

ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி = ஆண்டுகள் பல கழிந்த நரை மூதாட்டி ஒருத்தி

 பேர் வந்தி என்பாள் = அவள் பேர் வந்தி.



Thursday, September 4, 2014

திருவிளையாடல் - திட்டமிடுதலும் செயல் படுதலும் (Planning and Execution )

திருவிளையாடல் - திட்டமிடுதலும் செயல் படுதலும் (Planning and Execution )



வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அதை சரி செய்யுங்கள் என்று பாண்டிய மன்னன் மந்திரிகளுக்கு உத்தரவிடுகிறான். அவர்கள் எப்படி அதை செய்தார்கள் என்று ஒரே பாடல் விளக்குகிறது.

பாடல்


வெறித் தடக்கை மத யானை மந்திரிகள் வேறு வேறு
                                                  பல குடிகளும்
குறித்து எடுத்து எழுதி எல்லை இட்டு அளவு கோல்
                                                  கிடத்தி வரை கீறியே
அறுத்து விட்டு நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து
                                                  விடும் ஆள் எலாம்
செறித்து விட்டு அவர்க்கு அளந்த படி செய்மின் என்று
                                                  வருவித்தனர்.



வெறித் = கோபமும் வீரமும் கொண்ட

தடக்கை = தும்பிக்கைகளை கொண்ட

மதயானை = மதயானைகளை கொண்ட

மந்திரிகள் - மந்திரிகள்

வேறு வேறு பல குடிகளும் - வேறு வேறான பல குடிகளை கொண்ட மக்களை

குறித்து எடுத்து எழுதி - குறிப்பு எடுத்து எழுதி

எல்லையிட்டு - யார் யார் எந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எல்லை கோடுகளை வரைந்து

அளவு கோல் கிடத்தி  = அளவு கோலை (Scale ) வரை படத்தின் மேல் வைத்து 

வரைகீறி = எல்லைகளை வரைந்து 

அறுத்து விட்டு -   வரையறுத்து

நகர் எங்கணும் = ஊர் முழுவதும்

பறை அறைந்து = பறை சாற்றி அறிவித்து

விடும் ஆள் எலாம் செறித்து விட்டு - வேலை செய்யும் ஆட்களை எல்லாம் ஒன்றாக எல்லோரையும் ஓரிடத்தில் கொண்டு வந்து

அவர் அவர்க்கு அளந்தபடி செய்மின் என்று வருவித்தனர் - அவரவர்க்கு அளந்து கொடுத்த படி செய்யுங்கள் என்று கூறி அவர்களிடம் கூறினார்கள்


எவ்வளவு தெளிவான செயல் திட்டம்.

முதலில், மதுரையின் வரை படம் அவர்களிடம் இருந்திருக்கிறது.

இரண்டாவது, அவர்கள் வரை கோல் (scale ) வைத்திருந்திருக்கிறார்கள்

மூன்றாவது, யார் எந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

நான்காவது, தெளிவான அறிவிப்பு (communication ).

ஐந்தாவது, எல்லோரையும் ஓரிடத்தில் கொண்டுவந்து, அவர்களுக்கு அவர்கள் எங்கே வேலை  செய்ய வேண்டும் வரையறுத்து தருகிறார்கள். குழப்பம் இல்லாத  செயல் திட்டம்.

ஆறாவது, இப்படி வேலை நடக்கப் போகிறது என்று ஊர் எல்லாம் பறை அடித்து  அறிவிக்கிறார்கள். இப்படி வேலை செய்யப் போகிறவர்களுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு.

ஏழாவது, வேலைக்கு வேண்டிய ஆட்களை சேர்கிறார்கள் (resource mobilization ).

ஒரு பாடலுக்குள் எப்படி ஒரு அரசாங்கம் செயல் பட்டது என்று சொல்லி விடுகிறார்கள்.

எவ்வளவு ஆச்சரியமான அரசியல்.

தமிழ் இலக்கியத்தில் என்னவெல்லாம் இருக்கிறது.

மேலும் சிந்திப்போம்.




Wednesday, September 3, 2014

திரு விளையாடல் புராணம் - கடலில் சிக்கிய கலம் என

திரு விளையாடல் புராணம் - கடலில் சிக்கிய கலம் என 


ஒரு பிரச்னை என்று வந்து விட்டால், ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறது திருவிளையாடல் புராணம்.

எப்படி இப்படி எல்லாம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.

வைகையில் வெள்ளம் வருகிறது.

இப்போது வந்தால் என்ன செய்வோம்...வராது....வந்தால் என்ன செய்வோம் ?

ஏறக்குறைய ஒன்றும் செய்ய மாட்டோம். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போகச் சொல்லுவோம், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவோம், மற்றபடி அந்த வெள்ளத்தை வேடிக்கை பார்ப்போம்.

