Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Thursday, May 3, 2018

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?


வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. குளிர்ந்த காற்று அடிக்கிறது. மண் வாசம் எங்கிருந்தோ வருகிறது. மழை வரும் என்று நாம் யூகிக்கிறோம்.

தூரத்தில் , மலை மேல் புகை எழுகிறது. ஏதோ தீ பிடித்திருக்கிறது என்று நம்மால் அறிந்து  கொள்ள முடிகிறது. நேரில் பார்க்கவில்லை, இருந்தும் தீ இருக்கும் என்று அறிவு சொல்கிறது.

ஒருவன் கொலை செய்து விட்டான் என்று நீதி மன்றத்தில் அவனை நிறுத்தி இருக்கிறார்கள். கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சி இல்லை. ஆனால், கொலை செய்யப் பட்டவனுக்கும், இவனுக்கும் முன் விரோதம் இருந்து இருக்கிறது, இவன் கத்தி வாங்கி இருக்கிறான், கொலை செய்யப் பட்டவனின் வீட்டுக்குள் இவன் போனதை பார்த்த சாட்சி இருக்கிறது. பின் அவள் வெளியே வந்ததைப் பார்த்த சாட்சி இருக்கிறது. கொலை செய்யப் பட்டவனின் உடம்பில் உள்ள கத்தியில் இவன் கை  ரேகை இருக்கிறது. இவன் தான் கொலையாளி என்று நினைக்க இவ்வளவு ஆதாரங்கள் போதும். இருந்தும், கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.

அது  போல, கடவுளை நேரில் பார்த்த சாட்சி இல்லை. யாரும் பார்த்து விட்டு வந்து சொல்லவில்லை. படம், வீடியோ எதுவும் இல்லை. அவரும் நேரில் வந்து நம்மிடம் சொல்ல வில்லை.

இருந்தும்,

"எவ்வளவோ குறிகள் இருக்கின்றன, அடையாளங்கள் இருக்கின்றன, கோவில்கள் இருக்கின்றன,  வேதாகம நெறிகள் இருக்கின்றன, அவற்றில் சொல்லப் பட்ட நேர்மையான கருத்துக்கள் இருக்கின்றன, இவ்வளவு ஆயிரம் இருந்தும், சொன்னாலும், அறிவில்லாமல் , இவை அனைத்தும் உங்கள் மனதில் ஏறாமல் இருப்பது எவ்வாறு"

என்று திருநாவுக்கரசர் கேட்கிறார்.

பாடல்


குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.



பொருள்


குறிகளும் = சமயக் குறிகளும்

அடையாளமும் = அடையாளங்களும்

கோயிலும் = கோயிலும்

நெறிகளும் = வழி முறைகளும்

அவர் = இறைவன்

நின்றதோர் நேர்மையும் = இருப்பதற்கான நேர்மையான சாட்சியங்களும்

அறிய = அறிந்து கொள்ள

ஆயிரம் = ஆயிரக் கணக்கில்

ஆரணம் ஓதிலும் = வேதாகமங்கள் சொன்னாலும்

பொறியீ லீர் = பொறி என்றால் கருவி. இங்கே அறிவைக் குறிக்கும்.

மனம் = உங்கள் மனதில்

என் = ஏன்

கொல் = அசைச் சொல்

புகாததே = ஏன் அவை ஏறவில்லை , புகவில்லை

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இதில் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை என்று கேட்கிறார்.

இத்தனையும் பொய்யாகவா இருக்கும் ?

சிந்திக்க வேண்டிய கேள்வி.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_3.html

Monday, January 22, 2018

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2


நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.

போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.

எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.

இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.

அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர்  சொல்கிறார்.

பாடல்


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.


சீர் பிரித்த பின்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை 
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக 
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே 

பொருள்

ஒன்றி இருந்து  = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = மனதில் நினையுங்கள்

உம் தமக்கு = உங்களுக்கு

ஊனமில்லை = ஒரு குறையுமில்லை

கன்றிய = மிகுந்த கோபம் உள்ள

காலனை = எமனை

காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்

அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக

சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்

தில்லையுள் = சிதம்பரத்தில்

சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும் அவன்

என்று வந்தாய் = எப்ப வந்தாய்

என்னும் = என்று கேட்பது போல தோன்றும்

எம் பெருமான் = என்னுடைய பெருமான்

தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே

ஒன்றி இருந்து நினைமின்கள்: எது ஒன்ற வேண்டும் ? எதோடு ஒன்ற வேண்டும் ?


கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே


ஐந்து புலன்களும் ஒவ்வொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. 

கை பூ போடுகிறது. 
விழி பிரகாரத்தில் போகும் அந்த சிவப்பு சேலையை பார்க்கிறது 
மனம், இன்று அலுவலகத்தில் என்ன மீட்டிங் என்று யோசிக்கிறது 
நாக்கு ஏதோ பொய் சொல்கிறது 
உடம்பு வேறொன்றில் நாட்டம் கொள்கிறது 
செவியோ அருகில் இருப்பவர்கள் பேசுவதை கேட்கிறது 

இப்படி இருந்தால், நான் செய்யும் பூசையை எவ்வாறு ஏற்றுக் கொள்வாய் ஈசனே என்று புலம்புகிறார் பட்டினத்தார். 

ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அதோடு மனமும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றி இருந்து நினைமின்கள். 


கன்றிய காலனை காலால் கடிந்தவன் : என்ன சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடுவில் காலனை காலால் உதைத்தவர் என்று ஒரு வரியைப் போடுகிறார் திருநாவுக்கரசர் என்று தோன்றுகிறதா ?

அவர், நாவுக்கு அரசர். அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்வாரா ?

ஐந்து புலன்களும் மனமும் ஒன்றி இருந்தால் என்ன ஆகும் ? ஏன் ஒன்ற வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அது. 

மாக்கண்டேயருக்கு பதினாறு வயதில் மரணம் என்பது அவர் விதி. அவர் ஆயுள் முடிந்ததும் , அவர் உயிரை எடுக்க காலன் வந்தான். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை  கட்டி பிடித்துக் கொண்டார். அதற்காக விட முடியுமா ? காலன் அவன் கடமையை செய்ய முயன்றான். அவனை காலால் எட்டி உதைத்து அவன் கடமையை செய்ய விடமால் செய்தது எந்த விதத்தில் நியாயம் ? அந்த சிவனின் செயல் போற்றுதலுக்கு உரியதா ? 

தன் பக்தன் என்பதற்காக அவனுக்கு விதியில் இருந்து விலக்கு அளிப்பதா ? சரி, அப்படியே விதிவிலக்கு அளித்தாலும், அதற்கு முன்னும், பின்னும் அப்படி யாருக்கும்  விதி விலக்கு அளித்த மாதிரி தெரியவில்லை. மார்க்கண்டேயர் மட்டும் தான் உண்மையான பக்தரா ? 