இது அரசாங்கத்தின் வேலை என்று அவரவர் தங்கள் வேலையை பார்க்கப் போய் விடுவார்கள்.


ஆனால், இங்கே,பாண்டிய மன்னனும் , அமைச்சர்களும், மக்களும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

பாண்டியன், எல்லா அமைச்சர்களையும்  அழைக்கிறான். இராணுவ அமைச்சர்,நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர் என்று எல்லோரையும் அழைக்கிறான். அதுவும் ஒன்றாக அழைக்கிறான்.

இதை கவனிக்க வேண்டியது அமைச்சர்களின் வேலை, என்று ஜாலியாக  அந்தப்புரம்  போகவில்லை. எல்லோரையும் ஒருங்கே அழைத்து, வெள்ளத்தினை அடக்குங்கள் என்று கட்டளை இடுகிறான்.  வெள்ளம் வந்து விட்டது, எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விடுங்கள் என்று அறிவிக்கச் சொல்ல வில்லை.

தெளிவான கட்டளை. "வெள்ளத்தை அடக்குங்கள்".

பாடல்

கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன 
                                   முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற 
                                  வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு
                                    மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது
                                      போயினார்.

சீர் பிரித்த பின்

கருங் கடல் திரை இடை கிடந்து கழல் கலம் என கன 
                                   முகடு அளாய்
வரும் புனற் பரவையுள் கிடந்து நகர் மறுகி உட்க மற 
                                  வேலினான்
ஒருங்கு அமைச்சரை விளித்து  நீர் கரை சுமந்து ஒதுக்கி வரும் 
                                    ஓத நீர்ப்
பொருங்கதத்தினை அடக்கு வீர் என அமைச்சரும்  தொழுது
                                      போயினார்.


பொருள் 

கருங் கடல் = கரிய கடலின்

திரை = அலை

இடை கிடந்து = இடையே கிடந்து

கழல் = தடுமாறும்

கலம் என = கப்பல் போல

கன முகடு அளாய் = வானத்தை அளாவி

வரும் = வரும்

புனற் = வெள்ள

பரவையுள் = பரப்பில்

கிடந்து நகர் மறுகி உட்க  = கிடைந்து (மதுரை ) நகரம் மறுகி வருத்தம் அடைய

மற வேலினான் = வீரம் பொருந்திய வேலைக் கொண்ட பாண்டிய மன்னன்

ஒருங்கு அமைச்சரை விளித்து = ஒன்றாக அனைத்து அமைச்சர்களையும் அழைத்து

 நீர் = நீங்கள்

கரை சுமந்து ஒதுக்கி வரும் = கரையை தாண்டி ஒதுங்கி வரும்

ஓத நீர்ப்  = பொங்கி வரும் நீரின்

பொருங்கதத்தினை  = பெரிய  வெள்ளத்தை

அடக்கு வீர் என = அடக்குங்கள் என்று கூற

அமைச்சரும்  தொழுது  போயினார். = அமைச்சர்களும் அவனை வணங்கி விடைப் பெற்று சென்றனர்.

அடுத்து அவர்கள் என்ன செய்தார்கள் ?

நம் அமைச்சர்களாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்....



Friday, August 29, 2014

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை


திருவிளையாடல் புராணம்.

அரசன் குதிரை வாங்கத் தந்த பணத்தில் திருபெருந்துறையில் கோவில் கட்டினார் மாணிக்க வாசகர்.

இறைவன் நரிகளை பரிகளாக்கி  தந்தான். பின் , அந்த பரிகள் மீண்டும் மீண்டும்   நரிகளாகி காட்டுக்குள் சென்று விட்டன.

கோபம் கொண்ட அரசன், மாணிக்க வாசகரை சுடு மணலில் உருட்டும்படி கட்டளை இட்டான்.

மாணிக்க வாசகரின் துயர் தீர்க்கும் பொருட்டு , மாணிக்க வாசகரின் பெருமையை உலகம் அறியும் பொருட்டு சிவன் நடத்திய திருவிளையாடலை காண்போம்.

திருவிளையாடல் என்றால் ஏதோ இறைவன் பொழுது போகாமல் செய்த விளையாடல் என்று நினைக்கக் கூடாது. அந்த கதைகளின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

அவற்றைப் பற்றி சிந்திப்போம்.