அது அல்ல கதையின் அர்த்தம். 

மார்க்கண்டேயர் மனம் ஒன்று பட்டு இறைவனை வழிபட்டார். அவர் காலத்தை  கடந்து விட்டார். காலம் என்பது அவருக்கு இல்லை. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்றெல்லாம் ஒன்று இல்லை. நிகழ் காலம் மட்டும்தான் உண்டு.  இறந்த காலம் , எதிர் காலம் என்பதை காட்ட முடியுமா ? இறந்த காலம், இறந்து போய் விட்டது. இனிமேல் அதை காண முடியுமா. எதிர் காலம் வரவே வராது. கானல் நீர் போல அது ஒரு கற்பனை. நம்மால் அதை எட்டிப் பிடிக்கவே முடியாது. இருப்பது ஒரே ஒரு காலம்தான். அது தான் நிகழ் காலம். இது புரியாத சாதாரண மனிதர்கள் இறந்த காலம், எதிர் காலம் இவற்றிற்கு இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள். 

யோகிகளுக்கு இறந்த காலமும் இல்லை. எதிர் காலமும் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் உண்டு. அப்படி என்றால் அவர் காலத்தை கடந்து சென்று விட்டார். அவரைப் பொறுத்தவரை காலம் என்பது இல்லை. அவர் என்றும் பதினாறு என்பதின் தத்துவம், யோகிகள் கால தத்துவத்தை கடந்து சென்று விடுகிறார்கள். 


சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவ யோகிகளே  காலத்தை வென்று இருப்பார். மரிப்பார் வெறும் கர்மிகளே என்பார் அருணகிரிநாதர். 

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.


காலத்தை வென்று இருக்கலாம். 

பிறப்பும் இறப்பும் அற்றுப், பேச்சும் அற்று, மூச்சும் அற்று,
 மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம்?

என்பார் பத்திரகிரியார். 

பிறப்பும் இறப்பும் அற்ற இடம், காலம் நின்று போன இடம். 

தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் : தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் நாடுகிறான். 

சிற்றம்பலம் - சின்ன அம்பலம். அம்பலம்என்றால் பொது இடம். மேடை மாதிரி. 

சிற்றம்பலம் என்று ஒன்று இருந்தால், பேரம்பலம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? எது பேரம்பலம் ? இந்த உலகம் , பிரபஞ்சம் தான் பேரம்பலம். இந்த பேரம்பலம் ஏன் இருக்கிறது ? எதற்காக இத்தனை நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன்கள்...இவை எல்லாம் ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கின்றன. இப்படி சுத்தி சுத்தி அடையப்போவது என்ன ?

ஒன்றும் இல்லை. உலகம் இருப்பதற்கு ஒரு காரணம் இல்லை. நம் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் இல்லை. 

இது ஒரு பெரிய விளையாட்டு. லீலா. ரொம்ப சீரியஸ் ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார்கள். இறைவனே நடனம் ஆடிக் கொண்டிருக்கிறான். நடனம் என்பது  ரொம்ப சீரியஸ் ஆன வேலையா ?

நடனம் ஆடி எதை சாதிக்க முடியும் ?

ஒன்றும் இல்லை. 

மகிழ்ச்சியாக இருங்கள். சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லம். பாடுங்கள். ஆடுங்கள். 

இந்த உலகம் ஒரு மகிழ்ச்சி பிரவாகம். மனமும் புலன்களும் பிரிந்து கிடந்தால் இந்த  மகிழ்ச்சி கிட்டாது. அவை ஒன்றும் போது , காலம் கடந்த இன்பம்  பிரவாகமா ஓடும். 

இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, இரவு , பகல் என்ற எல்லாம் இருமைகளும் மறைந்து  நிர்மலமான நிலை வரும். 

மேலோட்டமான பாடலுக்கு உள்ளே , எவ்வளவு ஆழ்ந்த பொருள் செறிவு. 

நேரம் உண்டாக்கி, தேவாரம் முழுவதும் படியுங்கள். கொட்டிக் கிடக்கிறது. 

Saturday, January 20, 2018

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1 


நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.

போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.

எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.

இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.

அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர்  சொல்கிறார்.

பாடல்


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.


சீர் பிரித்த பின்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை 
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக 
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே 

பொருள்

ஒன்றி இருந்து  = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = மனதில் நினையுங்கள்

உம் தமக்கு = உங்களுக்கு

ஊனமில்லை = ஒரு குறையுமில்லை

கன்றிய = மிகுந்த கோபம் உள்ள

காலனை = எமனை

காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்

அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக

சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்

தில்லையுள் = சிதம்பரத்தில்

சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும் அவன்

என்று வந்தாய் = எப்ப வந்தாய்

என்னும் = என்று கேட்பது போல தோன்றும்

எம் பெருமான் = என்னுடைய பெருமான்

தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே

இறைவன் நடனமாடுவது , "எப்பப்பா வந்தாய் " என்று கேட்பது போல இருக்கிறதாம்.

மேலோட்டமாய் பார்த்தால் , இந்த பாட்டில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றும். மார்கண்டேயருக்காக , காலனை காலால் உதைத்தார்.  சரி, அதுதான் நமக்குத் தெரியுமே.

தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிறார்....அதுவும் தெரியும்.

போய் பார்த்தால், எப்போது வந்தாய் என்று கேட்பது போல இருக்கும் என்கிறார். சரி , இருந்து விட்டு போகட்டும்.

இதையெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ? இதை போய் வேலை மெனக்கெட்டு  ஏன் எழுதி இருக்கிறார். அதை இத்தனை காலம் பொக்கிஷமாக  பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன. இதை விட சில சினிமா பாடல்கள் அர்த்தம் நிறைந்ததாகவும், இனிமையாகவும் இருக்கும் போல் இருக்கே.

வைரம் கூட பார்ப்பதற்கு கூழாங்கல் மாதிரித்தான் இருக்கும். சில சமயம் கூழாங்கற்கள் வைரத்தை விட  அழகாகக் கூடத் தோன்றும்.

பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும். கூழாங்கல் கரைந்து மண்ணாகிப் போய் விடும்.

சரி, பாடலுக்கு வருவோம்.

தொழுமின்கள் : பிற மதங்களில் தொழுகை உண்டு. மற்ற மதங்கள் தான் தொழுகையை கண்டு பிடித்தன என்று நினைக்கக் கூடாது. தொழுகை என்பது சைவ மற்றும் வைணவ மதத்தின் அடிப்படை கோட்பாடு.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

தொழுது எழு என் மனமே என்பது பிரபந்தம்.

தொழுவார்க்கு ஒரு தீங்கிலையே என்பது அபிராமி அந்தாதி.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

என்பார் அபிராமி பட்டர்.

தொழுவார்க்கு இரங்கி அருள் செய் , என்பார் அப்பர்.


புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே 
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே 
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச் 
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!


 

கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம் .

தொழுதல் என்பது செயப்படு பொருள் குன்றா  ஏற்கும் வினைப்.

இது என்ன புதுசா இருக்கே. அப்படி என்றால் என்ன ?

வினைச் சொற்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். செயப்படு பொருளை ஏற்கும் வினைச் சொல், செயப்படு பொருளை ஏற்காத வினைச்சொல் என்று.

யாரை அல்லது எதை என்ற கேள்விக்கு விடை தரும் என்றால் அது செயப்படு பொருள் குன்றா  வினைச் சொல்.

உதாரணம்.

தந்தான் - எதைத் தந்தான் ? அறிவை, செல்வத்தை, பொருளை
உண்டான் - எதை உண்டான் ? உணவை உண்டான்

எனவே இவை செயப்படு பொருள் குன்றா வினை.

செயப்படு பொருள் குன்றிய வினை என்றால் என்ன ?

எதை அல்லது யாரை என்று கேள்வி கேட்க முடியாது.

உதாரணம்.

படுத்தான் = எதைப் படுத்தான் ? யாரைப் படுத்தான் என்ற கேள்வி அபத்தமாக இருக்கும்.

தொழுதான் என்ற வினைச்சொல் எதை அல்லது யாரை என்ற கேள்விக்கு விடை தரும்.  செயப்படு பொருள் குன்றா வினை அது.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/1.html



Sunday, January 14, 2018

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா



முன் பின் தெரியாத ஒரு ஊருக்குப் போய் , அங்குள்ள ஒரு ஆட்டோவில் ஏறி வழி கேட்டால், போகிற வழியில் ஆளுக்கு ஒரு வழி சொல்வார்கள். முன்னும் பின்னும், வடக்கும் தெற்கும் அலைவோம். ஆட்டோ கூலி வேறு ஏறிக் கொண்டே போகும். நமக்கோ வழி தெரியாது. கேட்பவர்களும் சரியாகாத் தெரியாமல் நம்மை அலைக் கழிப்பார்கள்.

வழி தெரிந்த ஆள் என்று ஒருவரை எப்படி அடையாளம் காண்பது ? அதுவும் சிக்கல்தான்.

இறைவனை அடைய வேண்டும். வீடு பேறு பெற வேண்டும். உண்மை எது என்ன என்று கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறோம். யாரிடம் கேட்பது ? எதையெதையோ படிக்கிறோம். யார் யார் சொல்வதெல்லாமோ கேட்கிறோம். எங்கு போகிறோம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம் வாழ்க்கையை நடத்த நமக்கு உதவி செய்வது நமது புலன்கள். அவை நமக்கு உதவி செய்கின்றனவா ? கண் ஒரு பக்கம் இழுக்கிறது. காது ஒரு பக்கம் இழுக்கிறது. நாக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. அங்கும் இங்கும் அழைக்கிறோம்.

வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.

புலன்களை விட்டு விடலாமா என்றால், அதுவும்  முடியாது. அவற்றை நம்பலாமா என்றால்  அதுவும் முடியாது.
'
பின் என்னதான் செய்வது ?

இந்தத் திகைப்பு நமக்கு மட்டும் அல்ல, சுந்தரருக்கும் இருந்திருக்கிறது.

" இறைவா,இந்த புலன்களை என்னை பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கின்றன. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன். நான் உய்யும் வழியை நீ தான் காட்ட வேண்டும் "என்று அலறுகிறார்.

பாடல்


ஐவகை அரையர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வகைஅவர் வேண்டுவ தானால்
அவரவர்வழி யொழுகிநான் வந்து

செய்வகையறியேன் சிவலோகா
தீவ ணா சிவ னே எரியாடீ

எவ்வகைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.

பொருள்

ஐவகை = ஐந்து வகையான

அரையர்அவர் ஆகி = அரசு செய்யும் அதிகாரிகளாக ஆகி

ஆட்சி கொண்டு = என்னை ஆண்டு கொண்டிருக்கும் அவர்கள்

ஒருகால் = ஒரு காலத்திலும்

அ வர் நீங்கார் = அவர்கள் என்னை விட்டுப் போக மாட்டார்கள்

அவ்வகை =   அந்த வகையில்

அவர்வே = அவர்கள் (புலன்கள்)

வேண்டுவ தானால் = வேண்டுவதனால்

அவரவர்வழி யொழுகிநான் வந்து = அந்தந்த புலன்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நான் சென்று

செய்வகையறியேன் = செய்வது என்ன என்று அறிய மாட்டேன்

சிவலோகா = சிவலோகத்தில் உள்ளவனே

தீவணா = தீ போன்ற வண்ணம் கொண்டவனே

சிவனே = சிவனே

எரியாடீ = கையில் அனலைக் கொண்டு ஆடுபவனே

எவ்வகை = எந்த வகையில்

எனக்கு = எனக்கு

உய்வகை= உய்யும் வகை

அருளாய் = அருள் செய்வாய்

இடைமருதுறை = திருவிடை மருதூர் என்ற தலத்தில் உள்ள

ஏந்தை = என் தந்தையே

பிரானே = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

சுந்தரர் பாடு அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_48.html

Friday, May 19, 2017

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்


வாழ் நாள் எல்லாம் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம். படிப்பு, வேலை, திருமணம், பிள்ளை வளர்ப்பு, ஆட்டம், பாட்டம், என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எதற்கு ?

எதை சாதிக்க ? எதை அடைய ? நமக்கு முன்னால் இப்படி ஆடி ஓடி அலைந்தவர்கள் தாங்கள் தேடியதை அடைந்து விட்டார்களா ?

நெல்லுக்கு நீர் இறைத்தால் , ஒரு காலத்தில் நெல் விளையும். ஒன்றும் முளைக்காத கட்டாந்தரைக்கு நீர் வார்த்தால் , எவ்வளவு தான் நீர் வார்த்தாலும் ஒன்றும் வராது.