பாடல்

பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடியார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

சீர் பிரித்த பின்

பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போனபின்
விண் சுமந்த சுர நதி என பெருகுவித்த வையை இது விடையவன்
மண் சுமந்து திருமேனி மேல் அடி வடு ச்சுமந்த கதை ஓதுவாம் 


பொருள்

பண் சுமந்த = இசையோடு கூடிய பாடல்களை கொண்ட

மறை நாடரும் =  மறைகள் ஓதும் நாடார்

பொருள் = பொருள் செறிந்த

பதம் = திருவடிகளை

சுமந்த = சூடிய

முடியார் = தலையினை கூடிய மாணிக்க வாசகரின்

மனம் = மனம்

புண் சுமந்த துயர் தீர வந்த = புண் படும்படி நிகழ்ந்த துயர் தீர வந்த

 பரி நரிகளாய் அடவி போனபின் = குதிரைகள் நரிகளாகி கானகம் போன பின்

விண் சுமந்த = ஆகாயம் சுமந்த

சுர நதி என  = கங்கை என

பெருகுவித்த வையை இது = பெருகி வந்த வைகை இது

விடையவன் = எருதின் மேல் ஏறிய சிவன்  

மண் சுமந்து = மண் சுமந்து

திருமேனி மேல் = தன்னுடைய திருமேனியில்

அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம் = அடி பட்டு வடு சுமந்த கதையைச் சொல்லுவாம்

எவ்வளவு அழகான பாடல் !

மேலும் சுவைப்போம் , சிந்திப்போம்


Saturday, May 24, 2014

திருவிளையாடற் புராணம் - பெண்ணும் மரமும்

திருவிளையாடற் புராணம் - பெண்ணும் மரமும் 


பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.

காதல் கொண்டு கூடும்போது உள்ளம் மகிழ்ந்து உடல் பூரித்து குழைந்து இருப்பவர்களைப் போல, மழைக் காலத்தில் மரங்கள் தளிர் விட்டு மப்பும் மந்தாரமுமாக இருக்கும்.

அன்புக் காதலர்கள் அவர்களை விட்டு நீங்கினால் கண்ணில் நீர் வர உடல் எல்லாம் ஒரு வித பசலை படரும் அது மரங்களில் பசலை படர்வது போலவும்

ஒரு பெண் தன் காமத்தை, காதலை வாய் விட்டுச் சொன்னால் அது ஊர் பூராவும் வதந்தியாகப் பரவி விடும் அது மரங்களில் மலர்கள் கொத்து கொத்தாக பூத்து கிடப்பதைப் போல இருக்கிறது என்கிறார் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில்.....

பாடல்

ஊடினார் போல வெம்பி யிலையுதிர்ந் துயிரன் னாரைக்
கூடினார் போல வெங்குங் குழைவரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வாரமெய் பசந்து மையல்
நீடினா ரலர்போற் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.

சீர் பிரித்த பின்

ஊடினார் போல வெம்பி இலை உதிர்த்து உயிர் அன்பினாரை 
கூடினார் போல எங்கும் குழை வரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வார மெய் பசந்து மையல்
நீடினார் அலர் போல் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.


பொருள் 

ஊடினார் போல = ஊடல் கொண்ட பெண்களைப் போல

வெம்பி = வெம்பி

இலை உதிர்த்து = இலை உதிர்த்து

உயிர் அன்பினாரை = உயிருக்கு உயிரான அன்பினாரை (காதலரை, கணவரை)

கூடினார் போல = கூடியவர்களைப் போல

எங்கும் = எல்லா இடங்களிலும்

குழை = இலைகள்

வரத் தழைத்து = வரும் போது எப்படி தழைத்து நிற்குமோ அது போல

 நீங்கி = கணவரை, காதலரை நீங்கிய பெண்கள்

வாடினார் போலக் =எப்படி வாடிப் போவார்களோ  அதி போல

கண்ணீர் வார = மரக் கண்களில் நீர் கசியும்

மெய் பசந்து = உடல் பசுமை நிறம் அடைந்து

மையல் = காதல், காமம்

நீடினார் = சொன்ன பெண்களைப் பற்றி

அலர் போல் = வதந்தி போல

பூத்து  = மலர்கள் கொத்து கொத்தாக பூத்து

நெருங்கின மரங்க ளெல்லாம் மரங்கள் எல்லாம் நெருங்கி இருந்தன



Tuesday, October 30, 2012

திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம்


திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம் 


மாணவன் எப்படி படிக்க வேண்டும் ? ஒரு பாடத்தை ஒரு ஆசிரியரிடம் மட்டும் கேட்டுத் தெரிந்தால் போதாது. அந்த பாடத்தைப் பற்றி நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒரு புத்தகம் மட்டும் படித்தால், ஒரே பாடத்தை இரண்டு மூணு புத்தகங்களில் படிக்க வேண்டும், துணை பாடல் நூல் (நோட்ஸ் ) இருந்தால் அதை பார்க்க வேண்டும். இன்டெர் நெட் இருந்தால், அதில் அந்த பாட சமந்தமாய் என்ன இருக்கிறது என்று தேட வேண்டும். இப்படி பல வழிகளில் அறிவை பெற்ற பின், கர்வம் இல்லாமல், தான் பெற்ற அறிவால் மற்றவர்களுக்கு இதமான சுகம் தர வேண்டும்...

இதற்கு ஒரு உதாரணம் தருகிறார் பரஞ்சோதியார்...திரு விளையாடார் புராணத்தில்...

தென்றல் காற்று இருக்கிறதே...அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும். அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில் உள்ள குளத்தில் குதித்து கொஞ்சம் குளிர்ச்சியை எடுத்துக் கொள்ளும். அந்த குளத்தில் உள்ள தாமரை மலரை தொட்டு தடவி அதன் மணத்தையும் தேனையும் எடுத்துக் கொள்ளும். பின் அங்கிருத்து கிளம்பிப் போய் மல்லிகை, இருவாட்சி, முல்லை போன்ற மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும்...இப்படி குளிர்ச்சியையும், நறு மணத்தையும், தேனையும் சுமந்து கொண்டு இதமாக வீசும் தென்றல் காற்று ... பல பல இடங்களில் சென்று பலவிதமான அறிவை பெரும் மாணவனை போல் இருக்கிறதாம்.....

பாடல்

Wednesday, May 23, 2012

திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி


திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி


மண்ணை படைத்தவன் மண் சுமந்தான்

அடியவர்களுக்காக ஆண்டவன் அடி வாங்கிய கதை அது

மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான், கூலி ஆளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட கதை.

அதை பரஞ்சோதியார் எப்படி கூறுகிறார் பாருங்கள்...

திருவிளையாடற் புராணம் - கடவுள் பெரியவனா ? சிறியவனா?


திருவிளையாடற் புராணம் - கடவுள் பெரியவனா ? சிறியவனா?


சிவனின் 64 விளையாடல்களை பற்றிய பாடல்களின் தொகுப்பு திரு விளையாடல் புராணம்.

பரஞ்சோதி முனிவர் எழுதியது.

16 அல்லது 17 ஆம் நூன்றாண்டில் எழுதப்பட்டது. 400 / 500 ஆண்டுகள் ஆகி விட்டது. 

இதில் இருந்து சில இனிய பாடல்களைப் பார்க்கலாம்.

கடவுள்.

அவன் அனைத்திற்குள்ளும் இருக்கிறான்.
அவனுக்குள் எல்லாம் இருக்கின்றன.

அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் என்று மணி வாசகர் சொன்ன மாதிரி.

அவன் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறான். அவனுக்குள் எல்லாம் இருக்கிறது என்றால் அவன் எப்படி இருப்பான் ?

பரஞ்சோதி முனிவர் காட்டுகிறார்....

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

அவன் மிகப் பெரியவன். இந்த அனைத்து அண்டங்களும் அவனுக்குள் அடங்கி இருக்கின்றன.

அவனுக்குள் அடங்கிய பின், அவனுடைய உருவத்தைப் பார்த்தால் இந்த அண்டங்கள் எல்லாம் அணு போல குட்டியாகத் தெரிகின்றன.

அவன் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறான்.

அப்படி என்றால் அணுவுக்குள்ளும் இருப்பான் தானே ?

அப்படி அவன் அணுவுக்குள் போன பின்னே, அந்த அணு எல்லாம் அண்டம் மாதிரி பெரிதாகத் தெரியும்.

அவன் இந்த அனைத்து அண்டங்களுக்கும் உள்ளும், புறமும் இரண்டுமாய் இருக்கிறான்.

அப்படி இருந்தாலும், அவன் தனியாக இல்லை. இந்த அண்டங்களை எல்லாம் ஈன்ற அந்த சக்தி அவன் துணையாய் இருக்கிறாள் என்பர் அறிவுடைய நல்லவர்கள்.

அறிவும் இருக்கணும், நல்லவனாகவும் இருக்கணும். அப்பத்தான் அது புரியும்.

அண்டங்கள் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

அணுவாக =அணு மாதிரி சின்னதாகத் தெரிய

அணுக்களெல்லாம் = அணுவெல்லாம்

அண்டங்களாகப் = அண்டம் போல் பெரிதாய் தெரிய

பெரிதாய்ச் = பெரிதாகவும்

சிறிதாயினானும் = சிரியாதகவும்

அண்டங்கள் = இந்த உலகங்களுக்கு

உள்ளும் புறம்பும் = உள்ளும் புறமும்

கரியாயினானும் = சான்றாக உள்ளவனும்

அண்டங்கள் = இந்த உலகங்களை

ஈன்றாள் = பெற்றவள்

துணையென்பர் = அவனுக்கு துணை என்று சொல்வர்

அறிந்த நல்லோர் = அறிவுடைய நல்லவர்கள்