அது மட்டும் அல்ல,  வாழ்வில்  நல்லது  எதன் மீதும் பற்று கிடையாது.இருந்தாலும் கொஞ்ச நாள் இருக்கும். அப்புறம் மனம் மற்றவற்றை தேடி ஓடும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டார்கள். படித்து விட்டு "ஹா...இதெல்லாம் ரொம்ப கஷ்டம்...நடை முறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி வைத்து விட்டு , நமக்கு பிடித்ததை செய்ய போய் விடுகிறோம். பின்னால் வருந்தி என்ன பயன்? அறிவுள்ளவர்கள் , படித்தும் கேட்டும் அறிந்து கொள்வார்கள். அந்த அறிவு இல்லாதவர்கள், பட்டுத் தெளிந்தால் தான் உண்டு. அவர்களாகவே சென்று முட்டி மோதி கடினமான வழியில் தான்  அறிவை அடைவார்கள்.

அதுக்கு முன்னால் என்ன சொன்னாலும், "அதெல்லாம் சரி, ஆனால் ரொம்ப கஷ்டம் " என்று ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இப்படி வாழ்ந்து, கடைசி காலத்தில் என்ன செய்வது, எப்படி செய்வது என்று ஒரு வழியும் அறியாமல் தவிப்பார்கள். நானும் அப்படி ஆகி விட்டேனே என்று சொல்கிறார் நாவுக்கரசு சுவாமிகள்.


பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


சீர் பிரித்த பின்

பற்று இல்லா  வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்று அல்லால்  கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்
எற்று உள்ளேன் என் செய்கேன் நான் இடும்பையால்  ஞானம் ஏதும்
கற்றிலேன் களை கண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


பொருள்

பற்று இல்லா = பற்று இல்லாத

வாழ்க்கை வாழ்ந்து = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பயனில்லாத இடத்துக்கு

நீர் இறைத்தேன் = நீர் வார்த்தேன்

உற்று அல்லால் = பட்டால் அல்லால்

கயவர் தேறார் = கயவர்கள் அறிய மாட்டார்கள்

என்னும் = என்ற

கட்டுரையோடு = சொல்லுக்கு

ஒத்தேன் = ஏற்றவாறு வாழ்ந்தேன்

எற்று உள்ளேன் = எதற்க்காக இருக்கிறேன்

என் செய்கேன் = என்ன செய்வேன்

நான் = நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானம் ஏதும் = அறிவு எதுவும் இல்லாமல்

கற்றிலேன் = எதையும் கற்காமல் இருக்கிறேன்

களை கண்காணேன் = இந்த துன்பங்களை களைந்து , இதிலிலிருந்து மீள வழி காண மாட்டேன் 

கடவூர்வீ ரட்டனீரே. = திருக் கடவூர் என்ற திருத்தலத்தில் இருப்பவரே


எதற்காக இருக்கிறேன் ? என்ன செய்யப் போகிறேன் என்று தவிக்கிறார்.

நாமும் சிந்திப்போம். என்ன செய்கிறோம். எதற்காக செய்கிறோம்.

நெல்லுக்கு நீர் இறைக்கிறோமா ? பாழுக்கு நீர் இறைக்கிறோமா என்று அறிந்து நீர்  இறைப்போம்.

வாழ்வின் அர்த்தத்தை கண்டு பிடிப்போம்.


Thursday, March 23, 2017

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும்

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும் 


ஒன்று எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறோம். அல்லது இறந்த காலத்தை எண்ணி அசை போடுகிறோம். நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை. ஒவ்வொரு வினாடியும் கசிந்து கொண்டே போகிறது. வாழ்ந்ததையும் , வாழப் போவதையும் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர வாழ்வதே இல்லை.

உங்களைச் சுற்றி பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது. டிவி, கைபேசி இவற்றை மூடி வையுங்கள். வாழ்வு என்பது என்ன என்று தெரியும்.

கணவன், மனைவி, பிள்ளைகள், மழை, மரம், மேகம், அனைத்தையும் பாருங்கள்.

அது ஒரு பெரிய காடு. அடர்ந்த காடு. மரம் செடி கொடிகள் ஏகமாக வளர்ந்து கிடக்கிறது. பல வன விலங்குகள் அங்கே இருக்கும்.

அந்த காட்டில் ஒரு மலை. அந்த மலையில் ஒரு கொடிய சிங்கம் இருக்கிறது. வளைந்த கூர்மையான நகங்கள். சிவந்த கண்கள். அந்த சிங்கம் குகையில் படுத்து இருக்கிறது.

மழை மேகமாக இருக்கிறது. மழை வரும் போல இருக்கிறது. வானம் இருண்டு தூரத்தில் எங்கோ இடி இடிக்கிறது. அந்த இடி சத்தத்தை கேட்ட சிங்கம் எதோ யானை தான் பிளிறிக் கொண்டு வருகிறதோ என்று எண்ணிக் கொண்டு பிடரி மயிர் சிலிர்க்க எழுகிறது.

அந்த காட்டின் இன்னொரு பக்கத்தில் பெரிய ஆல மரம். அந்த ஆல மரத்தின் கீழ் ஒரு முனிவர் தவம் புரிகிறார். அவரின் இனிய அழகிய மனைவி உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

அந்த கானகம் இருக்கும் இடம் திரு முதுகுன்றம் என்ற இடம். அங்கே போவோமா என்கிறார் திரு ஞான சம்பந்தர்.

பாடல்


தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

சீர் பிரித்தபின்

தழையார் வட வியவீதனில் தவமே புரி சைவன்
இழையார் இடை மடவாளொடும் இனிதாக உறை இடமாம் 
மழை வானிடை முழவ எழில்  வளை வாளுகி எரி கண் 
முழை வாளரி குமிறும் உயர்  முது குன்று அடைவோமே 

பொருள்

தழையார் = தழைகள் (இலைகள்) நிறைந்த

வட  வியவீதனில் = ஆல மர நிழலில்

தவமே = தவம்

புரி = புரிகின்ற

சைவன் = சைவன் (சிவன்)

இழையார் =  நூல் இழை போன்ற

இடை = இடையைக் கொண்ட

மடவாளொடும் = பெண்ணான உமா தேவியோடு

இனிதாக = இன்பமாக

உறை இடமாம் = இருக்கின்ற இடமாம்

மழை வானிடை முழவ = மழை வானத்தில் இடி ஒலிஎழுப்ப

எழில் = அழகான

வளை  = வளைந்த

வாளுகி = நகங்களுடன்

எரி கண் = தீ போன்ற சிவந்த கண்களுடன்

முழை = குகையில்

வாளரி= சிங்கம்

குமிறும் = கர்ச்சிக்கும்

உயர்  = உயர்ந்த

முது குன்று  = முதுகுன்று என்ற இடத்தை

அடைவோமே = செல்வோமே


முதுகுன்றம் என்ற கோவிலுக்குப் போவோம் என்று சொல்லவில்லை. அங்குள்ள இயற்கை. அந்த காடு, மலை, மழை மேகம், சிங்கம் என்று இயற்கையை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

அது சரி, இந்த முதுகுன்றம் என்ற இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? நம்ம விருத்தாச்சலம் தான் அந்த இடம். (விருதா என்றால் வயதான; அசலம் என்றால் மலை. வயதான மலை. முது குன்றம். 
வேதாச்சலம். அருணாச்சலம் இதை பற்றியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்) 


Friday, March 3, 2017

தேவாரம் - காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

தேவாரம் - காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே


பாடல்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

பொருள்

மிக மிக எளிய பாடல். கடின பதங்களே கிடையாது. ஒவ்வொரு செயலையும் செய்வித்தால் யார் செய்யாமல் இருப்பார்கள் என்று கேட்கிறார்.

ஆட்டுவித்தால், அடக்கினால், ஓட்டினால், உருக வைத்தால், பாட வைத்தால், பணிய வைத்தால், காட்டினால்  அதை செய்யாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறார்.

சரி, இதில் என்ன இருக்கிறது ?

நாவுக்கரசர் சொல்கிறார் என்றால் அதில் ஏதாவது இல்லாமல் இருக்குமா ? சிந்திப்போம்.

மொத்த பாடலும் ஒரு உயிரின் ஆன்மீகப் பயணம். எங்கிருந்து ஆரம்பிக்கிறது. எங்கு முடிகிறது என்பதைச் சொல்லும் பாடல்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

ஆசையினால் உயிர்கள் அங்கும் இங்கும்  அலைகின்றன. அது வேண்டும், இது வேண்டும்  என்று நாளும் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆசைக்கு ஒரு அளவு இருக்கிறதா. ஒன்று கிடைத்தால் அடுத்ததை தேடுகிறது.  இறைவன் அனைத்தையும் படைத்தது வைத்திருக்கிறான். உயிர்கள் அது வேண்டும் , இது வேண்டும்  என்று அனைத்துக்கும் ஆசைப் பட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றன.  ஆட்டுவிப்பவன் அவன். உயிர்கள் ஆடுகின்றன. 

கூத்தாடுவானாகி என்கிறார் மணிவாசகர். 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.

கூத்தாடுகிறான். கூத்தாட்டுகிறான்.



"அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே"

ஆசைகளின் பின்னால் போகும் உயிர்கள் அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணியே அவற்றின் பின்னால் போகின்றன. எல்லாமா கிடைத்து விடுகிறது. உடலில் வலு இருக்கும் வரை உயிர்கள் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றன. நாள் ஆக ஆக , தனது சக்தியின் எல்லையை உணர ஆரம்பிக்கின்றன.  முடியாது என்று சிலவற்றை உணர ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் அடங்குகின்றன.



ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

ஓட்டம் இரண்டு வகையில் இருக்கும். ஒன்று வெளி நோக்கி ஓடுவது. இன்னொன்று, உள் நோக்கி ஓடுவது.  ஆசையினால், இன்பம் அனுபவிக்க வேண்டி உயிர்கள் வெளி நோக்கி ஓடுகின்றன. வீடு, கார் , நகை, சொத்து, சொந்தம் , பந்தம் என்று என்று ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் இந்த ஓட்டம் நிற்கும். நின்ற பின், எதற்கு இந்த ஓட்டம், எதை அடைய வேண்டி இந்த ஓட்டம், யாருக்காக இந்த ஓட்டம் என்று உயிர்கள் நினைக்கப் தலைப் படும். பின், நான் யார், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வாழ்வின் நோக்கம் என்ன என்று உயிர்கள் தன்னை நோக்கி உள்புறமாக சிந்திக்கத் தொடங்கும். வெளியில் ரொம்ப தூரம் ஓடி விட்டதால், தன் வசம் வர அவ்வளவு தூரம் உள்நோக்கியும் ஓடி வர வேண்டி இருக்கிறது.

நீ எந்த பக்கம் ஒட்டுகிறாயோ, அந்த பக்கம் ஓடுகிறேன். நான் புலன் இன்பங்கள் பின்னால் ஓடுவதை நிறுத்தி , என்னை அறிய என்னை நோக்கி ஓடி வர அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.


"உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே"

முதலில் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று உயிர்கள் அலையும். எனக்கு கிடைக்க வேண்டும், அது எனக்கு உரியது  என்று உயிர்கள் சொந்தம் கொண்டாடும். எனக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும், எனக்கு அழகான பெண் வேண்டும், அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும் என்று உயிர்கள் தனக்குக் கிடைத்ததெல்லாம் ஏதோ அவை தமக்கு உரியன போலவும்,  மேலும் கிடைக்க வேண்டியது இருக்கிறது என்று அலையும்.

ஒரு காலகட்டத்தில், நமக்கு இவ்வளவு கிடைத்ததே, நாம் இதற்கு தகுதி உள்ளவர்கள் தானா, நாம் என்ன செய்து விட்டோம் நமக்கு இப்படி ஒரு அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், இனிய வாழ்க்கை என்று தனக்கு கிடைத்ததை எண்ணி உயிர்கள் உருகும். கிடைத்த நல்லன எல்லாம் உணரச் செய்து , உயிர்களை உருக வைப்பான்.

"பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே"


உயிர்கள் தங்களுக்கு கிடைத்த இன்பங்களை எண்ணி உருகும் போது , மனதுக்குள் தோன்றும் நன்றி உணர்வில் பாடத் தோன்றும். தனக்காக பாடல் வரவில்லை என்றாலும், மற்றவர்கள் பாடியதை பாடி உள்ளம் உருகும். தேவாரம், திருவாசகம், பிரபந்தம், அபிராமி அந்தாதி என்று மற்றவர்களின் பாடலைப் பாடும்.

"பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே"


தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. தன் முயற்சி என்பது பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் நடக்கிற படி நடக்கிறது என்று மனிதன் எண்ணத் தலைப்படுகிறான்.  தான் சாதித்தது ஒன்றும் இல்லை என்ற பணிவு வருகிறது.


"காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே"

எல்லாம் மிகப் பெரிய அளவில் தன்னைச் சுற்றி நடப்பதை உயிர்கள் அறிகின்ற. பிறப்பும், வளர்வதும், ஆடுவதும், பாடுவதும், தேடுவதும், ஓய்வதும் நில்லாமல் நடக்கின்றன. இது எப்படி நடக்கிறது. யார் இதை நடத்திச் செல்கிறார்கள் என்று அறியாமல் உயிர்கள் குழம்பும்.  எது உண்மை என்று  யாராவது காட்டினால் அன்றி காண முடியாது.


அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே என்பார் அபிராமி பட்டர். என் சிற்றறிவுக்கு இது எல்லாம் புரியவே புரியாது . இருந்தும் புரிந்து விட்டது. எப்படி , எல்லாம் உன் அருள் என்று உருகுகிறார் பட்டர்.

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

என்பது அபிராமி அந்தாதி.

"காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே."

கண் நுதல் = நெற்றியில் கண் 

நெற்றியில் கண் உள்ள நீ காட்டாவிட்டால் எப்படி காண முடியும். நீ காட்டினால் இவை எல்லாம் என்னால் காண முடியும் என்கிறார். 

உங்களுக்கும் காட்டுவான். காத்திருங்கள். 

எவ்வளவு எளிமையான பாடல். எவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள். சமயமிருப்பின் மூல நூலை தேடித் படியுங்கள். 





Saturday, February 18, 2017

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ? - பாகம் 2

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ? - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை எங்கே வாசிக்கலாம் 

http://interestingtamilpoems.blogspot.in/2017/02/blog-post_17.html

)

இறைவன் எங்கே இருக்கிறான் என்று நாளும் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். கைலாயத்தில் இருக்கிறான். வைகுண்டத்தில் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு அங்கே போக வழி தேடிக் கொண்டிருக்கிறான்.

நாவுக்கரசர் சொல்லுகிறார்

"மனதில் இருக்கிறான். வாக்கில். அடியவர்கள் மத்தியில் இருக்கிறான். தேவர்களின் தலைக்கு மேலே இருக்கிறான். அண்டங்களுக்கு அப்பால் இருக்கிறான். மலையில் இருக்கிறான். கொன்றைப் பூவில். நெருப்பில் இருக்கிறான். காற்றிலும் இருக்கிறான். மேகத்தில் இருக்கிறான். கைலாயத்தின் உச்சியில் உள்ளான். என் கண்ணுக்குள்ளே இருக்கிறான் " என்கிறார்.

பாடல்

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே


சீர் பிரித்த பின்

மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான்
    வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
    ஏழு அண்டத்துக்கு அப்பாலன் இப்பாற் செம்பொன்
புனத்து அகத்தான்  நறுங்கொன்றைப் போதினுள் உள்ளான்
    பொருப்பின் இடையான்  நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியில் உள்ளான் 
    காளத்தியான் அவன் என் கண்ணுளானே

பொருள்

மனத்து அகத்தான் = மனதினுள் இருக்கிறான்

தலை மேலான் = தலைக்கு மேலே இருக்கிறான்

வாக்கினுள் உள்ளான் = சொல்லில் இருக்கிறான்

வாயாரத் = வாயால்

தன் அடியே = தன்னுடைய திருவடிகளையே

பாடும் = பாடும்

தொண்டர் இனத்து = தொண்டர் கூட்டத்தின்

அகத்தான் = நடுவில் இருப்பான்

இமையவர் = இமைக்காமல் இருக்கும் தேவர்கள்

தம் சிரத்தின் மேலான் = அவர்களுடைய தலைக்கு மேலே இருக்கிறான்

ஏழு அண்டத்துக்கு = ஏழு அண்டங்களுக்கு

அப்பாலன் = வெளியே இருக்கிறான்


இப்பாற் = இந்தப் பக்கம்

செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற

புனத்து அகத்தான் = புனைகளுக்கு மத்தியில் இருக்கிறான்

நறுங்கொன்றைப் = நல்ல கொன்றைப்

போதினுள் = பூவில்

உள்ளான் = இருக்கிறான்

பொருப்பின் இடையான் = மலையின் மேல் இருக்கிறான்

நெருப்பிடையான் = நெருப்பில் இருக்கிறான்

காற்றி னுள்ளான் = காற்றில் இருக்கிறான்

கனத்தகத்தான் = மேகத்தில் இருக்கிறான்

கயிலாயத்து உச்சியில் உள்ளான் = கைலாயத்தின் உச்சியில் இருக்கிறான்

காளத்தியான் = திருக்காளத்தி என்ற ஊரில் இருக்கிறான்

அவன் என் கண்ணுளானே = அவன் என் கண்ணில் இருக்கிறான்.


தலைக்கு மேலே இருக்கிறான் என்று இரண்டு முறை கூறுகிறார் நாவுக்கரசர்.


தலை மேலான்
இமையவர் தம் சிரத்தின் மேலான்

ஏன் இரண்டு தடவை கூறுகிறார் ? தலைக்கு மேல வேலை இருக்கிறது என்று சொல்லக் கேட்டு இருக்கிறறோம். அது என்ன தலைக்கு மேல வேலை ?

அதிகமான வேலை என்று அர்த்தம் அல்ல. உண்மையாகவே தலைக்கு மேலே  ஒரு வேலை இருக்கிறது. 

நமது உடலில் ஏழு  சக்கரங்கள் இருக்கிறது என்று இந்து சமயம் கூறுகிறது 

மூலாதாரம் 
சுவாதிஷ்டானம் 
மணிபூரகம் 
அனாஹதம் 
விஷுதி 
ஆஞ்சை 
சகஸ்ராரம் 

என்று அவற்றின் பெயரை குறிப்பிடுகிறது. 


இதில் மூலாதாரம் மிக மிக கீழே உள்ள சக்கரம். 

சகஸ்ராரம் மேலே உள்ள சக்கரம். அது எங்கே இருக்கிறது தெரியுமா ?

தலைக்கு மேலே 12 அங்குல தூரத்த்தில் இருக்கிறது. ஆயிரம் இதழ் கொண்ட  மலர் போல விரிந்து நிற்கும்.

ஆகாயத் தாமரை என்றும் கூறுவார்கள். 


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

என்பார் மணிவாசகர் (திருவாசகம் - சிவ புராணம் )

இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்க வேண்டும். 

அப்படி வணங்குபவரை ஏற்றம் பெறச் செய்வான் அவன் என்கிறார் மணிவாசகர்.

எனவே, தலைக்கு மேல் இருக்கும் அந்த இடத்தில் இருப்பவன் இறைவன் என்கிறார் அப்பரடிகள். 

மூலாதாரத்தில் இருக்கும் அந்த கனலை மூட்டி மேலே கொண்டு வர வேண்டும். 

சரி, மூலாதாரம் என்பது எங்கே இருக்கிறது ?

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் , மனிதனை உச்சந்தலையில் இருந்து சரி பாகமாக அறுத்துக் கொண்டே வந்தால் , கடைசியாக அந்த கத்தி வெளிப்படும் இடம் மூலதாதாரம். 

பிறப்பு உறுப்புக்கும், ஆசன உறுப்புக்கும் இடைப்பட்ட இடம். 

நமது சக்தி அங்கே தங்கி இருக்கிறது. உடலின் கடைக்கு கோடி இடம் அது. 

காம சக்தியாக அது வெளிப்படுகிறது. அந்த சக்தியை திரட்டி மேலே கொண்டு வர வேண்டும். 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

என்பது அவ்வை வாக்கு.  மூலாதாரத்தில் இருக்கும் கனலை காற்றால் (கால் என்றால் காற்று) எழுப்பி என்றால் ப்ரணாயாமத்தால் எழுப்பி.

"வாக்கினுள்ளான் "  வாக்கில் அதாவது சொல்லில் இருக்கிறான் என்பது மேலோட்டமான பொருள். 

வாக்கு என்பது நம் காதுக்கு கேட்க்கும் ஒலி மட்டும் அல்ல. 

இன்றைய அறிவியல் கூறுவது என்னவென்றால் ஒளியும், ஒலியும் ஒன்றுதான். மின் காந்த அதிர்வலைகள் (electro mangetic waves ) என்கிறது. அதாவது, ஒலியை செறிவூட்டிக் கொண்டே போனால் அது ஒளியாகி விடும். 

மலை மேல் மயிலாடக் கண்டேன் , மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய் என்று குதம்பை சித்தர்  கூறுவது இதைத்தான். 

மயில் என்பது அழகிய வடிவம். 

குயில் என்பது இனிய குரல்.

வடிவம் என்பது ஒளி சார்ந்தது. குரல் என்பது ஒலி சார்ந்தது. ஒளி என்பது ஒலியாக மாறியது என்கிறார். 

வாக்கு என்பது நமது வாயை விட்டு வெளியே வரும்போது சப்தமாக வருகிறது. 

ஒரு சொல்லை மனதால் நினைக்க முடியும்.

அ - ம் - மா என்று மனதுக்குள் சொல்ல முடியும். சப்தம் உள்ளே இருக்கும். நமக்கு கேட்கும். வெளியே உள்ளவர்களுக்கு கேட்காது. 

அதே அ - ம் - மா என்பதை மனதில் நினைக்க முடியும் - சப்தமில்லாமல்.  வரி வடிவில் நினைக்க முடியும். ஒரு நிமிடம் கண் மூடி நினைத்துப் பாருங்கள். சப்த்தம் இல்லை. ஆனால் அர்த்தம் இருக்கிறது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம். வரி வடிவம் கூட இல்லாமல், வெறும் ஒளியாக பார்க்க முடியும். 

அதற்கும் மேலே ஒரு படி இருக்கிறது என்கிறார்கள் 

வாக்கின் பல்வேறு வடிவங்கள் , அல்லது நிலைகள் என்பன 

வாக்கு முதலில் சூக்கும நிலையில் இருக்கும்.  பின், அது 
பரை என்ற நிலையை அடைகிறது - இது ஒரு நுண்ணோசை.. பின் அது, 
பைசந்தி என்ற நிலையை அடைகிறது - இது ஒரு நினைவோசை. பின் அது 
மத்திமை நிலையை அடைகிறது - இது கருத்து ஓசை  எனப்படும். பின் அது 
வைகரி என்ற மேல் நிலையை அடைகிறது. இதுவே நாம் கேட்கும் செவி ஓசை.

நாம் மற்றவர்களோடு பேசும் போது வாக்கு என்ற நிலையில் பேசுகிறோம். கேட்கிறோம். 

ஞானிகள் பேசாமலேயே கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். தட்சிணா மூர்த்தி ம் மௌன குருவாக இருந்து சீடர்களுக்கு போதனை செய்தார். 

இந்த மௌன பாஷை நமக்கும்  கொஞ்சம் பரிச்சியம் இருக்கலாம். காதலித்தவர்களுக்குத் தெரியும். காதல் வயப் பட்ட ஆணும் பெண்ணும் அருகருகில் அமர்ந்து இருப்பார்கள். வாய் திறந்து பேச்சிருக்காது. இருந்தாலும் கருத்து பரிமாற்றம் இருக்கும். 

சந்தேகம் இருப்பவர்கள் , அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெளிந்து கொள்க. 

உள்ளே இருக்கும் சக்தி வாக்காக வெளிப்படுகிறது.  வாக்கை கட்டுப் படுத்தினால், அது மனதுக்குப் போகும். மனம் கிடந்து அலையும். சப்த்தம் இருக்காதே தவிர , சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். உற்று கவனித்தால் தெரியும்,  சிந்தனை எல்லாமே சொற்றொடர்களாகவே இருக்கும்.  

அதையும் நிறுத்தினால், அந்த சக்தி இன்னும் உள்ளே போகும். கடைசியில் அந்த வாக்கு பற்ற ஒன்றும் இல்லாமல் சிவனைப் பற்றும். 

"வாக்கில் உள்ளான்"

அவர் காணும் இடமெல்லாம் இருக்கிறான். மலை மேலே, பூவில், காற்றில் என்று காணும் இடமெல்லாம் இருக்கிறான். 

அப்படி எல்லா இடத்திலும் இருந்தால், நமக்கு ஏன் தெரியவில்லை ?

"என் கண்ணுள்ளானே " என்கிறார். என் கண்ணில் இருக்கிறான் எனவே நான் காணும் இடமெல்லாம் அவன் தெரிகிறான் என்கிறார். 

உங்கள் மனதில், வாக்கில், கண்ணில் அவன் இருந்தால் , உங்களுக்கும் அவன் காணுமிடமெல்லாம் தெரிவான். 

நேரம் கிடைக்கும் போது அமைதியாக இந்த பாடலை சிந்தனை செய்து பாருங்கள். 

அவ்வளவு அர்த்தம் செறிந்த பாடல்.  இறைவனை காண்கிறோமோ இல்லையோ, மனதின் அழுக்கை மாற்றி நம்மை ஒரு படி மேலே உயர்த்தும் பாடல்கள் இவை. 

Friday, February 17, 2017

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ?

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ?


இறைவன் எங்கே இருக்கிறான் என்று நாளும் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். கைலாயத்தில் இருக்கிறான். வைகுண்டத்தில் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு அங்கே போக வழி தேடிக் கொண்டிருக்கிறான்.

நாவுக்கரசர் சொல்லுகிறார்

"மனதில் இருக்கிறான். வாக்கில். அடியவர்கள் மத்தியில் இருக்கிறான். தேவர்களின் தலைக்கு மேலே இருக்கிறான். அண்டங்களுக்கு அப்பால் இருக்கிறான். மலையில் இருக்கிறான். கொன்றைப் பூவில். நெருப்பில் இருக்கிறான். காற்றிலும் இருக்கிறான். மேகத்தில் இருக்கிறான். கைலாயத்தின் உச்சியில் உள்ளான். என் கண்ணுக்குள்ளே இருக்கிறான் " என்கிறார்.

பாடல்

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே


சீர் பிரித்த பின்

மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான்
    வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
    ஏழு அண்டத்துக்கு அப்பாலன் இப்பாற் செம்பொன்
புனத்து அகத்தான்  நறுங்கொன்றைப் போதினுள் உள்ளான்
    பொருப்பின் இடையான்  நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியில் உள்ளான் 
    காளத்தியான் அவன் என் கண்ணுளானே

பொருள்

மனத்து அகத்தான் = மனதினுள் இருக்கிறான்

தலை மேலான் = தலைக்கு மேலே இருக்கிறான்

வாக்கினுள் உள்ளான் = சொல்லில் இருக்கிறான்

வாயாரத் = வாயால்

தன் அடியே = தன்னுடைய திருவடிகளையே

பாடும் = பாடும்

தொண்டர் இனத்து = தொண்டர் கூட்டத்தின்

அகத்தான் = நடுவில் இருப்பான்

இமையவர் = இமைக்காமல் இருக்கும் தேவர்கள்

தம் சிரத்தின் மேலான் = அவர்களுடைய தலைக்கு மேலே இருக்கிறான்

ஏழு அண்டத்துக்கு = ஏழு அண்டங்களுக்கு

அப்பாலன் = வெளியே இருக்கிறான்


இப்பாற் = இந்தப் பக்கம்

செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற

புனத்து அகத்தான் = புனைகளுக்கு மத்தியில் இருக்கிறான்

நறுங்கொன்றைப் = நல்ல கொன்றைப்

போதினுள் = பூவில்

உள்ளான் = இருக்கிறான்

பொருப்பின் இடையான் = மலையின் மேல் இருக்கிறான்

நெருப்பிடையான் = நெருப்பில் இருக்கிறான்

காற்றி னுள்ளான் = காற்றில் இருக்கிறான்

கனத்தகத்தான் = மேகத்தில் இருக்கிறான்

கயிலாயத்து உச்சியில் உள்ளான் = கைலாயத்தின் உச்சியில் இருக்கிறான்

காளத்தியான் = திருக்காளத்தி என்ற ஊரில் இருக்கிறான்

அவன் என் கண்ணுளானே = அவன் என் கண்ணில் இருக்கிறான்.



அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் என்று பெரிய பட்டியயல் தருகிறார். படித்து முடித்தவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது ?

பெரிசா ஒன்றும் இல்லை. எல்லோரும் சொல்லுவதுதான். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறான்.

சரி. அதை அறிந்து கொண்டு என்ன செய்வது. இருக்கட்டும் என்று நாம் நம் வேலையை பார்க்கப் போய் விடுவோம். அந்தப் பாடல் நமக்குள் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

நாவுக்கரசர் போன்ற பெரியவர்கள் இப்படி ஒரு பாடலை ஏன் எழுதுகிறார்கள்.  நமக்கு பயன் இல்லாத ஒன்றை அவர்கள் சொல்லுவார்களா ?

சொல்லவே மாட்டார்கள். அப்படி என்றால் அதில் என்னதான் இருக்கிறது.

ஆழ்ந்து சிந்திப்போம்.


"மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான் "

அதாவது மனம், வாக்கு, காயம் (உடல் , இங்கே தலை)  என்ற மூன்றிலும் இருக்கிறான். நம் மனத்தில், நாம் பேசும் பேச்சில், நாம் நினைக்கும் எண்ணத்தில் இருக்கிறான். 

நாம் பேசும் பேச்சில் இறை தன்மை இருக்கிறதா ? நல்லதைப் பேசுகிறோமா ? உயர்ந்தவற்றை பேசுகிறோமா ? அன்போடு பேசுகிறோமா ? நம் பேச்சில் கருணை இருக்கிறாதா ?  

நல்லவற்றை சிந்திக்கிறோமா ? நம் சிந்தனையில் அன்பும், கருணையும், அருளும் இருக்கிறதா ? 

நம் உடலை இறைவன் கோவில் கொண்டிருக்கும் இடமாக நினைக்கிறோமா ? அப்படி நினைத்தால் மற்றவர்களின் உடலும் இறைவனின் கோவில் கொள்ளும் இடம்தானே. அந்த உடலுக்கு தீங்கு செய்யும் எண்ணம் வருமா ? கொலை, கற்பழிப்பு போன்ற உடல் சார்ந்த தீங்குகள் ஏன் நிகழுகிறது ?  அனைத்து உடலும்  இறைவன் வாழும் கோவில் என்று நினைத்தால் 

- உயர்ந்தவன், தாழ்ந்தவன், 
- பணக்காரன், ஏழை 
- படித்தவன், படிக்காதவன் 
- தீண்டத் தகாதவன் , தகுந்தவன் 

என்ற பாகுபாடுகள் வருமா ?

கோவிலை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ அப்படி இந்த உடலையும்  வைத்திருக்க வேண்டும். 

உடல், உள்ளம், பேச்சு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்.  இந்த ஒரு வரியை விரித்துச் சொன்னால் , ஒரு புத்தகமே எழுதலாம். 


"வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர் இனத்து அகத்தான்"

இறைவன் அடியார்கள் மத்தியில் இருக்கிறான். அப்படி என்றால் என்ன ?  ஏதாவது ஒரு அடியார் கூட்டத்திற்கு போய் , அங்கே இறைவன் இருக்கிறானா என்று  பார்க்க முடியுமா ?

அது அல்ல அர்த்தம்.

தீயவர்கள் மத்தியில் இருந்தால் , தீய எண்ணங்களே தோன்றும். மது அருந்தலாமா, புகை பிடிக்கலாமா என்பது பற்றிய சிந்தனைகளே தோன்றும். சிந்தனை வராவிட்டாலும், நம்மை அறியாமலேயே அது போன்ற செயல்களில்  இறங்கி விடுவோம். சூழ்நிலை அப்படி.

அடியவர்கள் மத்தியில் இருந்தால்  இறை சிந்தனை இருக்கும். உயர்ந்த சிந்தனைகள் இருக்கும். மனம் வேறு ஒன்றை நினைக்காது. அந்த சிந்தனைகள் நம்மை இறைவனிடம் சேர்க்கும் அல்லது அவனை நமக்கு காண்பித்துத் தரும்  எனபது அர்த்தம்.

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

என்பார் மணிவாசகர். நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, நடிப்புக்காக கூட அடியார்கள் மத்தியில் போய் இருந்தால் , பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல நமக்கும் நல்லது கிடைக்கும்.

போக வேண்டும். அவ்வளவுதான்.


இன்னும் எழுத ஆசைதான். படிக்க உங்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை......

யாராவது நாலு பேர் , மேலும் படிக்க பொறுமை இருக்கிறது என்று கூறினால், மேலும் எழுத  ஆசை